டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியது ஏன்? கைதான விக்னேஷ் யார்? வெளியான திடுக் தகவல்
சென்னை: சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய வழக்கில் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் தமிழகத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை டாக்டர்கள் சங்கம் அறிவித்து போராட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் தான் கைதான விக்னேஷ் யார்? அவர் ஏன் டாக்டரை கத்தியால் குத்தினார்? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் பாலாஜி. இவர் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் இன்று காலையில் மருத்துவமனைக்கு வந்த நபர் அவரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்த தகராறு முற்றவே கோபமடைந்த அந்த நபர் கத்தியை எடுத்து டாக்டர் பாலாஜியை சரமாரியாக குத்திவிட்டு ஓடினார்.இதில் ரத்த வெள்ளத்தில் பாலாஜி சரிந்த நிலையில் தப்பியோடிய நபரை அங்குள்ள காவலர்கள் விரட்டி பிடித்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். சென்னை கிண்டி, சேலம் உள்பட பல இடங்களில் டாக்டர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
கத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டாக்டர் பாலாஜியின் உடல்நலம் பற்றி விசாரித்தார். மேலும் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்திய நபரை கிண்டி போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கைதான நபரின் பெயர் விக்னேஷ். இவர் தான் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தி உள்ளார். இவர் தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள காமராஜர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர். இவரது தந்தை 3 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். தாய் பிரேமா மற்றும் 2 சகோதரருடன் விக்னேஷ் வசித்து வருகிறார். இவரது தாய் பிரேமா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு கிண்டி மருத்தவமனையில் கீமோதெரபி சிகிச்சை பெற்றுள்ளார். 6 முறை கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பிரேமாவின் உடல்நலம் குணமாகவில்லை. பிரேமாவை அவர் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதற்கிடையே தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய் பிரேமாவை அனுமதித்துள்ளார். அங்கு டாக்டர் ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார். அதாவது முதலில் பிரேமாவுக்கு சிகிச்சை என்பது சரியாக வழங்கப்படவில்லை. தற்போதைய உடல்நல பிரச்சனைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சிகிச்சை சரியாக கொடுக்காதது தான் காரணம் என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் கோபமடைந்த விக்னேஷ் இன்று காலையில் தனது வீட்டில் இருந்தே கத்தியை எடுத்து வந்து கிண்டி மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை சந்தித்து அவரை குத்தியுள்ளார். பாலாஜியின் உடலில் 7 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications