நாங்குநேரியில் போட்டியிட விரும்பிய பாஜக.. எப்படி சமாளித்தது அதிமுக.. இடையில் நடந்தது என்ன?
Recommended Video
சென்னை: நாங்குநேரியில் போட்டியிட பாஜக விரும்பிய நிலையில் அதிமுக அந்த தொகுதியை விட்டுக்கொடுக்காமல் வேட்பாளரை களம் இறக்கி உள்ளது. இதன் பின்னணியில் உள்ள காரணங்களை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தின் நெல்லை மாவட்டம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானது. இங்குள்ள தொகுதிகளில் எப்போது எந்த கட்சி வெல்லும் என்பதை அவ்வளவு எளிதாக யாராலும் கணிக்க முடியாது.
இந்த நிலையில்தான், நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதி எம்பியாக வெற்றி பெற்றதால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
செல்வாக்கு அதிகம்
இதன் காரணமாக நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவும் தனக்கு இத்தொகுதியில் செல்வாக்கு அதிகம் என்பதால் போட்டியிட விரும்பியது.
செல்வாக்கை மீட்க
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாத நிலையிலும் மத்தியில் அசுரபலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இழந்த செல்வாக்கை மீட்கும் முயற்சியாக நாங்குநேரியில் போட்டியிட பாஜக விரும்பியது.
மெகா கூட்டணி பலம்
அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என மெகாகூட்டணி தன்னுடன் இருப்பதால் எளிதாக வெற்றி பெறலாம் என கணக்குபோட்டு பாஜக தலைமை நாங்குநேரியை அதிமுக தலைமையிடம் கேட்டு காய் நகர்த்தியது. ஆனால் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு இருந்தே இதற்கு அதிமுக பிடிகொடுக்கவில்லை.
செல்வாக்கை மீட்க
ஆனால் அதிமுக பாஜகவுக்கு நாங்குநேரியை தருவதில்லை என்ற முடிவில் இருந்திருக்கிறது. அதிமுக. கடந்த இடைத்தேர்தலில் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இப்போது இடைத்தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ள இரண்டும் திமுக கூட்டணி வென்ற இடங்கள் ஆகும். இந்த இரண்டு இடங்களையும் வென்று அதிமுகவின் செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்பதையும் திமுகவின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் அதிமுகவே நாங்குநேரியில் களம் இறங்க விரும்பியது.
நாசூக்காக சமாளித்தது
அத்துடன் மொழிப்பிரச்சனை, பொருளாதார மந்த நிலை பிரச்சனை என தற்போது உள்ள பிரச்சனைகளை பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆயுதமாக திருப்பும் என்பதால் அதிமுகவே நாங்குநேரியில் போட்டியிட்டு வெற்றி பெற முடிவு செய்திருக்கிறது. எனவே பாஜக தலைமையிடம் நாசூக்காக பிரச்சசனைகளை சொல்லி சமாளித்துள்ளது. அதன்பின்னரே அதிமுக தனது வேட்பாளரை நாங்குநேரிக்கு அறிவித்துள்ளது.