ஃபோகசை திருப்பிய இபிஎஸ்-ஓபிஎஸ்.. உதயநிதிக்கு சுற்றி சுற்றி கேட் போட்ட அதிமுக! ப்ரமோஷன் தரும் திமுக
சென்னை: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை அதிமுகவின் டாப் தலைவர்கள் அடுத்தடுத்து தாக்கி பேச தொடங்கி உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் முழுக்க உதயநிதி ஸ்டாலினை மையமாக வைத்து அதிமுக பிரச்சாரம் செய்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. அதிமுக, திமுக, விசிக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. ஆளும் திமுக இதில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் மொத்தமாக எம்எல்ஏ, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களை களமிறக்கி உள்ளது.
இன்னொரு பக்கம் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இன்றி களமிறங்கும் அதிமுக தனது தனிப்பட்ட வாக்கு வங்கியை நிரூபிக்கும் வகையில் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அமைச்சரவையில் உதயநிதிக்கு ரெடியாகும் இலாக்கா.. அந்த முக்கிய துறையை கொடுக்க திட்டமா? உண்மை என்ன?
அதிமுக
இந்த நிலையில்தான் அதிமுக தலைவர்கள் பலர் தேர்தல் பிரச்சாரத்தில் முழுக்க முழுக்க உதயநிதியை குறி வைக்க தொடங்கி உள்ளனர். அதிமுகவின் டாப் தலைவர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட எல்லா மேடைகளிலும் ஓர் முறையாவது உதயநிதியை தாக்கி பேசி வருகின்றனர். நேற்று கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பாக பிரச்சாரம் செய்த அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், உதயநிதியை கடுமையாக தாக்கி பேசினார்.
ஓபிஎஸ் vs உதயநிதி
ஓபிஎஸ் தனது பிரச்சாரத்தில், . உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார். எங்களிடம் ரகசியம் இருக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் சொல்வோம் என்று கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்து 10 மாதம் ஆக போகிறது. உதயநிதி எதுவும் செய்யவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகதான். அவர்களின் ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
நாடகம்
இப்போது அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய போவதாக பொய் பிரச்சாரம் செய்து நாடகம் ஆடி வருகின்றனர் என்று ஓபிஎஸ் உதயநிதியை விமர்சனம் செய்தார். இன்னொரு பக்கம் சேலத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமியும் உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக சொன்னது. அது முழுக்க முழுக்க பொய்யான வாக்குறுதி. தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் மக்களுக்கு பொய்யான வாக்குறுதி கொடுத்தார். தன்னிடம் ரகசியம் இருப்பதாக கூறினார்.
இபிஎஸ் vs உதயநிதி
அவர் தனது ரகசியத்தை இப்போது பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்யலாமே... ஏன் செய்யவில்லை? அப்போது பிரச்சாரத்திற்கு வந்தவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. இப்போது அவரை காணவில்லை. அவரை பார்க்கவே முடியவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி உதயநிதியை விமர்சனம் செய்தார். இவர்கள் மட்டுமின்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் பிரச்சாரத்தில் உதயநிதியை குறி வைத்து பேசி வருகின்றனர்.
திமுக
திமுகவில் உதயநிதியை தலைவர்கள் முன்னிறுத்தி வருகின்றனர். உதயநிதிக்கு காட்சியிலும், அமைச்சரவையிலும் உயர் பதவிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில்தான், அதிமுக இவரை விடாமல் சுற்றி சுற்றி விமர்சனம் செய்து வருகிறது. அதிமுக டாப் தலைகளின் இந்த விமர்சனத்திற்கு உதயநிதியும் விடாமல் பதில் அளித்து வருகிறார். நான் ஓடி ஒளிந்து கொண்டேன்.. தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை என்றெல்லாம் கூறுகிறார்கள். அதெல்லாம் பொய். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இங்குதான் இருக்கிறேன்.
உதயநிதி பதில்
பெண்களுக்கு இலவச போக்குவரத்து வசதி, குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் உட்பட பல நலத்திட்டங்களை, வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். நீட் தேர்வுக்கு விரைவில் முடிவு கட்டுவோம். இதற்கான மசோதாவை மீண்டும் நிறைவேற்றி உள்ளோம். விரைவில் நீட் தேர்வில் இருந்து திமுக அரசு வாக்குறுதி அளித்தபடி விலக்கு பெறும் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். அதிமுக தலைகள் மாறி மாறி விமர்சனம் செய்து வரும் நிலையில்தான் உதயநிதியும் இதற்கு பதில் அளித்து வருகிறது.
ப்ரமோஷன்
இந்த நிலையில்தான் திமுக வட்டாரத்தில் இதை பற்றி விசாரித்ததில், அதிமுகவினர் உதயநிதியை தொடர்ந்து அட்டாக் செய்கிறார்கள். அவர் வளர்ந்ததை பார்த்த அதிமுகவினர் பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கின்றனர். விரைவில் அவருக்கு திமுகவில் ப்ரமோஷன் கூட வர போகிறது.. 2-3 மாதத்தில் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதை தெரிந்து கொண்டுதான் அதிமுகவினர் இப்போதே உதயநிதியை தாக்கி பேசி வருகிறார்கள், என்று அறிவாலய வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.