லாஸ்ட் சான்ஸ்.. குறுக்கே வந்த மலை! டெல்லிக்கு பறந்து ‘டாப்’ லீடர்களை சந்தித்த மாஜி.. மேட்டர் இதானா?
சென்னை : பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் டெல்லிக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் சில முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பொன்னாருக்கு வாய்ப்பு கிடைக்காது என பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், தனக்கான சீட்டை உறுதி செய்யவே டெல்லியில் முக்கிய சந்திப்புகளை பொன்.ராதாகிருஷ்ணன் நிகழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
2024 எம்.பி தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை புதியவருக்கு வழங்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு முக்கிய நிர்வாகியும், கன்னியாகுமரியில் தீவிரமாக களமாடத் தொடங்கி இருக்கிறார்.
இந்நிலையில், 'இதுதான் லாஸ்ட் சான்ஸ்.. இதை மிஸ் பண்ணிவிடக்கூடாது' என டெல்லியில் டைரக்டாக காய் நகர்த்தத் தொடங்கிவிட்டாராம் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
ஆ.ராசாவுக்கு “செக்”.. எல்.முருகனை களமிறக்கும் பாஜக! அனல் பறக்கும் நீலகிரி - அண்ணாமலையே சொல்லிட்டாரே
பாஜக டார்கெட்
பாஜக தலைமை, வரும் 2024 எம்.பி தேர்தலில் தமிழ்நாட்டில் கணிசமான இடங்களைப் பிடிக்க வேண்டும் எனத் தீர்மானமாக இருக்கிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 4 இடங்களைப் பிடித்த பாஜக, நம்பிக்கையோடு 2024 எம்பி தேர்தலுக்கு தயாராகி வருகிறது. 25 தொகுதிகளில் வெற்றி பெறுவது தங்கள் இலக்கு என பாஜக தலைவர்கள் கூறி வந்தாலும், 8 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் அதிரடியாக வியூகங்களை அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதையொட்டியே, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.
தலைவர்கள் விசிட்
மேலும், மத்திய அமைச்சர்கள் பலரும் தமிழ்நாட்டுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் சில அமைச்சர்களாவது தமிழ்நாட்டுக்கு விசிட் அடிக்கின்றனர். இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார். பின்னர், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவையும் சந்துத்துள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, சரபானந்தா சோனோவால் ஆகியோரையும் சந்தித்துப் பேசியுள்ளார் பொன்னார்.
டெல்லி சென்ற பொன்னார்
தமிழக பாஜகவில் சீனியர்கள் பலர், மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகின்றனர். இந்த மோதல் சமீப நாட்களாக வெட்ட வெளிச்சமாகி வரும் நிலையில், மூத்த தலைவரான பொன்னார் டெல்லிக்குச் சென்று மோடியையும், நட்டாவையும் சந்தித்துப் பேசியது பாஜக வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. பொன்னாரின் இந்த டெல்லி விசிட்டின்போது, தமிழக பாஜக தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு முக்கியமான நோக்கமும் இந்தச் சந்திப்புக்குப் பின்னணியில் இருக்கிறதாம்.
9ல் 2
முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன், 2014 தேர்தலில் பாஜக சார்பில் கன்னியாகுமரியில் வெற்றி பெற்றிருந்தார். தமிழ்நாட்டில் வென்ற ஒரே பாஜக வேட்பாளர் அவராக இருந்தார். அடுத்து 2019 தேர்தலில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். வசந்தகுமார் காலமான நிலையில் நடந்த இடைத்தேர்தலிலும் தோல்வியைத் தழுவினார். 1991 முதல் ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும் களமிறங்கி வந்தாலும் 1999 மற்றும் 2014 தேர்தல்களில் மட்டுமே வெற்றி வாகை சூடியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன். 5 முறை நாகர்கோவில் தொகுதியில் நின்று 1 முறை வெற்றியும், 4 முறை கன்னியாகுமரி தொகுதியில் நின்று ஒரு முறையும் வென்றுள்ளார் பொன்னார்.
வாய்ப்பு இல்லை?
இந்நிலையில், வரும் 2024 தேர்தலில் அவருக்கு சீட் கிடைப்பது கடினம் தான் என்ற நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. 2024 சீட் விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கையே ஓங்கி இருக்கும், அண்ணாமலை புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கவே திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. அதன்படி ஒரு முக்கிய நிர்வாகி, கன்னியாகுமரியை இப்போதே குறி வைத்துள்ளாராம். அவருக்கே அண்ணாமலையின் கண்ணசைவும் இருக்கிறதாம்.
லாஸ்ட் சான்ஸ்
இதனால் அதிர்ச்சியடைந்த பொன்.ராதாகிருஷ்ணன், தனக்கு இந்த முறை சீட் வேண்டும் என்று தலைமையை வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேர்தலில் சீட் வழங்கப்படாது என ஆட்சிமன்றக் குழு முடிவெடுத்துள்ளது. 70 வயதாகும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 2024 தேர்தல் தான் கிட்டத்தட்ட கடைசி வாய்ப்பு. 2029 தேர்தலின்போது அவருக்கு 77 வயதைக் கடந்துவிடும் என்பதால் அப்போது சீட் கிடைக்க வாய்ப்பே இல்லை. எனவே 2024 தேர்தல் தான் கடைசி வாய்ப்பு என்பதால், அதை மிஸ் செய்யக்கூடாது என தீவிரமாக இருக்கிறாராம் பொன்னார்.
பச்சைக்கொடி காட்டுமா டெல்லி?
அதையொட்டியே, டெல்லி தலைமையில் தனக்கு கன்னியாகுமரி சீட்டை உறுதி செய்யும் வகையில் அதிரடி மூவ்களைச் செய்து வருகிறார் எனகிறார்கள் பாஜக வட்டாரத்தினர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் திட்டங்களை மீறி, குமரி சீட்டை பொன்னார் கைப்பற்றுவாரா என்பதுதான் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்திருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. டெல்லி தலைமையை பொன்னாருக்கு பச்சைக்கொடி காட்டுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.