அதிமுக புள்ளியின் திடீர் விலகல் - குடைச்சல் கொடுத்த அமைச்சர் உறவினர்.. எல்லாமே அந்த ‘சேகர்’ கையில்!?
சென்னை : நமது அம்மா நாளிதழ் ஆசிரியராகச் செயல்பட்டு வந்த மருது அழகுராஜ், அந்தப் பொறுப்பிலிருந்து வெளியேறியதற்குப் பின்னணியில் எஸ்பி வேலுமணியின் தீவிர ஆதரவாளர் இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடு என அறியப்பட்ட 'நமது அம்மா'வில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டதன் எதிரொலியாக அங்கிருந்து வெளியேறினார் மருது அழகுராஜ்.
அந்த நாளேடு அதிமுகவின் நாளேடு இல்லை என்றும், எஸ்.பி.வேலுமணியின் உறவினர் சந்திரசேகர் நடத்தும் நாளேடு என்றும், விளம்பர வருமானங்கள் கட்சிக்குச் செல்வதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார் மருது அழகுராஜ்.
பணம் கொடுத்தால் திமுக தலைவர் ஸ்டாலின்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர்.. டிடிவி தினகரன் நறுக்
நமது அம்மா ஆசிரியர்
அ.தி.மு.கவில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் சில நாட்களுக்கு முன்பு நீக்கப்ப்பட்டது. இதையடுத்து, நமது அம்மா நாளிதழின் ஆசிரியரான மருது அழகுராஜ் அப்பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில் திடீரென அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழின் ஆசிரியரே பதவி விலகியது அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
மருது அழகுராஜ்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல ஆண்டுகாலமாக உரை, அறிக்கைகள் எழுதிக் கொடுத்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதாவின் பல புகழ்பெற்ற பேச்சுகளுக்குப் பின்னணியாக இருந்தவர். மோடியா லேடியா, மக்களால் நான் மக்களுக்காகவே நான் ஆகிய ஜெயலலிதாவின் முழக்கங்களுக்கு மூளையாகச் செயல்பட்டவர் மருது அழகுராஜ். கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இவருக்கு போட்டியிடவாய்ப்பு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் திமுகவின் கே.ஆர்.பெரியகருப்பனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கோடநாடு கொலை
இந்நிலையில், நமது அம்மா நாளிதழ் பொறுப்பிலிருந்து விலகிய மருது அழகுராஜ், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கவிதை நடையிலான பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன்? முதலமைச்சராக 4 ஆண்டுகள் இருந்த பழனிசாமி கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய போதிய அக்கறை காட்டவில்லை. கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஜெயக்குமார் பகீர் குற்றச்சாட்டு
மருது அழகுராஜின் குற்றச்சாட்டு அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்துப் பேசுகையில், கூலிக்கு மாரடிக்கும் வேலையைத்தான் மருது அழகுராஜ் செய்துகொண்டுள்ளார். நமது எம்ஜிஆர் பத்திரிக்கையில் பொறுப்பாசிரியராக இருந்தபோது நிதி கையாடல் முறைகேட்டில் மருது அழகுராஜ் ஈடுபட்டார். நமது அம்மாவில் இணைந்த பின்னராவது ஒழுங்காக இருந்திருக்கலாம் அங்கேயும் நிதி முறைகேட்டில் மருது அழகுராஜ் ஈடுபட்டார். நமது அம்மா பத்திரிக்கை விளம்பர வருமானங்களை கணக்கில் வராமல் முழுமையாக எடுத்துக் கொண்டுள்ளார் எனக் குற்றம்சாட்டினார்.
ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டும் வேலை
ஆனால், மருது அழகுராஜ் தான் பத்திரிகை பொறுப்பில் இருந்து விலகியதற்கு என்ன காரணம் என விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரில் முதலில் ஓபிஎஸ் படம், இரண்டாவதாக ஈபிஎஸ் படம் போடுவதுதான் வழக்கம். ஆனால், அதை மாற்றச் சொன்னார்கள். நான் சம்மதிக்காதபோது, அவர்களே என்னை மீறி மாற்றிக் கொண்டார்கள். ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டும் வேலைகளைச் செய்தனர்.
எஸ்.பி.வேலுமணியின் உறவினர்
நமது அம்மா நாளிதழ் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடு என்று வெளியே சொல்லப்பட்டாலும், எஸ்.பி.வேலுமணியின் உறவினரான சந்திரசேகர் தான் நமது அம்மா நாளிதழை நிர்வகிக்கிறார். விளம்பர வருமானங்கள் கட்சிக்கு செல்வதில்லை. தினசரி 3 லட்சம் வருமானம் வந்தாலும், நான்கரை ஆண்டுகளில் எத்தனை கோடிகள் வந்திருக்கும். அது எதுவுமே கட்சிக்குப் போவதில்லை. யாரோ எடுத்துக்கொண்டு போனார்கள். இதைச் சுட்டிக்காட்டியதால் கட்டம் கட்டினார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
யார் இந்த சந்திரசேகர்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பிவேலுமணியின் வலதுகரமாகவும், நிழலாகவும் கருதப்படுபவர் வடவள்ளி சந்திரசேகர். எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சமீபத்தில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது அதிகம் அடிபட்ட பெயர் சந்திரசேகர். அந்த சோதனையில் மொத்தம் 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர், அதில் ஏ3 ஆக சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.