இறையன்புவின் அண்ணன்.. மோடியின் சாய்ஸ்.. குஜராத் நிலநடுக்க மீட்பு பணி ஹீரோ.. யார் இந்த திருப்புகழ்?
சென்னை: சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தமிழக தலைமைச் செயலாளர் வெ இறையன்புவின் மூத்த சகோதரர் ஆவார்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றால் சென்னையில் கடந்த வாரம் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னையில் சிறு மழை பெய்தாலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கிவிடுவதால் போக்குவரத்து பாதிப்பு, மக்களின் இயல்பு நிலை பாதிப்பு, பொருட் சேதம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதற்கு நீர் நிலைகளை ஆக்கிரமித்து பல வீடுகள் கட்டப்பட்டதாக ஒரு காரணம் இருந்தாலும் சாலைகளை அமைப்பதிலும் போதிய தொழில்நுட்பத்தையும் புவியியல் சார்ந்த விஷயங்களையும் பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.
சென்னையில் வெள்ளம் சூழாமல் தடுக்க.. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் சூப்பர் டீம்!
சென்னை
கடந்த வாரம் பெய்த மழையால் சென்னையின் பல இடங்களில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்தது. மேலும் சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து தடைபட்டது. சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில் அடுத்த மழைக்கு தண்ணீர் தேங்காத சென்னையாக இது மாற வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை மக்கள் முன்வைக்கிறார்கள்.
மழை நீர் தேங்குதல்
இதை கருத்தில் கொண்டு சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. யார் இந்த திருப்புகழ் என ஆராயும் போது அவர் தமிழக தலைமைச் செயலாளர் வெ இறையன்புவின் ரத்த பந்தம் என தெரியவந்தது. அவர் இறையன்புவின் மூத்த சகோதரர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருப்புகழ்.
குஜராத் மாநிலம்
இவர் தேசிய பேரிடர் மேலாண்மையில் இந்தியாவில் பட்டம் பெற்றார். 1991 ஆம் ஆண்டு குஜராத் மாநில ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். குஜராத் மாநிலத்தில் 2001 ஆம் ஆண்டு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது மீட்பு பணிகளை மிகவும் துரிதமாக நடத்திக் காட்டியவர். அப்போது குஜராத்தின் முதல்வராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அவரின் செயலாளராக பதவி வகித்த திருப்புகழ் நிலநடுக்க மீட்பு பணிகளை துரிதமாக கையாண்டார். இவரது யுத்தியால் பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
பிரதமர் மோடியின் குட்வில்
இதனால் திருப்புகழ் இன்று வரை பிரதமர் மோடியின் குட்வில் புக்கில் இடம்பெற்றுள்ளார். குஜராத் மாநிலத்தில் முதல்வராக மோடி பதவி வகித்த போது கடந்த 2005 - 2006 ஆம் ஆண்டு வரை அவரின் செயலாளராக இருந்தவர் திருப்புகழ். குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த பல்வேறு பேரிடர் மீட்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றியவர்.
நேபாள நிலநடுக்கம்
இவர் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் சிறப்பு ஆலோசகராக அந்நாட்டுக்கு அவர்களாகவே அழைத்ததன் பேரில் களப்பணியாற்றினார். தமிழகத்தில் புயல் பாதிப்பு மற்றும் வறட்சிப் பாதிப்புகளை பார்வையிடும் குழுவின் தலைவராக தமிழகத்துக்கு வந்தவர். இந்த நிலையில் நிலநடுக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை திறமையாக கையாண்ட திருப்புகழ் சென்னை வெள்ளத் தடுப்பு ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளது பலரது பாராட்டுகளையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.