விஏஓ தொடங்கி தாசில்தார் வரை.. அரசு அலுவலகங்கள் அடியோடு மாறும்.. தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை
சென்னை: 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது அதிகபட்சமாக 16 நாட்களில் முடிவெடுக்க உத்தரவிட்ட அரசு, சேவை பெரும் உரிமை சட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது ஏன் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
தமிழ்நாட்டில் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது அதிகபட்சமாக 16 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை பணியாளர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்..

ஆனால் அரசு இந்த விவகாரத்தில் சேவை பெரும் உரிமை சட்டத்தை அமல்படுத்தலாமே என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. இந்த சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றாமல் இருக்க என்ன காரணம் என்று கேள்விக்கு இன்று வரை விடையில்லை..
இது தொடர்பாக இரண்டு வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வைத்த கோரிக்கையில், "தமிழ்நாட்டில், அரசு சேவைகள் மக்களுக்கு விரைவாகக் கிடைப்பதில்லை. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை; எத்தனை முறை மனு கொடுத்தாலும் சரியான பதில் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் மனுக்களை உடனடியாக முடிக்கச் சொல்லி மேலிடம் அழுத்தம் தருவதால், புகார் மீது தற்காலிக நடவடிக்கை எடுப்பது அல்லது நடவடிக்கை எடுப்பதுபோல காட்டிக்கொள்வது காலங்காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அரசின் சேவைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் பெறுவதற்கு சேவை பெறும் உரிமைச் சட்டம் வழிவகுக்கிறது. இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது.
சேவை பெறும் உரிமைச் சட்டத்தின்படி அரசு, மக்களுக்கு அளிக்கும் சேவைகளுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவை கிடைக்கவில்லையென்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கவும், இந்த அபராதத் தொகை சேவை தாமதத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படவும், குறித்த காலத்துக்குள் சேவையளிக்கத் தவறிய அலுவலர்கள் தண்டிக்கப்படுவதற்கும்கூட வாய்ப்பு இருக்கிறது.
இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் கீழ்க்காணும் சேவைகள் உள்ளிட்ட அரசின் அனைத்துச் சேவைகளும் விண்ணப்பிக்கப்பட்ட நாளிலிருந்து குறிப்பிடப்பட்ட நாள்களுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
குடும்ப அட்டை -30 நாள்கள்,
வாரிசுச் சான்றிதழ் - 15 நாள்கள்,
நிலப்பட்டா - (முழுப் பட்டா 15 மற்றும் உட்பிரிவு பட்டா-30),
இறப்புச் சான்றிதழ் -7 நாள்கள்,
வருமான சான்றிதழ் - 15 நாள்கள்,
சாதிச் சான்றிதழ் -7 நாள்கள்,
மின் இணைப்பு - 14 நாள்கள்,
குடிநீர் இணைப்பு -7 நாள்கள்.
இதனால் அரசின் சேவைகள் எப்போது கிடைக்கும் என்று நாள்கணக்காக, மாதக்கணக்காக மக்கள் காத்திருப்பது தடுக்கப்படும். ஹரியானா, பீகார், புதுடெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் உட்பட 20 மாநிலங்களில் சேவை பெறும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது" என்று மக்கள் நீதிமய்யம் கோரிக்கை வைத்திருந்தது.
இதனிடையே இதே கோரிக்கையை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வலியுறுத்தி கேள்வி எழுப்பி இருந்தார். அவர் வெளியிட்ட பதிவில், "தமிழ்நாட்டில் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது அதிகபட்சமாக 16 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை பணியாளர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ஆணையிட்டிருக்கிறார். தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. பா.ம.க.வின் கோரிக்கைக்கு பயன் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.
பொதுமக்களுக்கான சேவைகள் 16 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ள தமிழக அரசு, அதையே பொதுச்சேவை பெறும் உரிமை சட்டமாக இயற்றுவதற்கு என்ன தடை? என்பதுதான் பா.ம.க.வின் கேள்வி. இதை கவுரவ பிரச்சினையாக அரசு பார்க்கக்கூடாது. பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தின் நோக்கமும், தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் நோக்கமும் ஒன்றுதான். ஆனால், இரண்டும் செயல்படுத்தப்படும் முறையில் பல வேறுபாடுகள் உள்ளன.
வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படவேண்டிய சேவைகள் 16 நாட்களுக்குள் வழங்கப்படவேண்டும் என்று அறிவித்ததன் மூலம் மக்களுக்கு குறித்த காலத்தில் சேவை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை அரசு வெளிப்படுத்தியுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றி பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் சேவை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications