ரஜினிகாந்த்திடம் ஓடிச்சென்ற பிரபலம்.. "எடப்பாடியின் கேவலமான அரசியல்".. பாஜகவுக்கு பாஸ் ஆகுதா மெசேஜ்?
சென்னை: ஓபிஎஸ் திடீரென எதற்காக ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார்? என்ற யூகங்கள் ஒருபக்கம் வலுத்து வரும்நிலையில், ஓபிஎஸ் துவங்குவதாக சொல்லப்படும், அவரது தனிக்கட்சி குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.
ஒருபக்கம் மதுரை மாநாடு, இன்னொருபக்கம் பொதுக்குழு தீர்ப்பு என அடுத்தடுத்த வெற்றிகளில் திளைத்து கொண்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..

சிவப்பு கம்பளம்: போதாக்குறைக்கு "ஒரே நாடு, ஒரே தேர்தல்" முறைக்கு வலியவந்து பெருத்த தந்து சிவப்பு கம்பள வரவேற்பை தெரிவித்துவிட்டார். இதனால், எடப்பாடி விஷயத்தில், பாஜக மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறது. இதனால், அதிமுகவும் தெம்பாக காணப்படுகிறது.
ஆனால், பொதுக்குழு தீர்ப்பு வந்ததுமே, ஓபிஎஸ் கடும் அதிர்ச்சிக்கு ஆளானாராம்.. இந்த வழக்கில் அப்பீலுக்கு போவதாக சொல்லியிருக்கிறார்கள்.. ஆனால், இனி அப்பீல் போனாலும்கூட, சிவில் வழக்குகளில் உடனே தீர்ப்புகள் வரப்போவதுமில்லை.. மூத்த தலைவர் பண்ருட்டியார் தொடர்ந்து சொல்வதைபோல, மக்களை நோக்கி செல்வதுதான் ஒரே வழி என்பதையும் ஓபிஎஸ் புரிந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.
புரட்சி பயணம்: அதனாலேயே புரட்சி பயணத்தை தொடங்கியிருக்கிறார்.. ஆனால், அதற்கு முன்னதாக, போயஸ் கார்டனுக்கு சென்று ரஜினியை ஏன் சந்தித்து பேசினார் ஓபிஎஸ்? ஒருவேளை புரட்சிப்பயணத்துக்கான வாழ்த்தை, ரஜினியிடம் பெறுவதற்காக ஓபிஎஸ் சென்றிருக்கலாம் என்று அப்போதே சலசலக்கப்பட்டது. காரணம், தன்னை ஒதுக்கிவிடும் மனப்பான்மைக்கு பாஜக வந்தாலும் ஆச்சரியமில்லை என்பதால், அந்த கலக்கத்தை ரஜினியிடம் பகிர்ந்து கொண்டதாகவும், தகவல்கள் கசிந்தன.
ரஜினி அரசியல்: ரஜினி அரசியலுக்கு வருவது குறித்தும், ரஜினிக்கு ஆதரவுகளை தெரிவித்தும், ஏற்கனவே பலமுறை ஓபிஎஸ் பேட்டி தந்திருக்கிறார் என்றாலும், இந்தநேரத்தில் எதற்காக ரஜினியை சந்திக்க வேண்டும் என்ற சந்தேகம் கிளம்பியபடியே உள்ளது. இதுகுறித்துதான் நமக்கு சில தகவல்கள் பிரத்யேகமாக கிடைத்துள்ளன.
ரஜினிகாந்த்தை பொறுத்தவரை, பாஜக மேலிட தலைவர்களிடம் எந்நேரமும் நெருங்கியே இருப்பவர்.. வரக்கூடிய எம்பி தேர்தலில் என்னுடைய ஆதரவை பாஜகவுக்கு தருவேன் என்று கடந்த சட்டசபை தேர்தலின்போது, ரஜினியே கூறியிருந்தார். அதனால், இந்த முறை எம்பி தேர்தலில் ரஜினியின் பங்களிப்பு ஓரளவாவது இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. பாஜகவும், ரஜினியை ஏதாவது ஒருவிதத்தில் பயன்படுத்தி கொள்ளும் என்றும் நம்பப்படுகிறது.
ரஜினியின் ஆதரவு: ஆனால், பாஜகவுடன் ஏற்கனவே நெருக்கமாக இருக்கும் ஓபிஎஸ், ஏன் ரஜினியை சந்தித்தார் என்பதே ஆச்சரியமான சந்தேகமாக எழுந்தது.. ரஜினியை சந்திப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்பேயே ரஜினியை தொடர்புகொண்டு பேசினாராம் ஓபிஎஸ்.. " உங்களை சந்திக்க வேண்டும்" என கேட்டுள்ளார்.. அதற்கு ரஜினி, "சென்னை வந்ததும் சொல்கிறேன். சந்திப்போம்" என்று தெரிவித்திருக்கிறார். அதன்படியேதான் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சந்திப்பின்போது, "ஜெயிலர் படம் பார்த்தேன்... என்னம்மா ஸ்டைல் பண்ணியிருக்கீங்க? 1980-களில் இருந்த சுறுசுறுப்பை ஜெயிலரிலும் நான் பார்த்தேன்.. உங்களின் மாஸ் அப்படியே தான் இருக்கிறது. கொஞ்சம் கூட குறையல" என்றாராம் ஓபிஎஸ்.. அதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.
பாஜக: இதனையடுத்து அரசியல் ரீதியாக பேசிய ஓபிஎஸ், "பாஜகவுக்கு தப்பு தப்பான தகவல்களை தந்து, எனக்கு எதிராக பாஜகவை நம்ப வைத்திருக்கிறார்கள்.. எடப்பாடியின் அரசியல் கேவலமான அரசியலாக இருக்கிறது. அவரை நம்பினால் பாஜகவுக்கு மோசமான அனுபவம் தான் கிடைக்கும். வாய்ப்பிருந்தால் இதனை அவர்களுக்கு (பாஜக) பாஸ் பண்ணுங்கள். இது ரெக்யூஸ்ட் தான். கட்டாயம் இல்லை. நான் அரசியல் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். உங்களின் ஆதரவு எனக்கு வேண்டும் " என்று ஓப்பனாகவே ஓபிஎஸ் கேட்டுள்ளார்.
இதற்கு ரஜினி, "உங்களின் பயணம் வெற்றி பெறட்டும். வாழ்த்துகள் " என்று மட்டும் சொன்னாராம்.. இதைத்தவிர வேறு எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லையாம் ரஜினி.
என்னாகும்: அரசியல் பயணத்தை தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் செல்லும்போது, அந்தந்த பகுதியில் இருக்கும் ரஜினி ரசிகர்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இந்த சந்திப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறாராம் ஓபிஎஸ்ஸூம்.. இருந்தாலும், ஓபிஎஸ் சொன்ன அந்த மெசேஜ் டெல்லி போய் சேருமா?? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications