‛பிரியாணி மேன்’ யூடியூபர் கைது ஏன்? அபிஷேக் ரபி பற்றி சென்னை போலீஸ் தந்த முக்கிய விளக்கம்
சென்னை: ‛பிரியாணி மேன்' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் அபிஷேக் ரபியை சென்னை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது ஏன்? எதற்காக போலீசார் அவரை கைது செய்தனர்? என்பது பற்றி சென்னை பெருநகர போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
தற்போது பலரும் யூடியூப்களில் சேனல் தொடங்கி வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பிரபலமான யூடியூபராக அறியப்பட்டு வருபவர் தான் அபிஷேக் ரபி. இவர் பிரியாணி மேன் என்ற பெயரில் சேனல் நடத்தி வந்தார். இவர் திமுக தலைவர்களை கிண்டல் செய்தும் வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இத்தகைய சூழலில் தான் பிரபலமான யூடியூபர்களான இர்ஃபான் மற்றும் டெய்லர் அக்கா ஆகியோரை அபிஷேக் ரபி ஆபாசமாக பேசியதாக புகார் கிளம்பியது. இதில் இர்ஃபான் என்பவர் ஹோட்டல்களில் உணவு சாப்பிட்டு ரிவ்யூ செய்வார். டெய்லர் அக்கா என்பவர் ஜாக்கெட் உள்ளிட்டவற்றை தைத்து வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.
இவர்கள் 2 பேர் குறித்து அபிஷேக் ரபியின் விமர்சனம் விவாதமாகி யூடியூபர்கள் இடையேயான சண்டையாக மாறியது. இந்நிலையில் தான் திடீரென்று நேற்று அபிஷேக் ரபி தனது யூடியூப் சேனலில் லைவ் வீடியோ செய்தார். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியபடி இருந்தார். இருப்பினும் அவர் காப்பாற்றப்பட்டார். இத்தகைய சூழலில் தான் திடீரென்று அபிஷேக் ரபி சென்னை போலீசாரால் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டார். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுவும் பேசும் பொருளானது. இத்தகைய சூழலில் தான் அபிஷேக் ரபியை கைது செய்தது ஏன்? என்பது பற்றி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நேற்று (29.07.2024) சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டல கணினிசார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தேனாம்பேட்டையை சேர்ந்த பெண்மணி ஒருவர் புகார் அளித்தார். அதில் தினந்தோறும் காலையில் நடைபயிற்சி செய்யும் செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும் ஆபாசமான உடல்மொழி சைகை வீடியோ பதிவு செய்து அந்த காணொளியை யூடியூப்பில் பதிவவேற்றும் செய்துள்ள பிரியணி மேன் என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் அபிஷேக் ரபி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டு இருந்தார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் சட்டம், தகவல்தொழில்நுட்ப சட்டம், பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்வதை தடுக்கும் சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் அசைவு, சைகைகளை காட்டி, கொச்சை வார்த்தைகளுடன் யூடியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்த அபிஷேக் ரபி (வயது 29) என்பவரை நேற்று கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் எதிரி அபிஷேக் ரபி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications