தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிட்டால்.. அதிமுகவின் அதிரடி வேட்பாளர் யார் தெரியுமா?
தூத்துக்குடியில் வெல்வது கனிமொழியா, சரத்குமாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தூத்துக்குடியை கைப்பற்றப்போவது யார்? அதிமுகவா? திமுகவா? என்ற மோதல் இப்போதே ஆரம்பித்துவிட்டது.
திமுக நாடாளுமன்றக் குழு தலைவராகவும், திமுக மகளிரணி தலைவியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார் கனிமொழி. தற்போது 2-வது முறையாக எம்பியாக உள்ளார். விரைவில் அவர் உட்பட அனைத்து எம்பிக்களின் பதவிக்காலமும் முடிய போகிறது.
இதனால் வரும் தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளும் வியூகம் அமைத்து வருகின்றன. ஆனால் கனிமொழியை பொறுத்தவரை, தூத்துக்குடி எம்பி தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கிறோம் என தென் மாவட்ட பிரமுகர்கள் கடந்த ஆகஸ்ட் மாதமே அவருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

தலைமை முடிவு செய்யும்
ஆனால் அதன்பிறகு கருணாநிதி மரணம், கனிமொழியை கட்சியிலிருந்து ஓரங்கட்டப்படுகிறார் போன்ற வந்த தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. இந்த நிலையில் தூத்துக்குடி கனிமொழிக்குதான் என்பது ஓரளவு உறுதியாகி உள்ளது. இதுகுறித்து கனிமொழியிடமே செய்தியாளர்கள் கேட்டதற்கு, தலைமைதான் அதனை முடிவு செய்யும் என்று நாசூக்காக சொல்லி ஒதுங்கி கொண்டார்.

ஊராட்சி சபை
ஆனால் விரைவில் திமுக சார்பாக ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு கனிமொழி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ஊராட்சி சபை கூட்டங்களில் பங்கேற்க போகிறார்.

நலத்திட்ட பணிகள்
ஏற்கனவெ கனிமொழி தனது நாடாளுமன்ற உறுப்பினர் தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் பல்வேறு பணிகளை செய்திருக்கிறார். குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட எண்ணற்ற பணிகளை கனிமொழி செய்து தந்திருப்பதால் தூத்துக்குடியில் அவருக்கு ஆதரவு நிறையவே உள்ளது.

சரத்குமார் தேர்வு?
இதனால் அதிகமாக குழம்பி உள்ளது அதிமுக தரப்பு. ஏனெனில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்கள் ஆளும் தரப்பு மீது கடும் அதிருப்தியில் உள்ளது. கனிமொழியை எதிர்த்து போட்டியிட தகுதியான நபர் யாராக இருக்கும் என்றுதான் மண்டை காய்ந்து கடைசியாக சரத்குமாரை தூத்துக்குடிக்கு ஒதுக்கலாமா என யோசித்து வருகிறது.

சிலம்பம் சுழட்டினார்
போன தேர்தலில் சரத்குமார், தூத்துக்குடியில் வாக்குகளை பெற என்னென்னவோ செய்து பார்த்தார். ரோட்டில் வந்து கொண்டிருந்து ஒரு தொண்டர் பைக்கில் திடீரென ஏறி உட்கார்ந்து கொண்டு வாக்கு சேகரித்தார். பிறகு சிலம்பாட்டம் ஆடிக் கொண்டிருந்த மைதானத்திற்கு சென்று, தானும் ஒரு சிலம்பம் எடுத்து சுழட்டி சுழட்டி அடித்து வாக்கு கேட்டதையெல்லாம் அந்த மாவட்ட மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

மீண்டும் சரத்குமார்
இந்த நிலையில் சரத்குமார் பெயர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு அடிபடுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்புகூட தமிழக முதல்வரை சரத்குமார் சந்தித்ததன் பின்னணி இது என்றுகூட கூறுகிறார்கள்.

வாக்குகளை பிரிப்பார்
ஒருவேளை கனிமொழியை முழுவதுமாக எதிர்த்து வெற்றி பெறாவிட்டாலும் குறைந்த பட்சம் வாக்குகளையாவது சரத்குமார் பிரிக்க உதவுவார் என்று ஆளும் தரப்பு கணக்கு போடுகிறது. பார்ப்போம்... தூத்துக்குடியில் வெல்ல போவது கனிமொழியா? சரத்குமாரா?












Click it and Unblock the Notifications