சீமான் வீட்டில் துப்பாக்கியுடன் காவலாளி இருந்தது ஏன்? வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி
சென்னை: சீமான் வீட்டு காவலாளி முன்னாள் ராணுவ வீரர் என்பதால் உரிமம் பெற்ற துப்பாக்கியை காவலாளி வைத்துள்ளார் எனவும் பெட்ரோல் குண்டு வீசப்போவதாக தகவல் வந்ததால் அவர் துப்பாக்கியை வைத்து இருந்தார் எனவும் சீமான் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நடிகை பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இது தொடர்பான சம்மனை சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய நிலையில், சில நிமிடங்களிலேயே கதவில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. அந்த சம்மனை கிழித்தது ஏன் என்று போலீசார் விசாரிக்க சீமான் வீட்டிற்குள் சென்றனர்.

அப்போது, திடீரென அவரின் காவலாளியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு போலீசாருக்கும் சீமான் வீட்டு காவலாளிக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சீமானின் காவலாளி போலீசாரை தாக்கியதோடு கையில் இருந்த துப்பாக்கியையும் எடுத்து மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து காவலாளி மற்றும் சம்மனை கிழித்தவர் என இரண்டு பேரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். சீமான் வீட்டில் நடந்த சலசலப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக சீமான் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சீமான் வீட்டு காவலாளி போலீசாரை தாக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக நெருக்கடி கொடுக்கப்படுகிறது. முன்னாள் ராணுவ வீரர் என்பதால் உரிமம் பெற்ற துப்பாக்கியை காவலாளி வைத்துள்ளார். நோட்டீஸ் ஒட்டிய பின் அதில் உள்ள தகவலை தெரிந்த பின்னரே கிழித்துள்ளார். பெட்ரோல் குண்டு வீசப்போவதாக தகவல் வந்ததால் அவர் துப்பாக்கியை வைத்துள்ளார்." இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications