கமல் ஹாசனை நேரில் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா.. ஒரே ஹேப்பியாம்.. மொத்தமா ஒதுங்குறாரே!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை இன்று அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் சந்தித்தனர்.
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க வருமாறு கமல்ஹாசனுக்கு அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். கமல்ஹாசனும் இதில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.
கட்சி தொடங்கியது முதல் பல தேர்தல்களில் தனித்துக் களமிறங்கிய கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்தார்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் மநீம கூட்டணி அமைக்கும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், மேலும் மேலும் திமுகவுடன் நெருங்கி வருகிறார் கமல்.

நேரில் சந்தித்த
இன்று திமுக அமைச்சர் மநீம தலைவர் கமல்ஹாசனை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை வழங்கினர்.

70வது பிறந்தநாள்
இந்த அழைப்பிதழை ஏற்றுக்கொண்ட மநீம தலைவர் கமல்ஹாசன், விழாவில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஆண்டு தோறும் திமுகவினரால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கட்சி கொடி ஏற்றியும், கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சிறப்பாக கொண்டாட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

கமல்ஹாசன் திறந்து வைக்கிறார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வருகிற 28-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கடந்து வந்த பாதை என்கிற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான சேகர்பாபு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இந்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளனர்.

சேகர்பாபு பேட்டி
கமல்ஹாசனை சந்தித்து அழைப்பு விடுத்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலினின் சிறுவயது முதலான அரிய புகைப்படங்கள் இடம்பெறும். புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பதற்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வருகை தருவது திமுகவினருக்கு பெருத்த மகிழ்ச்சியாக உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் பிரச்சாரம்
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியது முதல் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெறாமல் தனித்து களம் கண்டு வந்த கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரமும் மேற்கொண்டார் கமல்ஹாசன்.

இணைவது உறுதி
முன்னதாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற பின்னர், இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்த கமல்ஹாசன், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் ஏற்பாடு செய்யும் புகைப்பட கண்காட்சியையும் தொடங்கி வைக்க இருக்கிறார். இதனால், கமல்ஹாசன் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைவது உறுதியாகிவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications