திடீரென விமானத்தில் வந்த அறிவிப்பை கேட்டு ஆச்சரியப்பட்ட சு.வெங்கடேசன்.. பைலட்டை அழைத்து பாராட்டு!
சென்னை: மதுரையில் இருந்து சென்னை சென்ற விமானத்தில், செம்பரம்பாக்கம் ஏரி பற்றி தமிழில் கூறிய விமானி வெங்கடேஷை பாராட்டியுள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.
தமிழ்நாட்டில் இருந்து இயங்கும் விமானங்களில் சில நேரங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். தமிழ்நாட்டைச் சேர்ந்த விமானிகள், தமிழில் அறிவிப்புகளை வெளியிடுவார்கள். அந்தவகையில், வெங்கடேஷ் என்ற விமானி, செம்பரம்பாக்கம் ஏரி பற்றி தமிழில் அறிவிப்பு வெளியிட்டது பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி., "உள்நாட்டு விமானத்தில் அவ்வப்பொழுது தமிழ் மொழியில் அறிவிப்பு செய்யப்படுவதைக் கேட்க முடியும். நேற்று மதுரையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் (6F7258) விமானியின் அறிவிப்பு வியப்பை உருவாக்கியது.
"இடது பக்கம் இருக்கும் பயணிகளின் பார்வைக்கு தெரிவது முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி" என்று ஒலித்தது அந்தக் குரல். காற்றின் வேகத்தை, வெயிலின் அளவைத்தான் விமானிகள் சொல்வார்கள். ஆனால் ஏரியின் வரலாற்றை வானிலே ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
அந்த குரலுக்கு சொந்தக்காரரான விமானி வெங்கடேசை அழைத்து வாழ்த்துச்சொன்னேன். வேள்பாரி வாசகர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். வாழ்த்துகள்." எனத் தெரிவித்துள்ளார். விமானியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் சு.வெங்கடேசன்.












Click it and Unblock the Notifications