தொகுதிக்கு தொகுதி.. தெறிக்க விட்ட தேமுதிக.. ஓடி போய் விஜயகாந்தை பார்த்த டிடிவி தினகரன்! பரபர தகவல்
சென்னை: திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி விட்டு வந்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
தேமுதிக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய இரு கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்தாகிவிட்டது. தேமுதிகவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார் தினகரன்.
இரண்டாம் கட்ட தலைவர்களை அனுப்பி இத்தனை வேலையையும் முடித்திருந்தார் தினகரன். இப்படி அனைத்தும் முடிந்து விட்ட பிறகு விஜயகாந்தை நேரில் சந்தித்து உள்ளார்.

ஓடிச் சென்ற தினகரன்
என்னாச்சு.. விஜயகாந்த்தை பார்க்க திடீரென தினகரன் ஓடிச் சென்றது ஏன் என்று தேமுதிக வட்டாரத்தில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன: ஒவ்வொரு தேர்தலிலும் தேமுதிக ஏதாவது ஒரு கூட்டணியில் இருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம். ஆனால், இப்போது கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதால் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டோம்.

தனித்து நிற்க தயாரில்லை
இந்த நிலையில் தான், தனித்து போட்டியிட தயாரா என்று மாவட்ட செயலாளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகிய இருவரும் தொலைபேசியில் அழைத்து திடீரென கேள்வி கேட்டனர். இதனால் அதிர்ந்துபோனோம். பெரும்பாலானோர் அதற்கு "தெம்பு இல்லை" என்று தெரிவித்து விட்டனர்.

கூட்டணி தேவை
பல முனை போட்டி நிலவக்கூடிய இந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்து நின்றால், வேட்பாளர்கள் செலவிடுவதற்கு பணம் கிடையாது. வெற்றி பெற முடியாது என்று அவர்கள் அழுத்தந்திருத்தமாக சொல்லிவிட்டனர். எனவே, ஏதாவது ஒரு கூட்டணி கிடைத்துவிடாதா என்ற நிலைமைக்கு தேமுதிக போய்விட்டது. எனவே தான் புதிதாக கட்சி ஆரம்பித்த தினகரன் தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ள கூட, பிரேமலதா விஜயகாந்த் இறங்கிபோய் சம்மதம் தெரிவித்தார்.

தேமுதிக தொண்டர்கள் கொந்தளிப்பு
அந்த கால கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றபோது, தினகரன் கைகொடுத்தார். எனவே சேர்ந்து கொண்டோம். ஆனால், கட்சித் தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து அவர் பேசவில்லை. இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது மூத்த அமைச்சர்கள் நேரில் வந்து விஜயகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கூட நேரடியாக வந்து விஜயகாந்த்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

மரியாதை இதுவா
ஆனால் புதிதாக கட்சி துவங்கிய தினகரன், விஜயகாந்தை சந்திக்காமல் இருப்பது எப்படி சரியாகும்.. மதிப்புக் கொடுக்கவில்லை என்று சொல்கிறீர்கள்.. ஆனால் புதிதாக சேர்ந்த கூட்டணியில்.. அதன் தலைவர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லையே.. இது எப்படி மரியாதையாகும்.. என்ற கேள்விகள் நாலா பக்கங்களிலிருந்தும் எழத் தொடங்கின. இதனால் தர்மசங்கடத்தில் பிரேமலதா விஜயகாந்த் சிக்கிக்கொண்டார்.

குக்கிராமங்களிலும் தேமுதிக
இதுபற்றி டிடிவி தினகரனிடமும் மெல்ல மெல்ல தயங்கி சொல்லப்பட்டது. முதலில் தினகரன் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யப் போகும் இடங்களில் எல்லாம்.. அது சின்ன சின்ன கிராமமாக இருந்தாலும்.. தேமுதிக தொண்டர்கள் கட்சி கொடியுடன் வந்து வாழ்த்து கோஷம் போடுவதை தினகரன் நேரில் பார்த்தார். சின்ன ஊர்களிலும் விஜயகாந்துக்கு செல்வாக்கு இருக்கிறது, அந்த கட்சிக்கு கிளைகள் இருக்கிறது, கட்சி ரீதியாக அந்த அமைப்பு நமது கட்சியை விட பலமாக இருக்கிறது என்பதை அவரே நேரில் பார்த்து புரிந்து கொண்டார்.

விஜயகாந்த் செல்வாக்கு
விஜயகாந்த் மட்டும் ஆக்டிவாக இருந்தால் அவர் மிகப்பெரிய மூன்றாவது சக்தியாக உருவெடுத்து இருப்பார், அந்த அளவுக்கு கட்சிக்கு கட்டமைப்பு இருக்கிறது, விஜயகாந்த்துக்கு செல்வாக்கு இருக்கிறது, என்பதை புரிந்து கொண்டார். எனவே, விஜயகாந்தை சந்திக்க அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். அத்தோடு, பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேனையும் தினகரன் பரிசாக கொடுத்துள்ளார்.

கோவில்பட்டி கணக்கு
கோவில்பட்டி தொகுதியில் கணிசமாக நாயுடு ஜாதியினர் வாக்குகள் உள்ளன. முக்குலத்தோர் வாக்குகளுக்கு அடுத்தபடியாக, அங்கு நாயுடுகள் ஓட்டுக்கள் உள்ளன. அங்குதான் தினகரன் போட்டியிடுகிறார். விஜயகாந்தை அவர் சந்தித்து அதன் மூலமாக கோவில்பட்டியில் கணிசமாக உள்ள தேமுதிக வாக்குகள் தன்பக்கம் கண்டிப்பாக திரும்பும் என்று நம்புகிறார். கோவில்பட்டி மட்டுமல்லாது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான தேமுதிக வாக்குகள் இருப்பதை உணர்ந்து, திடீரென அவர் விஜயகாந்தை சந்தித்துள்ளார் என்கிறார்கள் அந்த தேமுதிக வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications