லட்டு ஸ்வீட் பாக்ஸும்.. சிரித்தபடி எடுத்த போட்டோவும்.. தவெக இப்படி பண்ணுதே! இதெல்லாம் வெரி ராங் ப்ரோ
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் எடுத்த நடவடிக்கை ஒன்று கடுமையான விமர்சனங்களை, விவாதங்களை சந்தித்து உள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அதிகாரிகள் இருக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதனால் இந்த வழக்கில் மேற்கொண்டு ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை செய்ய முடியாது. தற்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான SIT முக்கியமான பல ஆதாரங்களை திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இவர் திரட்டும் ஆதாரங்கள் விஜய்க்கு எதிராகவும் அவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது அந்த விசாரணை முடிவிற்கு வந்துள்ளது.
கடுமையான விவாதம்
இதற்கு இடையே தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் எடுத்த நடவடிக்கை ஒன்று கடுமையான விமர்சனங்களை, விவாதங்களை சந்தித்து உள்ளது. கரூர் துயரச் சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் நீதிமன்றக் காவலில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது கரூர் நீதிமன்றம்.
வழக்கு சிபிஐக்கு சென்றுள்ளது. இந்த உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து தவெகவினர் நீதிமன்றத்திற்கு வெளியே இனிப்பு வழங்கி கொண்டாடினர். வெளியே வந்த மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவருக்கும் லட்டு இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள். நேற்று மதியழகன், பவுன்ராஜ் இருவரும்.. கரூரில் பலியான யாருக்கும் அஞ்சலி செலுத்தவில்லை. மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலை கூட போடவில்லை. ஆனால் இனிப்பு மட்டும் எடுத்து கொண்டாடினார்கள்.
இன்னொரு பக்கம் தலைமறைவாக இருந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 17 நாட்களுக்கு பிறகு சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சிரித்தபடி போட்டோ
புஸ்ஸி ஆனந்த் 17 நாட்களுக்கு பிறகு நேற்றுதான் பனையூரில் தவெக கட்சி அலுவலகத்துக்கு வந்தார். முகத்தில் தாடி வளர்த்திருந்தார். ஆனால் சிரித்தபடி புகைப்படம் எடுத்தார். அவரை நிர்வாகிகள் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். நேற்று புஸ்ஸி ஆனந்த் யாருக்கும் அஞ்சலி செலுத்தவில்லை. மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலை கூட போடவில்லை.
ஆனால் கட்சி நிர்வாகிகளுடன் புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டார். அலுவலகத்துக்குள் புஸ்ஸி ஆனந்த் நுழைந்ததும் கதவு மூடப்பட்டது. அதன்பிறகு அவர் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு
கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் மாயமாகிவிட்டார்கள். ஒருவர் விடாமல் எல்லோரும் கிட்டத்தட்ட தலைமறைவாகி இருந்தனர். விஜய் மட்டும் இருக்கிறார். ஆனால் அவரும் கூட பனையூர் வீட்டில் தஞ்சம் அடைந்துவிட்டார். கட்சியின் முகமாக இருப்பவர் தலைவருக்கு அடுத்து பொதுச்செயலாளர்தான். ஆனால் அப்படிப்பட்ட புஸ்ஸி ஆனந்தே 2 வாரங்கள் தலைமறைவாக இருந்தார்.
ஆனால் இப்போது திரும்பி வந்த தலைவர்கள் யாரும்.. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சின்ன அஞ்சலி கூட செலுத்தாமல் இருப்பதும்.. சிறையில் இருந்து வெளியே வருவதை ஸ்வீட் எடுத்து கொண்டாடுவதும் .. தலைமறைவாகி திரும்பி வந்தவரை சிங்கம் என்று கொண்டாடுவதும் கடுமையான விவாதங்களை, விமர்சனங்களை கட்சிக்கு உள்ளேயே சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications