நான் வர முடியாமல் போனதற்கு தவிர்க்க முடியாத சில காரணங்கள்.. வருத்தம் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை தொடங்கி வைப்பதாக இருந்த நிலையில், முதலமைச்சருக்கு பதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத்தகக் கண்காட்சியை தொடங்கிவைத்துவிட்டு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இதனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்னாச்சு என்ற விவாதம் நேற்றைய தினம் புத்தகக் கண்காட்சி நடைபெற்ற வளாகத்திலேயே ஆரம்பித்துவிட்டது. இதனிடையே முதலமைச்சரின் உரையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்த நிலையில், தாம் வர முடியாமல் போனதற்கு தவிர்க்க சில முடியாத சில காரணங்களே என்றும் மட்டும் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;

''தமிழ்நாட்டின் மிகப்பெரிய அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சியை நேரில் வந்து தொடங்கி வைக்க இருந்த நிலையில், தவிர்க்க இயலாத காரணங்களால் அது இயலாமல் போனதற்கு வருந்துகிறேன்.
புத்தகம் வெளியிடுவது, பதிப்பிப்பது, விற்பனை செய்வது என்பது மற்றும் ஒரு தொழில் அல்ல. இது அறிவுத்தொண்டு! தமிழாட்சியும் தமிழர்களின் ஆட்சியும் நடைபெறும் நம்முடைய தமிழ்நாட்டில் இத்தகைய அறிவுத் திருவிழாக்கள் தமிழ்த் திருவிழாக்கள் அதிகம் நடக்க வேண்டும்.
புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகச் சென்னை புத்தகக் காட்சியைப் போல தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு முதல் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்ததாகத் தமிழ்நாடு அரசு எடுத்த மிக முக்கியமான முயற்சி என்பது பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி.
பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு 38 நாடுகள் பங்கேற்க இருக்கின்றன. வருகிற 16, 17, 18 ஆகிய நாட்களில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் ஆறு கோடி ரூபாய் செலவில் இது நடைபெற இருக்கிறது.
கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு எடுத்த இன்னொரு மிக முக்கியமான முன்னெடுப்பு என்பது இலக்கியத் திருவிழாக்கள். சென்னை, பொருநை, சிறுவாணி, காவிரி, வைகை என இலக்கியத் திருவிழாக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
எனக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் புத்தகங்களை கிராமப்புற நூலகங்களுக்கும் வாசக சாலைகளுக்கும் வழங்குவதை நான் வழக்கமாக வைத்துள்ளேன். புத்தகம் வழங்குவது என்பதுதான் அறிவுக்கொடையாக அமையும். புத்தகங்கள் வாங்குகிற பழக்கத்தை, நூலகங்களுக்குச் செல்கிற பழக்கத்தைப் பள்ளிக்காலத்திலேயே மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். புதிய சிந்தனைகளை கல்லூரி மாணவர்களிடம் உருவாக்க வேண்டும். இது தமிழ்ப்பற்றை, தமிழார்வத்தை, தமிழுணர்ச்சியை, தமிழ் எழுச்சியை உருவாக்கும்.
சின்னச்சாமியும் அரங்கநாதனும் தீக்குளித்தார்கள். சிதம்பரம் இராசேந்திரன் துப்பாக்கிக் குண்டுக்கு மார்பைக் காட்டினார். லட்சக்கணக்கான தமிழர்கள் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களின் தலைமையில் திருச்சியில் இருந்து சென்னைக்குத் தமிழ்ப்படையாக நடந்து போனார்கள்.
இவையெல்லாம் வேறு எந்த மொழியிலும் இனத்திலும் நாட்டிலும் பார்ப்பது அரிது. இத்தகைய தியாகத்தை இப்போது எதிர்பார்க்கவில்லை. தமிழார்வத்தைத்தான் எதிர்பார்க்கிறோம். இத்தகைய தமிழ் ஆர்வத்தை உருவாக்குபவையாகப் புத்தகக் காட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழினம் சிறக்க வேண்டுமானால் தமிழ்மொழி சிறக்க வேண்டும்! தமிழ்மொழி செழிக்குமானால் தமிழினம் செழிக்கும்! தமிழ்மொழியும் இனமும் செழிக்கப் புத்தகங்கள் துணைநிற்கட்டும்! 47-ஆவது சென்னை புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும்!''












Click it and Unblock the Notifications