போச்சு.. "கழட்டி"விட போறாங்களாமே அவரை.. டைமும் குறிச்சாச்சு.. மேலிடம் வரை எகிறிடுச்சாம் மேட்டர்..!
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைமை எப்போது மாற்றப்படும் என தகவல் கசிந்துள்ளது
சென்னை: அடுத்த காங்கிரஸ் கட்சி தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், கேஎஸ் அழகிரி மீதான அதிருப்திகள் மேலிடத்துக்கு பறந்தபடியே உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அந்தந்த மாநில தலைவர் பதவிகளை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரே தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான மாற்றம் குறித்த பேச்சும் பரபரத்து வருகிறது.. ஏற்கனவே ஒருமுறை இப்படி ஒரு பேச்சு எழுந்தது.
காங்கிரஸ் கட்சி ஏன் மோசமான நிலைமையில் இருந்து, படுமோசமான நிலைமைக்கு பாய்ந்து செல்கிறது தெரியுமா?
அத்தைக்கு மீசை
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியானது குறித்து செய்தியாளர்கள் கேஎஸ் அழகிரியிடமே ஒருமுறை கேட்டனர்.. அதற்கு அவர், "அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பார்க்கலாம்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த பேச்சு மீண்டும் சத்தமாக ஒலிக்க துவங்கி உள்ளது.. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் கே எஸ் அழகிரியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியும் கதர்களை சுற்றி கொண்டிருக்கிறது.
கிருஷ்ணசாமி
இப்படிப்பட்ட நேரத்தில்தான், தமிழக காங்கிரஸ் அழகிரியின் ஆதரவாளர்களுக்கும், கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரனின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த உருட்டுக்கட்டை மோதல்களால் ரத்தகளறியானது சத்தியமூர்த்திபவன்... நெல்லை மாவட்ட காங்கிரஸ்காரர்களுக்கு இழைக்கப்பட்ட பதவி அநீதிகளுக்கு நியாயம் கேட்க வந்த சொந்த கட்சிக்காரர்களையே அடித்து உதைக்க அழகிரி உத்தரவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அழகிரிக்கு எதிராக, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈவிகேஸ் இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட முன்னாள் நிர்வாகிகள் பலரும் கொதித்தெழுந்தனர்.
ரத்தக்களறி
அழகிரிக்கு எதிராக இவர்கள் ஓரணியில் திரண்டனர். அதனை வெளிப்படுத்தும் வகையில், அழகிரி தலைமையில் நடந்த நிகழ்ச்சிகளை புறக்கணிக்கவும் செய்தனர்.. இதன் அடுத்தகட்டமாக, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனகார்கேவை சந்தித்து புகார் தந்தனர்.. சத்தியமூர்த்திபவனில் நடந்த மோதல்களுக்கு அழகிரிதான் காரணம் என்றும், கட்சி அலுவலகத்துக்துக்குள் ரவுடிகளை வரவழைத்தது அழகிரிதான் என்றும், காங்கிரசை வேறுபாதையில் வளர்த்து வருகிறார் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.. அழகிரி பதவியேற்றது முதல், கட்சியில் என்னென்ன ஊழல்கள் நடந்துள்ளது என்பதையும் ரிப்போர்ட்டாக தந்தனர்.
புதுசா தலைவர்
அதுமட்டுமல்ல, அழகிரி, கட்சியை சாதி சங்கமாக நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவர் தலைவர் பதவியில் இருந்தால் கட்சிக்குள் அதிருப்திகளும் ஒத்துழையாமையும்தான் அதிகரிக்கும். அது தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். அதனால், அழகிரியை மாற்றிவிட்டு, புதிய தலைவரை நியமியுங்கள். இப்போதே நியமித்தால் தான் தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் இருக்கும் நிலையில், கட்சியை ஆரோக்கியமாக புதிய தலைவர் கொண்டு செல்ல நேரம் சரியாக இருக்கும் என்றெல்லாம் புகாராக கொண்டு சென்றனர்.
சிதம்பரம் ரகசியம்
இதனையெல்லாம் கேட்ட கார்கே, "சத்தியமூர்த்திபவனில் நடந்துள்ள மோதல்கள் விரும்பத்தகாதவை. இதனை நான் அங்கீகரிக்கமாட்டேன். அழகிரியிடமும் தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளரான தினேஷ்குண்டுராவிடமும் விசாரிக்கிறேன். நடந்த சம்பவங்களுக்கு யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்திருந்தார். பின்னர், சத்தியமூர்த்திபவனில் நடந்த மோதல் குறித்து கார்கேவுக்கு ரிப்போர்ட் ஒன்றை அனுப்பினார் தினேஷ்குண்டுராவ்..
