ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் யார்? ரேஸில் குதித்த மக்கள் ராஜன்! சீட் வாங்க சென்னையில் முகாம்!
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்க அக்கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தீவிரமாக காய்நகர்த்தி வருவதோடு சீட் வாங்காமல் ஊருக்கு வரமாட்டேன் என சபதமெடுத்து சென்னையில் முகாமிட்டுள்ளார்.
1993ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து வருவதாக ஒரு பெரிய புரோஃபைல் தயார் செய்து, அதை கே.எஸ்.அழகிரியின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறார்.
இதனிடையே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குடும்பத்தில் ஒருவருக்கு சீட் கொடுப்பதா அல்லது கட்சியின் மாவட்ட தலைவரான மக்கள் ராஜனுக்கு சீட் தருவதா என தீவிர டிஸ்கஷன் நடத்தி வருகிறார் கே.எஸ்.அழகிரி.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானதை அடுத்து அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்துகிறது தேர்தல் ஆணையம். இதையடுத்து இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் யாரை வேட்பாளராக களமிறக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மற்றொரு மகன் சஞ்சய் சம்பத் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என கூறப்படும் நிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் கோதாவில் குதித்துள்ளார்.

சென்னையில் முகாம்
சென்னையில் மூன்று நாட்களாக முகாமிட்டுள்ள மக்கள் ராஜன், 1993ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சிக்காக தாம் செய்த பணிகளை ஒரு பெரிய புத்தகமாக போட்டுக் கொண்டு வந்திருப்பதோடு கட்சிக்காக பல ஆண்டு காலம் உழைத்த விவரங்களை கே.எஸ்.அழகிரியின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே ஈரோடு கிழக்குத் தொகுதியை எதிர்பார்த்து நேர்காணல் வரை சென்றவர் மக்கள் ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோட்டில் ராஜீவ்காந்தி பெயரில் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார்.

யாருக்கு சீட்
மக்கள் ராஜனை போலவே ஈபி ரவியும் சீட் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குடும்பத்திலேயே ஒருவருக்கு சீட் கொடுப்பதா அல்லது கட்சியின் மாவட்ட தலைவரான மக்கள் ராஜனுக்கு சீட் தருவதா என தீவிர டிஸ்கஷன் நடத்தி வருகிறார் கே.எஸ்.அழகிரி. குறிப்பாக வேட்பாளர் விவகாரத்தில் திமுக தலைமையின் எண்ணவோட்டம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப கே.எஸ்.அழகிரி விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாமதம் வேண்டாம்
வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் தாமதிக்க வேண்டாம் என்பது கூட்டணிக் கட்சியான திமுகவின் அறிவுறுத்தலாக உள்ளது. இதனிடையே தமிழகத்தில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பும் பெயரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தான் முறைப்படி அறிவிப்பு வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications