பிளாக் ஷிப் டிவியில் "வினோஜ் பி செல்வம்".. கொதித்த திமுகவினர்.. ஆக்சன் எடுப்பாங்க.. டிஆர்பி விளக்கம்
திமுகவினர் பலரும் இதை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னை: பிளாக் ஷிப் டிவியில் பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் கலந்து கொண்ட மாணவர்கள் இடையே பேசியது திமுகவினர் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிளாக் ஷிப் டிவி யூ டியூப் சேனலாக செயல்பட்டுக்கொண்டு இருந்தது. சமீபத்தில் இந்த சேனல் பிஎஸ் வேல்யூ செயலி என்று ஓடிடி செயலியை கொண்டு வந்தது.
இந்த செயலி தொடங்கப்பட்ட சில மாதங்களில் பிளாக் ஷிப் டிவி உருவானது. சித்திரம் டிவியின் அலைவரிசையில் பிளாக் ஷிப் டிவி தொடங்கப்பட்டது.

கலைஞர் டிவி
கலைஞர் டிவி குழுமத்திற்கு சொந்தமான சித்திரம் டிவி மூலம் பிளாக் ஷிப் டிவி லான்ச் செய்யப்பட்டது. கலைஞர் டிவி குழுமம் சார்பாக இதில் முதலீடும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இதில் பல்வேறு நிகழ்ச்சிகளும் வெளியாகிக்கொண்டு இருந்தன. பிளாக் ஷிப் யூ டியூப் சேனலில் இருந்த பலர் இந்த தொலைக்காட்சியிலும் கலந்து கொண்டனர். ஆர்.ஜே விக்னேஷ் மற்றும் சில நிர்வாகிகள் இணைந்து, சித்திரம் குழுமத்தோடு இந்த சேனலை நடத்தி வருகின்றனர்.

முதலீடு
இப்படி கலைஞர் குழுமத்தின் முதலீடு இருக்கும் சேனலில்தான் பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் பேசி இருக்கிறார். அவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தது கடும் விமர்சனங்களை திமுகவினர் இடையே ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் இடையே அரசியல் பேசும் நிகழ்ச்சி ஒன்றில் வினோஜ் பேசி இருக்கிறார். அவர் பேசிவிட்டு சென்றபின் மாணவர்கள் பலர், அவர் ஆன்மீக அரசியல் பற்றி பேசினார். அரசியலில் ஆன்மீகத்தை சேர்ப்பது பற்றியும். மதம் - அரசியல் எப்படி ஒன்றாக இருக்கிறது என்பதை பற்றியும் பேசினார் என்று கூறி உள்ளனர்.

சர்ச்சை
பிளாக் ஷிப் டிவியில் பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் கலந்து கொண்ட மாணவர்கள் இடையே பேசியது திமுகவினர் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுகவினர் பலரும் இதை கேள்வி எழுப்பி வருகின்றனர். பாஜகவுடன் திமுக நெருக்கம் ஆகி வருகிறதா? என்ன இது? எப்படி பாஜகவினரால் கலைஞர் குழும சேனல் ஒன்றிற்குள் வர முடிகிறது? என்றெல்லாம் திமுகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர். இணையத்தில் திமுகவினர் இடையே இது கடுமையான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சித்திரம் சேனலில் இருக்கும் பிளாக் ஷிப் என்ற லோகோ தற்போது நீக்கப்பட்டு உள்ளது. அந்த லோகோ கடந்த 24 மணி நேரமாக பயன்படுத்தப்படவில்லை.

பாஜக பிரச்சாரம்
இந்த நிலையில் திமுக எம்எல்ஏ மற்றும் ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், BJP செய்யும் பொய் பிரச்சாரத்தை எதிர்த்து முதல்வர், இயக்கம் , மூத்த கழகத்தினர் & ITWing குரல் எழுப்பி வரும் நிலையில் இதுபோன்ற விடயங்களில் நம்மமை நாமே திசைதிருப்பிக்கொள்வது சரியா ? சிந்தியுங்கள்! இப்பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர். விடயம் இப்படி இருக்க, இந்த topic இன்று முக்கியமா? ஒருமுறை உரியவர்கள் கவனத்திற்கு கொண்டுவந்தால் போதும் அல்லவா ! தேவையற்ற திசை திருப்பல் வேலைகளை தவிர்க்கவும். நமக்கு சண்டை போட இதைவிட பெரிய விஷயங்கள் உள்ளன. உங்கள் கவனத்தை அதன் மீது வையுங்கள், என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications