தமிழகம் என்று விஜய் வைத்தது ஏன்?.. ரிசல்ட் வந்த மறுநாளே இதை செய்வோம் பாருங்க.. தவெக நிர்வாகி ஷாக்
சென்னை: 2024 எங்கள் இலக்கு கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் நிற்க மாட்டோம். 2026 தேர்தலில் நிற்போம். 2024 லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு தர மாட்டோம். அவர் கட்சிக்கு வருவதை உறுதி செய்துவிட்டார் என்று தமிழக வெற்றி கழக செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவரின் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் கட்சியின் கொடி கலர் அடர் சிவப்பு + மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தில் இந்த பெயர் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்சி தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கைதான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.
ஜெகதீஸ்வரன் ஒன்இந்தியா: இது தொடர்பாக தமிழக வெற்றி கழக செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், 2024 எங்கள் இலக்கு கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் நிற்க மாட்டோம். 2026 தேர்தலில் நிற்போம். 2024 லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு தர மாட்டோம். அவர் கட்சிக்கு வருவதை உறுதி செய்துவிட்டார்.
எங்களின் அரசியல் பயணம் எதை நோக்கி செல்லும் என்பதையும் சொல்வோம். அரசியல் மாற்றத்திற்கான கட்சியாக இது இருக்கும். வெறும் ஆட்சி மாற்றத்திற்கான கட்சியாக இது இருக்காது. வெறும் ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்ல மாட்டோம். எங்களுடைய கொள்கைகளை அதில் விளக்கமாக கூறி உள்ளோம். ஜாதி, மத , இன வேறுபாடு பார்க்காமல், மக்களுக்கு நல்ல ஆட்சியை கொடுக்கும் கட்சியாக இது இருக்கும்
அரசியலை அவர் தொழிலாக பார்க்கவில்லை. அவர் முழு நேரமாக சினிமா வேலைகளை முடித்துவிட்டு அரசியலுக்கு வர போகிறார். அவர் பல காலமாக மக்கள் பணியை செய்கிறார். இனி நேரடியாக முழுமையாக மக்கள் பணிகளை செய்ய போகிறார். இப்போது இதை அறிவிக்க வேண்டிய என்ன காரணம் என்ற கேள்வி இருக்கலாம்.
2024 லோக்சபா தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம். இருந்தாலும் தேர்தல் முடிவு வந்த மறுநாளே.. நாங்கள் களப்பணிகளை செய்ய போகிறோம். நேரடியாக களத்தில் இறங்கி வேலைகளை செய்ய போகிறோம்.
கட்சியில் தமிழகம் என்ற வார்த்தையை பலரும் கேட்கின்ற்னர். ஆளுநர் தமிழகம் என்று சொன்னதற்கு பின் உள்நோக்கம் இருக்கிறது. அது விமர்சனங்களை சந்தித்தது. அந்த புரிதல் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் அந்த அரசியலை செய்யவில்லை.
விஜய் ஏற்கனவே அம்பேத்காரை படி, பெரியாரை படி, காமராஜரை படி என்று சொல்லி இருக்கிறார். அப்போதே இது பாஜக அரசியல் இல்லை என்று தெரியும். பெரியார் என்று சொன்னதால் பாஜக கோபம் அடைந்தது. அவர் நீட்டை எதிர்த்து உள்ளார். ஜல்லிக்கட்டை ஆதரித்து உள்ளார். அப்படி இருக்க பாஜகவிற்கு ஆதரவு என்று சொல்ல முடியாது . அப்படி இருக்க தமிழகம் - தமிழ்நாடு என்பதை பிரித்து பார்க்க வேண்டியது இல்லை.
தமிழக வாழ்வுரிமை கட்சியை வேல்முருகன் நடத்துகிறார். ஆனால் அவர் தமிழ்நாடு என்ற வார்த்தையை விரும்புவார். அப்படி ஒன்றுதான் இந்த பெயரும் கூட, என்று ஜெகதீஸ்வரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications