கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்!
கோயம்புத்தூர் மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமும், தினமும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாக்கி வரும் அவிநாசி சாலையின் போக்குவரத்து நெரிசலுக்குக் தீர்வாகவும் அமையவுள்ள மெகா மேம்பால விரிவாக்கத் திட்டத்திற்கு ஒரு வழியாகப் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
பல மாதங்களாக நீடித்து வந்த நிர்வாக ரீதியிலான இழுபறிகள் மற்றும் முட்டுக்கட்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) இந்தத் திட்டத்திற்கான மிக தடையில்லா சான்றிதழை (NOC) மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது.
இந்த அனுமதியைத் தொடர்ந்து, மாநில நெடுஞ்சாலைத் துறை தனது விரிவான திட்ட அறிக்கை (DPR - Detailed Project Report) தயாரிக்கும் பணிகளை வேகமாக துவங்கியுள்ளது.

பல மாத இழுபறிக்கு முற்றுப்புள்ளி
கோவையின் மிக முக்கியப் போக்குவரத்து பகுதியாக விளங்கும் அவிநாசி சாலையில், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை மேலும் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கும் இந்த மாபெரும் திட்டம், கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு நேரில் வந்திருந்த போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முறைப்படி அறிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் கடந்த போதிலும், இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) ஆகிய இரு முக்கிய அமைப்புகளிடம் இருந்து முறையான ஒப்புதல்கள் கிடைக்காததால், இத்திட்டப்பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் காகித அளவிலேயே முடங்கிக் கிடந்தது.
முட்டுக்கட்டை உடைந்த பின்னணி
இந்தத் திட்டத்திற்கான முதற்கட்ட அனுமதியை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சில மாதங்களுக்கு முன்பே வழங்கிவிட்ட போதிலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இறுதி ஒப்புதலுக்காக நெடுஞ்சாலைத் துறை நீண்ட நாட்களாகக் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஏனெனில், கோவையில் அமையவிருக்கும் புதிய மெட்ரோ ரயில் திட்டத்தின் அவிநாசி சாலைப் பாதையும், இந்த புதிய மேம்பாலத்தின் வடிவமைப்பும் (Alignment) ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டது.
மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது தூண்களின் இருப்பிடம் மற்றும் பாதையின் இறுதி வரைபடத்தை முடிவு செய்யாமல் இருந்ததால், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் சிறப்புத் திட்டப் பிரிவினால் இந்த 5 கி.மீ பாலத்திற்கான தூண்களின் வடிவமைப்பு மற்றும் பொறியியல் வரைபடங்களை இறுதி செய்ய முடியாமல் இருந்தது.
தற்போது மெட்ரோ நிர்வாகம் தெளிவான அனுமதியை வழங்கியுள்ளதால், இந்தத் திட்டக் குழப்பங்கள் அனைத்தும் முற்றிலுமாக விலகியுள்ளன.
5 கி.மீ தூர புதிய மேம்பால விரிவாக்கம்
தற்போது உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் வரை கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ள பிரம்மாண்ட பாலத்தின் தொடர்ச்சியாக இந்த புதிய விரிவாக்கப் பணிகள் அமையவுள்ளன.
கோல்டுவின்ஸ் / சின்னிம்பாளையம் பகுதியில் தொடங்கி நீலாம்பூர் வரை நீளவிருக்கும் இந்த 5 கிலோமீட்டர் புதிய மேம்பால உள்கட்டமைப்பு மூலம், கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் வாகனங்கள் எவ்வித போக்குவரத்துச் சிக்கலும் இன்றி வேகமாகப் பயணிக்க முடியும்.












Click it and Unblock the Notifications