ஒன்றிய அரசு என்று கூறியதால்தான்.. டிஸ்மிஸ் ஆனாரா பெங்களூரு புகழேந்தி? பாஜகவை கூலாக்க அதிமுக ஆக்ஷனா?
சென்னை: அதிமுகவில் இருந்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி நேற்று திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதற்கு பின்னணியில் பாமகவை கடுமையாக அவர் விமர்சித்தார் என கூறப்பட்டாலும் பாரதிய ஜனதா கட்சி கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
பெங்களூரு புகழேந்தி... ஜெயலலிதா காலத்தில் எப்போதாவது ஊடகங்களில் பேசப்பட்டவர்... சசிகலா சிறைக்கு போனது முதல் ஊடகங்களில் தினந்தோறும் பேசிக் கொண்டிருந்தார். சசிகலா, தினகரன் அணியின் நம்பிக்கைக்குரியவராகவும் பெங்களூரு புகழேந்தி வலம் வந்தார்.
வருத்தமெல்லாம் இல்லை.. ஆனா எடப்பாடி சிறைக்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.. புகழேந்தி காட்டம்
இதனாலேயே இவரது வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததும் உண்டு. ஒருகட்டத்தில் தினகரனுடன் மல்லுக்கட்டிக் கொண்டு வெளியேறினார். அப்போது தினகரனுக்கு எதிராக நிறைய பேசப் போகிறேன் என்றெல்லாம் குதித்தார். ஆனால் அப்படி ஒன்றும் பெரிய பரபரப்பை இந்த புகழேந்தியால் கிளப்பிவிட முடியவில்லை.
ஓபிஎஸ் அணி
பின்னர் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளராகவும் தன்னை காட்டிக் கொண்டார் புகழேந்தி. அண்மையில் சசிகலா விவகாரத்தில் கேபி முனுசாமி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டி கொடுத்திருந்தார் புகழேந்தி.
அன்புமணிக்கு எதிராக பேட்டி
அப்போதே புகழேந்திக்கு கட்டம் கட்டும் வேலையை எடப்பாடி பழனிசாமி கோஷ்டி தொடங்கிவிட்டது. ஆனால் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி, கொறடா விவகாரத்தில் முடிவு எட்டப்படாமல் இருந்ததால் காலநேரத்துக்காக காத்திருக்கவும் முடிவு செய்தது எடப்பாடி பழனிசாமி அணி. இந்த நிலையில்தான் ஓபிஎஸ்ஸை விமர்சித்தார் அன்புமணி என்பதற்காக காட்டமாக ஒரு பேட்டி கொடுத்தார் புகழேந்தி.
பாமகவுக்கு செல்வாக்கா?
அந்த பேட்டியில், பாமகவுக்கு வெறும் 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு இருக்கிறது; ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால்தான் அன்புமணியே ராஜ்யசபா எம்.பி.யானார் என கொந்தளித்தார் புகழேந்தி. இதனால் அதிமுக- பாமக கூட்டணியில் விரிசல் உருவாகும் நிலை உருவானது. இந்நிலையில்தான் நேற்று திடீரென பெங்களூரு புகழேந்தி, அதிமுகவில் இருந்தே அதிரடியாக நீக்கப்பட்டார்.
ஒன்றிய அரசு விவகாரம்
பாமகவை விமர்சித்ததுதான் புகழேந்தி நீக்கத்துக்கு காரணமா என அதிமுக மூத்த தலைவர்களிடம் பேசியபோது, அது மட்டுமே வெளியில் தெரிந்த காரணம். அன்புமணியை விமர்சித்த போது பேசிய புகழேந்தியிடம் திமுகவினர் ஒன்றிய அரசு என பேசி வருவது குறித்து கருத்து கேட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி சொன்னதைப் போல மத்திய அரசு என்றே அழைக்கலாம் என பட்டும்படாமலும் பதில் சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லாமல், ஒன்றிய அரசு என்பது சரிதான். ஆனால் இப்போது தேவை இல்லை என எடப்பாடியின் கருத்துக்கு எதிராக மறுப்பாக புகழேந்தி பேசியிருந்தார்.
நீக்கத்துக்கு காரணம் இதுதானாம்
இதனை கூட்டணி கட்சியான பாஜகவும் ரசிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி அணியும் இதுதான் சமயம் என கர்ஜித்தது. மேலும் அடுத்தடுத்து பாமக, பாஜக என கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்து வரும் புகழேந்தி மீது நடவடிக்கை எடுத்துவிடுங்கள் என பாஜகவின் சீனியர் தலைவர்கள் அதிமுக தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால்தான் அவரை நீக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது என்கின்றனர்.