"நம்பிக்கையில்லங்க".. ஃபைல்களை 12 பேரிடம் தந்து சரி பார்த்த எடப்பாடி.. வந்ததே கோபம்! கசிந்த சீக்ரெட்
சென்னை: அதிமுக ஒற்றை தலைமையை கைப்பற்றும் மோதல் எடப்பாடி பழனிச்சாமி - ஓ பன்னீர்செல்வம் இடையே தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக மிகப்பெரிய சட்ட போரட்டம் வரும் நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு திரில்லர் படத்திற்கு உண்டான அனைத்து ட்விஸ்ட் அண்ட் டர்ன்களுடன் சென்று கொண்டு இருக்கிறது அதிமுக மோதல். எப்போது யார் எந்த அணிக்கு செல்வார்.. யார் கோர்ட் படிக்கு செல்வார்.. யார் கூட்டம் போடுவார்.. யாருடைய போஸ்டர் கிழிக்கப்படும் என்று தெரியாத அளவிற்கு மோதல் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.
2017 ல் நடந்த அதிமுக மோதலுக்கு பின்பாக மீண்டும் அதிமுக வார் சீசன் 2 சிறப்பாக தொடங்கி எபிசோட் 2ஐ தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது.
அதிமுக பொதுக்குழு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு! ஈபிஎஸ் அணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
ஓபிஎஸ் சட்ட போராட்டம்
இந்த அதிமுக மோதலில்.. பொதுச்செயலாளர் பதவிக்கு முட்டுக்கட்டை போட ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக முயன்று வருகிறார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவர் பக்கம் தொண்டர்கள் பலம் இல்லை என்றாலும் சட்ட ரீதியாக அவருக்கே சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஓ பன்னீர்செல்வம் வெவ்வேறு வழக்குகளை போடும் திட்டத்தில் உள்ளது. ஜூலை 11 ல் நடக்க உள்ள பொதுக்குழு சட்ட விரோதமானது என்று அறிவிக்க அவர் உயர் நீதிமன்றம் செல்ல இருக்கிறார்.
ஓபிஎஸ் ரெடி
அதேபோல் ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்படவில்லை என்று அவமதிப்பு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். இது போக அவைக்குழு, பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரை தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி தேர்தல் ஆணையத்தில் உரிமை மசோதாவும் தாக்கல் செய்துள்ளார் ஓ பன்னீர்செல்வம். இது போக எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த வார உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு போனால் தன்னுடைய வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கேவியட் மனு தாக்களும் ஓபிஎஸ் செய்துள்ளார்.
சட்ட ரீதியாக எடப்பாடிக்கு பின்னடைவு
ஓபிஎஸ் முறையாக சட்ட ஆலோசனைகளை பெற்று இப்படி செயல்பட்டு வருகிறார். இதன் அர்த்தம் ஓபிஎஸ் பெரிய சட்ட போராட்டத்திற்கு தயாராகிவிட்டார் என்பதாகும். இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி இதற்காக கடந்த 2 நாட்களில் மொத்தம் 10 மணி நேரம் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்துள்ளார். நேற்று முதல்நாள் 5 மணி நேரமும், நேற்று 5 மணி நேரமும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்துள்ளார். ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் எப்படி பொதுக்குழுவை கூட்டுவது, எப்படி பொதுச்செயலாளர் மசோதாவை கொண்டு வருவது என்பது உள்ளிட்ட விதிகளை ஆலோசனை செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றம்
அதோடு ஓபிஎஸ் என்ன மாதிரியான வழக்குகளை தொடுப்பார், அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்றும் ஆலோசனை செய்துள்ளார். கடந்த முறை உயர் நீதிமன்ற வழக்கில் கடைசி நேர்தத்தில் ஒற்றை தலைமை தீர்மானத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தது. என்ன நடந்தாலும் வரைவு தீர்மானத்தை ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியது. இதுதான் தற்போது எடப்பாடிக்கு இருக்கும் சட்ட சிக்கல். கடந்த முறை உயர் நீதிமன்றத்தில் வந்த இந்த தீர்ப்பால் தனது லீகல் டீமிடம் எடப்பாடி கோபமாக இருக்கிறாராம்.
வழக்கறிஞர்
அவ்வளவு கஷ்டப்பட்டு பாயிண்ட்களை வைத்தும் இப்படி தீர்ப்பு எதிராக வந்துவிட்டதே என்ற கோபத்தில் அவர் இருக்கிறாராம். இதன் காரணமாக இந்த முறை மிக மூத்த வழக்கறிஞர் ஒருவரை எடப்பாடி அணுகி இருக்கிறாராம். அவரிடம் ஆலோசனை செய்து அதற்கு ஏற்றபடி மனுக்கள், வாதங்கள் என்று பல பைல்களை ஏற்பாடு செய்துள்ளனர். இதை அதிமுக விவகாரங்கள் தெரிந்த 12 வழக்கறிஞர்களிடம் கொடுத்துள்ளனர் எடப்பாடி தரப்பினர்.
சரிபார்ப்பு
இதில் ஏதாவது ஓட்டை இருக்கிறதா.. எங்காவது சட்ட ரீதியாக ஓபிஎஸ் நுழைய முடியுமா? என்று எடப்பாடி கேட்டு இருக்கிறாராம். எங்கேயும் சொதப்பிவிட கூடாது என்பதால் ஒரு வழக்கறிஞர் மீது நம்பிக்கை இல்லாமல்.. பெரிய அணியை களமிறக்கி வேலை பார்த்து வருகிறாராம் எடப்பாடி. நீண்ட சட்ட போராட்டத்திற்கு எடப்பாடி தயாராகிவிட்டார். எல்லாத்தையும் பார்த்து பார்த்து அவர் செய்து வருகிறார் என்று சீக்ரெட் உடைக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.