விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன்.. திமுகவின் அடுத்த துணை பொதுச் செயலாளர் யார்? ரேஸில் மூவரா?
சென்னை: திமுக துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகிவிட்டதால் அடுத்ததாக அந்த பதவிக்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல் திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் சுப்புலட்சுமி ஜெகதீசன், பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்கடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு திமுக பொதுச் செயலாளராக இருந்த க அன்பழகன் மறைவையொட்டி பதவிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
அந்த வகையில் ஏற்கெனவே துணை பொதுச் செயலாளர்களாக உள்ள ஐ பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோருடன் பொன்முடி, ஆ ராசா ஆகிய இருவர் கூடுதலாக நியமிக்கப்பட்டனர். எனவே திமுக துணை பொதுச் செயலாளர்கள் 5 ஆக உயர்ந்தது. இந்த துணை பொதுச் செயலாளர் பதவிகளில் ஒரு பெண்ணையாவது நியமிக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் விதியாகும்.

கருணாநிதி காலத்தில்..
கருணாநிதி காலத்திலிருந்தே மிக முக்கிய நிர்வாகியாக வலம் வந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். இவர் தற்போது திமுகவிலிருந்தும் அரசியில் இருந்தும் விலகுவதாக அறிக்கை விடுத்துள்ளார். இதனால் திமுகவின் அடுத்த துணை பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விலகல் கடிதம்
கடந்த ஆகஸ்ட் மாதமே விலகல் கடிதத்தை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடம் சுப்புலட்சுமி கொடுத்துவிட்டதாக கூறும் நிலையில் அப்போது முதலே அந்த பதவிக்கு யாரை நியமிப்பது என்ற யோசனையில் இருந்ததால் திமுக தலைமை சுப்புலட்சுமியின் கடிதத்தை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

ஆலோசனை
தற்போது அவரது கடிதம் வெளியான நிலையில் அடுத்த பதவி யாருக்கு என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பெண் ஒருவருக்கே அந்த பதவி கொடுக்கப்பட வேண்டும் என்பதால் இந்த வாய்ப்பு மூவரில் ஒருவருக்கு கிடைக்கும் என கூறுகிறார்கள். கனிமொழி, கீதா ஜீவன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய மூவரில் ஒருவரை தலைமை நியமிக்கக் கூடும் என தெரிகிறது.

அடுத்த துணை பொதுச் செயலாளர் யார்
இந்த பதவி மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி என்பதாலும் மிக சீனியரான சுப்புலட்சுமி விலகிவிட்டதால் அவரை எப்படியும் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அப்பதவியிலேயே அமர வைக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. அதாவது சீனியர் ஒருவரையே கட்சியில் தக்க வைத்து கொள்ள முடியவில்லை என்ற பெயர் ஸ்டாலினுக்கு கிடைத்துவிடும் என்பதால் எப்படியும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது. இன்னும் சிலர் மேற்கண்ட மூவரில் யாருக்குமே துணை பொதுச் செயலாளர் பதவி கிடையாது. பூங்கோதை ஆலடி அருணாவுக்கே கொடுக்கப்படும் என்ற தகவலும் வருகிறது. எனவே அடுத்த துணை பொதுச் செயலாளர் பதவியை ஸ்டாலின் யாருக்கு கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications