சென்னை மக்களே... யார் யாருக்கு ரூ.6000 நிவாரணம் ? தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.. விவரம்
சென்னை: சென்னை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் எந்தெந்த வட்டங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்பது குறித்தும் அரசு அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி, "கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, வெள்ள நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலமாக ரொக்கமாக வழங்கப்படலாம் என்றும், இதனை முறையாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் டோக்கன்களை முன்னதாகவே கூட்டுறவுத் துறை மூலம் வழங்கப்படலாம் என்றும், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் உயர் அலுவலர்களைப் பொருத்த வரையில், அவர்கள் தங்களின் பாதிப்பு விபரங்களையும், கணக்கு எண் ஆகியவற்றை தெரிவித்து நிவாரணத்தொகையினை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படலாம் எனவும். விரிவான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் பாதிப்புக்குள்ளான கீழ்க்கண்ட நான்கு மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின்படி இந்த நிவாரணம்
பின்வருமாறு வழங்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்:-

(அ) சென்னை மாவட்டம்: அனைத்து வட்டங்கள்:
(ஆ) செங்கல்பட்டு மாவட்டம்: தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்:
(இ) காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும். ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்:
(ஈ) திருவள்ளூர் மாவட்டம்: (1) பொன்னேரி (2) கும்மிடிப்பூண்டி, (3)ஆவடி, (4) பூவிருந்தவல்லி (5) ஊத்துக்கோட்டை (6) திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள்.
4. இந்த புயல் மற்றும் அதிகனமழை காரணமாக சில பகுதிகளில் ATM மையங்கள் இயங்காததாலும், பயனாளர்களின் வங்கிக் கணக்கு எண்களை சேகரித்து நிவாரணம் வழங்க காலதாமதம் ஆகும் என்பதாலும், மேலும் பாதிக்கப்பட்ட பலர் தங்களது ATM அட்டை. வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இழந்திருக்கக்கூடும் என்பதாலும், அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் நிவாரணத்தொகை ரொக்கமாக வழங்கலாம் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

5. இந்நிலையில், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்களின் கருத்துருவை கவணமுடன் பரிசீலித்து அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது:-
(அ) மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட/ இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள்/ பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு (மேலே பத்தி-3ல் குறிப்பிட்டுள்ள வட்டங்கள்/ வருவாய் கிராமங்கள்) நியாயவிலைக் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கும் முறையை பின்பற்றி ரூ.6000/- (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு/ மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் விண்ணப்பங்களை சமர்பித்து உரிய இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications