கோயம்பேடு 66 ஏக்கர்! விஜய் அரசு என்ன முடிவு எடுக்கும்? மால்லா? பூங்காவா? அன்புமணி அழுத்தம்!
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலைய நிலத்தில் வணிக வளாகங்களுக்குப் பதிலாக 66 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.. சென்னையின் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் இந்த இடம் பூங்காவாக மாற்றப்படுவதே மிகச்சரியான முடிவாக இருக்கும் , வணிக ரீதியான திட்டங்களை அரசு கைவிட்டு இயற்கைச் சூழலை உருவாக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.. பாமக தலைவர் அன்புமணி சொல்வது சாத்தியமா?
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் பயன்பாடு விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அந்த இடத்தில் வணிக வளாகங்கள் அமைக்க அரசு திட்டமிட்டு வருவதற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு - மால்
அங்குள்ள 36 ஏக்கர் நிலத்தில் வணிக மால் அல்லது திரையரங்குகள் அடங்கிய வணிக வளாகம் அமைப்பது தொடர்பான திட்டங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) தயாரித்துள்ளது. ஆனால், இத்தகைய வணிக நோக்கிலான திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஏற்கனவே மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னையில் இத்திட்டம் கூடுதல் நெரிசலை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சென்னையின் பசுமைப் பரப்பு மற்றும் தனிநபர் பசுமை நிலப்பகுதி என்பது வெறும் 1.03 சதுர மீட்டராக மட்டுமே உள்ளது. இது மற்ற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்பதை சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பிரம்மாண்ட பூங்காக்கள் இருப்பதை உதாரணம் காட்டியுள்ளார்.
அதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆம்னி பேருந்து நிலையப் பகுதி உள்ளிட்ட மொத்தம் 66 ஏக்கர் நிலப்பரப்பை ஒன்றிணைத்து, ஆசியாவிலேயே மிகச்சிறந்த ஒரு பசுமைப் பூங்காவை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, இந்த பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டால் அண்ணா நகர், கோயம்பேடு, அம்பத்தூர், வடபழனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பெரும் பயனடைவார்கள்.
கோயம்பேட்டில் மால் - நடைப்பயிற்சி, உடற்பயிற்சி
தற்போதைய வாழ்க்கை முறையில் அதிகரித்து வரும் நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் போன்ற பாதிப்புகளைக் குறைக்க இத்தகைய பொதுவெளி இடங்கள் மிக அவசியம். மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஆரோக்கியமான சூழலில் பொழுதைக் கழிக்கவும், நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யவும் இந்த 66 ஏக்கர் நிலம் வரப்பிரசாதமாக அமையும். எனவே, வணிக ரீதியான லாபத்தை விடுத்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்று தனது அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணியின் இந்த அறிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. கோயம்பேடு பேருந்து நிலைய நிலத்தில் அரசு வணிக மால் அமைப்பதால் அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, அப்பகுதி ஒரு நவீன வணிக மையமாக உருவெடுக்கும் என்பது சாதகமான விஷயம்தான்,
அரசுக்கு கிடைக்கும் வருவாய்
மெட்ரோ மற்றும் பேருந்து போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு அது ஒரு நவீன மையமாக அமையும் என்பதிலும் சந்தேகமில்லைதான்.
ஆனால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசால் திணறி வரும் கோயம்பேட்டில் இத்தகைய பெரிய கட்டிடங்கள் வருவது சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதகமாக அமையும் என்றே தெரிகிறது.. இதனால் மக்கள் திறந்தவெளியில் சுவாசிக்கக் கூட இடமில்லாத நிலை ஏற்படுவதுடன், சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் வெப்பநிலையிலும் எதிர்மறையான மாற்றங்கள் உருவாகும் அபாயம் உள்ளது..
சாதகங்கள் என்னென்ன?
ஒருவேளை அன்புமணியின் கோரிக்கை ஏற்கப்பட்டால், கான்கிரீட் காடாக மாறிவரும் சென்னைக்கு நடுவே 66 ஏக்கரில் ஒரு மிகப்பெரிய நுரையீரல் போன்ற பசுமைப் பரப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்ல, மக்கள் நடைப்பயிற்சி செய்யவும், குழந்தைகள் விளையாடவும் போதிய இடமில்லாத நிலையில், அவரின் இந்தத் திட்டம் நிறைவேறினால் லட்சக்கணக்கான மக்களின் உடல்நலம் மற்றும் மனநலம் மேம்படும்.. அரசு லாபத்தை மட்டுமே பார்க்காமல் மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்பட வேண்டும் என்ற அழுத்தத்தை இவரின் அறிக்கை உருவாக்கியுள்ளதால், வருங்கால தலைமுறைக்குச சுத்தமான காற்றும் ஆரோக்கியமான சூழலும் கிடைக்க இது ஒரு தொடக்கமாக அமையும்..
சுருக்கமாக சொல்லப்போனால், லாபத்தை விட மக்களின் ஆரோக்கியமே முக்கியம், சென்னையை ஒரு வாழத்தகுந்த பசுமை நகரமாக மாற்ற உதவும் என்பதே அன்புமணியின் நிலைப்பாடாகும்.. ஆனால் அரசு செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications