ரஜினியை விட அதிமுகவுக்கே அதிக மக்கள் ஆதரவு.. திமுக நம்பர் 1.. சரவெடி சர்வே!
சென்னை: தமிழகத்தில், அறிவிக்கப்படாத தேர்தல் காலம், துவங்கிவிட்டது. புதிதாக களத்திற்கு ரஜினிகாந்த் வருவதாக அறிவித்ததும், தேர்தல் ஜுரமே துவங்கிவிட்டது. ரஜினி பேட்டி.. அந்த பேட்டிக்கு போட்டி பேட்டிகள் என, அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது அரசியல் களம்.
இப்படியான சூழ்நிலையில்தான், திமுகvsஅதிமுக என்ற நிலை மாறி, ரஜினியால் மும்முனை போட்டி நிலவும் என்று பலரும் எதிர்பார்த்து கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், 'ஒன்இந்தியா தமிழ்' சார்பில் ஒரு கருத்துக் கணிப்பு முன் வைத்தோம்.

யார் ஆட்சி அமையும்
தமிழகத்தில் யாருடைய ஆட்சி அடுத்து அமையும்? என்ற கேள்வி கேட்டு, 8 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டது. அதில், திமுக ஆட்சி, அதிமுக ஆட்சி, பாஜக ஆட்சி, மக்களாட்சி அமைஞ்சா சரி, ரஜினி ஆட்சி, சீமான் ஆட்சி, கமல்ஹாசன் ஆட்சி, 3வது அணியின் ஆட்சி, இவ்வாறு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டது.

திமுகவுக்கு அமோக ஆதரவு
பெரும்பாலான வாசகர்கள், திமுக ஆட்சிதான் வரப்போகிறது என அடித்துச் சொல்லியுள்ளனர். அதுவும் 55.31 சதவீதம் பேர் கூறியுள்ளனர். பாதிக்கும் மேற்பட்டோரின் ஒரே சாய்சாக திமுக உள்ளது. 2வது இடம் எதிர்பார்த்தபடி அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. ஆனால் வித்தியாசம் ரொம்பவே அதிகம். வெறும் 12.79 சதவீதம் பேர் அதிமுக ஆட்சி வரும் என்று கருதுகிறார்கள்.

தாமரை மலருமாம்
பாஜக ஆட்சி என்றும் நமது வாசகர்களில் சிலர் கருத்து கூறியுள்ளனர். சுமார் 2 சதவீதம் அதாவது 1.98 சதவீதம் பேர் தாமரை மலரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். மக்களாட்சி அமைஞ்சா சரி என்ற மனநிலையில் 6.22 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.

அதிமுகவைவிட ரஜினிகாந்த்துக்கு குறைவு
பெரிய ஆரவாரத்தோடு கட்சி ஆரம்பிப்பு அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த்துக்கு எதிர்பார்த்த ஆதரவை வாசகர்கள் தரவில்லை. 12.24 சதவீதம் பேர் மட்டுமே ரஜினி ஆட்சி அமையும் என்று கூறியுள்ளனர். அதாவது அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பவர்களை விடவும் குறைவுதான் ரஜினிக்கு கிடைத்துள்ளது.

சீமான், கமல்ஹாசன்
சீமான் ஆட்சி என 6.19 சதவீதம், கமல்ஹாசன் ஆட்சி என 2.88 சதவீதம், 3வது அணி ஆட்சி என 2.4 சதவீதம் பேர் அடித்துக் கூறுகிறார்கள். மக்களின் மனநிலை என்ன என்பதை எடுத்துக் காட்டுவதை போல அமைந்துள்ளது இந்த கருத்துக் கணிப்பு.












Click it and Unblock the Notifications