முணுமுணுப்பு
அதில், "இரு தரப்பும் தவறு செய்திருக்கிறது, அதேசமயம் தலைவர் அழகிரி நினைத்திருந்தால் இப்படி ஒரு மோதல்கள் நடக்காமல் தவிர்த்திருக்க முடியும்" என்றும் சுட்டிக்காட்டினார் தினேஷ்குண்டுராவ். இப்படிப்பட்ட சூழலில்தான், 2 நாளைக்கு முன்பு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம், கார்கே ஆலோசனை நடத்தி இருக்கிறார்.. அரைமணி நேரம் இந்த சந்திப்பு நடந்துள்ளது.. தமிழக காங்கிரஸ் செயல்பாடுகள் பற்றி சிதம்பரத்திடம் கார்கே கருத்து கேட்டிருக்கிறார்.
நாடார் புள்ளிகள்
அதற்கு சிதம்பரம், "துடிப்பு மிக்கவர்களாக பார்த்து நியமித்தால்தான் கட்சிக்கு நல்லது" என்று கருத்து சொன்னதாக தெரிகிறது. எனவே, புகார்கள் தலைமை வரை சென்றுவிட்டதால், அழகிரி பதவி நீக்கம் செய்யப்படுவது உறுதி என்றும், அநேகமாக பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தான் இந்த மாற்றம் இருக்கும் என்றும் சொல்கிறார்கள். இதனிடையே இன்னொரு கொசுறு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.. ரூபி மனோகரனின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை காங்கிரஸ் ரத்து செய்துவிட்டாலும், நாடார் சமூகத்து புள்ளிகள் அவரை விடுவதாக இல்லையாம்..
ஹேப்பி ரூபி
இது தொடர்பாக தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கம் சார்பில் தென் மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.. அவைகளில், "காங்கிரஸ் மேலிடமே! காங்கிரஸின் வாக்குவங்கி நாடார்கள். ரூபி மனோகரன் எம்எல்ஏ-வை அவமானப்படுத்தியதற்கு பரிகாரமாக அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி வழங்குக".. என்றெல்லாம் அந்த போஸ்டர்களில் வாசகங்கள் பளிச்சிடுகின்றனவாம்.. ரூபி ஆதரவு வட்டாரம் இதை ரசிப்பதாகவும் தெரிகிறது.
தம்பி வா
போஸ்டர் என்றதும், இன்னொரு நிகழ்வையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. சில நாட்களுக்கு முன்பு, "தம்பி வா தலைமையேற்க வா" என்று எம்பி கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததும் அனைவராலும் கவனிக்கப்பட்டது.. கடந்த நவம்பர் 16ம் தேதி இவருக்கு பிறந்தநாள் என்பதால், இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால், அதையெல்லாம் பார்த்தால் பிறந்தநாள் போஸ்டர் போலவே தெரியவில்லை.. "தலைமையேற்க வா" என்றால், எந்த பதவிக்கு இவரை அவரது ஆதரவாளர்கள் அழைக்கிறார்கள்? என்ற சந்தேகம் கிளம்பியது. போதாக்குறைக்கு, அந்த போஸ்டரில் ப.சிதம்பரம் போட்டோவும் இடம்பெற்றிருந்தது.
கொட்டை எழுத்து
"தமிழகத்தின் எழுச்சி நாள்" என்று அந்த போஸ்டரில் கொட்டை எழுத்துக்களில் பளிச்சென அச்சிட்டிருந்தது, காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் அந்த போஸ்டர் கடுப்பை கிளப்பி விட்டது.. கார்த்திக்கை விட சீனியர்கள், கட்சிக்குள் இருக்கிறார்கள் என்றாலும், சிபாரிசு எதையும் செய்துவிடுமோ? தங்களின் அடிமடியிலேயே வாரிசுகள் "கை" வைத்து விடுவார்களோ? என்ற கலக்கம் இந்த சீனியர்களை சூழ்ந்து வருகிறது.
ஹேப்பி பாஜக
இப்படிப்பட்ட சூழலில், "துடிப்பு மிக்கவர்களாக பார்த்து நியமித்தால்தான் கட்சிக்கு நல்லது" என்று ப.சிதம்பரம் கார்கேவிடம் கருத்து தெரிவித்துள்ளதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.. அப்படியானால் அடுத்த தலைவர் யார்? அழகிரி அவ்வளவு லேசில் தன் பதவியை விட்டு தந்துவிடுவாரா? தெரியவில்லை.. ஆனால், எம்பி தேர்தலுக்கு பாஜக வேகம் எடுத்து வரும்நிலையில், காங்கிரஸ் இன்னமும் உட்கட்சி பூசலில் சிக்கி வருவது, கதர் தொண்டர்களிடையே வருத்தத்தையும், கலக்கத்தையும் கவ்வி வருகிறது.. இதையும் தங்களுக்கு சாதகமாக பாஜக பயன்படுத்தி கொள்ளவே செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை!!