"2 ஜாதிகள்.." அந்த நம்பிக்கையில் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியை களமிறக்க பிளான் செய்கிறதாதா பாஜக?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடலாம் என ரிப்போர்ட் தயாரிக்கப்பட்டதே தேவர், தேவேந்திர குல வேளாளர்கள் வாக்குகளை முழுமையாக நம்பித்தான் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடக் கூடும் என திடீரென தகவல்கள் பரவின. இதன் உண்மைத்தன்மையை தமிழ்நாடு பாஜகவினரும் உறுதி செய்யவில்லை. அதேநேரத்தில் சில சீனியர் தலைவர்களுக்கு ராமநாதபுரம் கிடைத்துவிடவே கூடாது என்பதற்காக தமிழ்நாடு பாஜகவின் கோஷ்டிகளே கிளப்பிவிட்ட வதந்தி இது என்றும் ஒருதரப்பு சொல்கிறது.
ஆனால் டெல்லி பாஜக வட்டாரங்களில் இது தொடர்பாக நாம் விசாரித்த போது, ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியோ அல்லது வேறு ஒருவரோ யார் போட்டியிடுகிறார்கள் என்பது தெரியாது. அதேநேரத்தில் ராமநாதபுரத்தில் பாஜக நிச்சயம் போட்டியிடும். அதற்கான சாத்தியங்கள் மிக அதிகம் என்கின்றன. அதாவது தமிழ்நாட்டின் சில தொகுதிகளில் பாஜக எப்படியும் வென்றுவிடும் என்கிற நினைப்பில் அக்கட்சி மேலிடம் இருக்கிறது. அந்த பட்டியலில் ராமநாதபுரம் தொகுதியும் இணைந்திருக்கிறது எனவும் கூறுகின்றனர்.
பிரதமர் மோடி போட்டியிடுவதாக சொல்லப்படும் ராமநாதபுரம் தொகுதி- இப்படியும் ஒரு சரித்திரம் இருக்கிறதே!
டெல்லி பாஜகவின் இந்த அதீத நம்பிக்கைக்கு என்ன காரணம் என கேட்ட போது, லோக்சபா தேர்தல்களில் பதிவான வாக்குகள், களநிலவரம் ஆகியவற்றை முன்வைத்துதான் இந்த முடிவுக்கு வந்திருக்கின்றனர் என சுட்டிக்காட்டுகின்றனர். ராமநாதபுரம் தொகுதியைப் பொறுத்தவரை தேவர்கள், தேவேந்திர குல வேளாளர்கள் பெரும்பான்மையினராக தீர்மானிக்கும் சக்தியினராக உள்ளனர். தற்போது தேவேந்திர குல வேளாளர்கள், பாஜக ஆதரவு நிலையில் உள்ளனர். பொதுவாக தேவர் ஜாதி வாக்குகள் அதிமுகவுக்கு அதிகம் கிடைக்கும். அதிமுக- பாஜக கூட்டணி அமையும் நிலையில் இயல்பாகவே அந்தக் கூட்டணி வெற்றி கூட்டணியாகிறது என்கின்றனர்.
உதாரணமாக 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில்
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியி நவாஸ் கனி போட்டியிட்டார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 4,69,943- 44.08%.
திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 3,42,821- 32.16%.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்கள் இல்லாமல் அமமுகவின் ஆனந்த் இத்தொகுதியில் போட்டியிட்டார். அவர் பெற்ற வாக்குகள் 1,41,806- 13.30%.
அதிமுக- பாஜக கூட்டணிக்கான வாக்குகள்; அமமுகவுக்கான வாக்குகள் இரண்டும் சுமார் 45% வாக்குகள். அதாவது திமுக கூட்டணியைவிட அதிகமான வாக்குகள். அதிமுக, பாஜக, அமமுக மூன்றுக்குமே ஒரே வாக்கு வங்கிதான். தேவர், தேவேந்திரர்கள் வாக்குகள்தான் இந்த மூன்று கட்சிக்குமானது. அதிமுக-பாஜக ஒரு அணியாகவும் அமமுக தனியாகவும் போட்டியிட்டதால் இத்தொகுதியில் எளிதாக திமுக கூட்டணி வெற்றியை அறுவடை செய்தது. ஆகையால் அதிமுக- பாஜக ப்ளஸ் அமமுக என இணைந்தால் நிச்சயம் வெற்றி உறுதி. இந்த கணக்கின் அடிப்படையில் பிரதமர் மோடி இங்கே போட்டியிட்டால், எளிதான ஒரு வெற்றி என கணக்குப் போட்டதாம் பாஜகவின் ஒருதரப்பு. இந்த கணக்கில்தான் சில உள்ளூர் பாஜக தலைவர்களும் எப்படியாவது ராமநாதபுரத்தில் போட்டியிடனும்; ஜெயிக்கனும்; மத்திய அமைச்சராகனும் என தவம் கிடக்கிறார்களாம். அப்படி எல்லாம் ஜெயிக்கவிடமாட்டோம் என சொந்த கட்சியினரே உள்ளடி வேலைக்கும் தயாராக இருக்கின்றனராம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.