அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தது ஏன்? -வழக்கறிஞர் ஜி.தேவராஜன் பேட்டி
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணாமலை மீது முதலமைச்சர் வழக்கு தொடர்ந்தது குறித்து வழக்கறிஞர் ஜி.தேவராஜன் பேட்டி அளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ் புத்தாண்டு அன்று திமுகவின் ஊழல்களை வெளியடுவதாக கூறி அண்ணாமலை அன்று, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, திமுக எம்பி டிஆர் பாலு, முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் உள்பட பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதுடன், ஒரு லட்சம் கோடிக்கும் மேல் சொத்துக்களை சேர்த்திருப்பதாக குற்றம்சாட்டினார். முதல்வர் ஸ்டாலின் குறித்தும் அப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வைத்தார்.
இந்த விவகாரத்திற்கு தான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் . முதல்வர் முக ஸ்டாலின் சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இந்த வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர் ஜி.தேவராஜன் கூறுகையில், "தமிழ்நாட்டில் நல்லாட்சி நடத்திக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடந்த 14.04.2023 அன்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை அவர்கள் பத்திரக்கையாளர் சந்திப்பில் பல்வேறுபட்ட புகார்களை தெரிவித்தார்.
அவை அனைத்திற்கும் ஆதாரம் எதுவும் இல்லை. அவை அனைத்தும் முதல்வரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைப்படி இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் சார்பாக தாக்கல் செய்துள்ளோம். அதன்பிறகு இன்று விடுமுறை கால நீதிபதி உமாமகேஷ்வரி அவர்கள் 8 வாரம் கழித்து இந்த மனு விசாரணைக்கு வரும் என உத்தரவிட்டுள்ளார்" இவ்வாறு வழக்கறிஞர் ஜி தேவராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications