வானத்தில் நடந்த "போர்".. சென்னை திடீரென கூலாக மாறியது எப்படி? பனி அல்ல.. "ரியல்" காரணமே வேறயாம்!
சென்னை: இது என்ன சென்னையா? இல்லை ஊட்டியா? திடீர்ன்னு இப்படி குளுருதே என்று இத்தனை காலம் ஹாட்டாக இருந்த சென்னை மக்கள் எல்லோரும் தற்போது போர்வைக்குள் நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மச்சான் எப்ப வர போற என்று சூரியனை எதிர்பார்த்து சென்னை மக்களை காக்க வைத்துள்ளது வானிலை.. இப்படி திடீரென சென்னை வானிலை கூலாக மாறியது எப்படி? ஏன்? பனிக்காலம் தொடங்கிவிட்டது.. அதனால் இப்படி வானிலை மாறுகிறது என்று பலர் நினைக்கலாம்.
ஆனால் உண்மையில் பனி காரணமாகவெல்லாம் வானிலை மாறவில்லை. வானத்தில் நடந்த ஒரு மாற்றம்.. கிட்டத்தட்ட வானிலை வல்லுனர்கள் எல்லோரும் எதிர்பார்த்த மாற்றம் என்று கூட கூறலாம். அந்த ஒரு மாற்றம்தான தற்போது சென்னையில் திடீரென வானிலை கூலாக மாறுவதற்கு காரணம்.
எப்படி என்னதான் நடந்தது என்று தெரிந்து கொள்ளும்முன் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

வங்கக்கடல் வானிலை
வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த வாரம் மத்தியில் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதற்கே படாதபாடு பட்டது. தங்கர் பச்சான் பட ஹீரோ போல.. நொந்து நூடுல்ஸ் ஆகி.. பாடாதபாடு பட்டுதான் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான போது அது இரண்டு இரண்டு திசைகளில் பயணிக்கும் என்று கருதப்பட்டது. ஒன்று தமிழ்நாட்டின் மையத்தை நோக்கி நகரலாம் என்று கூறப்பட்டது.அல்லது வடக்கு மாவட்டத்தில் சென்னை - நெல்லூர் இடையே இது கரையை கடக்கலாம் என்று கூறப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்த நிலையில்தான் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாவதை கிழக்கு தென் கிழக்கு பகுதியில் வங்கக்கடலில் நிலவி வந்த வறண்ட காற்று தடுத்தது. இந்த வறண்ட காற்றுக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வந்தது. இந்த மோதல் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி வலிமை அடைவதில் சிக்கல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட வீர பாண்டியனுக்கும் - ஆதித்த கரிகாலனுக்கு இடையில் ஏற்பட்ட போர் போல பிரம்மாண்ட போர்தான் வானத்தில் நடந்தது. இந்த போருக்கு பின்தான் ஒரு வழியாக காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.

வறண்ட காற்று
அங்கே இருக்கும் வறண்ட காற்று என்பது காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து வலிமை இழக்க செய்து வந்தது. அதோடு அந்த தாழ்வு பகுதிக்கு அருகிலேயே வேறு சில காற்று சுழற்சிகளும் இருந்தன. இந்த காற்று சுழற்சிகளும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதை முன்னதாக தடுத்து வந்தது. அதாவது பக்கத்துக்கு வீட்டு காரணம் கார் வாங்குவதை பார்த்து கோபம் அடையும் "நெய்பர்" போல.. அருகே இருந்த சிறு சிறு சுழற்சிகளும் இந்த தாழ்வு பகுதிக்கு எதிராக வேலை பார்த்தது. இதை எல்லாம் தாண்டி ஒரு வழியாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான பின்பும் தொடர்ந்து வறண்ட காற்று அழுத்தம் அதிகமாகிக்கொண்டே வந்தது.

சென்னையில் இருந்தது
இதையடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டிற்கு அருகில் வரமால், சென்னையில் இருந்து 150 கிமீ தூரத்திலேயே கடலிலேயே நின்று போனது. கடலிலேயே அங்கேயே மையம் கொண்டது. இது நகரும் வேகம் மிக மிக குறைவாக இருந்தது. 150 கிமீ தூரம் அருகே வந்த பின் அது நகரும் வேகம் அப்படியே நின்று போனது. கிட்டத்தட்ட எங்கும் நகராமல் ஒரே இடத்தில் நிற்கும் பொருள் போல நகராமல் இருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்படி நகராமல் நின்றதுதான் சென்னையில் தற்போது குளிர்ச்சியான வானிலைக்கு காரணம். இந்த தாழ்வு மண்டலம் கடலில் இருக்கிறது.

கடலுக்கு அப்பால்
இதனால் கடலில் 150 கிமீ தூரத்திற்கு அப்பால் மழை பெய்கிறது. இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கி அருகில் வந்தாலாவது சென்னையில் மழை பெய்யும். அது நடக்கவில்லை. இதனால் இப்போது இந்த தாழ்வு மண்டலம், குளிர்ந்த காற்றை சென்னையை நோக்கி நகர்த்தி உள்ளது. இந்த குளிர்ந்த காற்றுதான் தற்போது சென்னையில் நிலவும் குளிர்ச்சியான வானிலைக்கு காரணம். சென்னையில் இன்று அதிகாலை பல இடங்களில் 17 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. சில இடங்களில் 20- 21 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. வங்கக்கடலில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வந்த குளிர்ந்த காற்றுதான்.. இந்த குளிர்ச்சியான வானிலையை தந்துவிட்டு சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications