தேனியைக் குறி வைக்கும் இரு வாரிசுகள்.. ஈபிஎஸ் டிக் அடிக்கப் போவது யாருக்கு?
- கோயா
சென்னை: லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியைப் பெற அதிமுகவில் இரு வாரிசுகளுக்கு இடையே கடும் மோதல் மூண்டுள்ளதாம். இதில் யாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சீட் தரப் போகிறார் என்பது பெரும் சுவாரஸ்யமாக மாறியுள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மொத்தம் 1737 பேர் மனு செய்துள்ளனர். இந்த விருப்ப மனு மூலம் மட்டும் ரூ. 4.5 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளனராம்.
விருப்ப மனு பெறுவது கடந்த 4- ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது. ஜெயலலிதா இல்லாத தேர்தலை அதிமுக எதிர்கொள்வதால், போட்டியிட விரும்புவோரின் எண்ணிக்கை குறைவாகத் தான் இருக்கும் என நினைத்தார்களாம் ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும். ஆனால் அவர்களே எதிர்பார்க்காத வண்ணம் விருப்ப மனு தாக்கல் அதிமுகவினர் குவிந்துவிட்டார்களாம்.
ஒரு தொகுதிக்கு இரு வாரிசுகள்
இதில் தேனி தொகுதி வேட்பாளர் யாராக இருக்கும் என்பதுதான் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளதாம். இந்தத் தொகுதிக்கு பலரும் விருப்ப மனு செய்திருந்தாலும் 2 பேர் பெயர்கள்தான் பலமாக அடிபடுகின்றன.
ஜக்கையன் மகன்
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஒருபக்கம் தேனியைக் குறி வைத்துள்ளாராம். மறுபக்கம் எஸ்டிகே ஜக்கையனின் மகன் குறி வைத்துள்ளாராம். இருவரும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ரவீந்திரநாத் நேரடியாக செய்யாமல் மறைமுகமாக மனு கொடுத்துள்ளார்.
ஜக்கையயன் மகன் நம்பிக்கை
இக்கட்டான நேரத்தில் டி.டி.வி.அணியில் இருந்து வெளியேறி அதிமுகவில் தனது தந்தை ஜக்கையன் ஐக்கியமானதால் ஈ.பி.எஸ்.கைவிடமாட்டார் என நினைக்கிறாராம் அவர்.
வாரிசே வேண்டாமே
ஆனால் அதிமுகவில் ஒரு பிரிவினர் மறுபடியும் எதுக்கு வாரிசு அரசியல் என்று முனுமுனுக்க ஆரம்பித்துள்ளனராம். வாரிசு அரசியல் புகாரை முன் வைத்து தான் டி.டி.வி.யை ஒதுக்கியுள்ளோம். இந்நிலையில் மறுபடியும் வாரிசுக்கு சீட் கொடுத்தால் மக்கள் மத்தியில் எப்படி பிரச்சாரம் செய்ய முடியும், நாமும் வாரிசு அரசியலை தான் வளர்ப்பதாக மக்கள் நினைக்க மாட்டார்களா என ஒரு தரப்பு முனுமுனுக்கிறதாம்.
சரித்தான்!