ஆட்சி மற்றும் அதிகாரம்.. திமுக அதிமுக இடையே 'இந்த ஒரு விஷயத்தில்' அவ்வளவு ஒற்றுமை
சென்னை: மத்தியில் ஆளும் பாஜக எப்போதுமே கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்த்து வருகிறது. ஆந்தியாவில் சந்திரபாபு நாயுடு முழு மெஜாரிட்டி இருந்தபோதும், பவன் கல்யாணை துணை முதல்வராக்கியதுடன், கூட்டணி ஆட்சிதான் அமைத்துள்ளார். ஆனால் ஆட்சி,அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்ன தான் கூட்டணி கட்சிகள் குமுறினாலும், அதிமுக, திமுக இரண்டுமே எந்த காலக்கட்டத்திலும் பங்கு தந்தது கிடையாது. இதில் இரண்டு கட்சிகளுமே ஒற்றுமையாக உள்ளன.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதை கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி, அதிகாரத்தில் உள்ள திமுக, அதிமுக இரண்டுமே ஏற்பது இல்லை. 1967ல் முதல் முதலாக திமுக ஆட்சியை கைப்பற்றிய காலத்தில் இருந்து சரி, இப்போது வரை இரண்டு திராவிட கட்சிகளும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் விவகாரத்திலும் சரி, கூட்டணியிலும் சரி, ஆட்சி அதிகாரத்திலும் சரி கவனமாக உள்ளன.

எவ்வளவு தான் கூட்டணி கட்சிகளுடன் நட்புடன் பழகினாலும் பழக்க வழக்கம் எல்லாம் தேர்தலுடன் தான்.. அதன்பிறகு எல்லாம் விட முடியாது என்பதில் உறுதியாக உள்ளன. மேலும் அதிகாரம் என்று வரும் போது, இரண்டு கட்சிகளுமே கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க ஒரு போதும் தயாராக இருந்தது இல்லை.. இரண்டு கட்சிளுமே ஆட்சியமைக்க தேவையான நம்பர்களை பெறுவதற்காக மட்டும் கூட்டணி கட்சிகளை பல காலமாக பயன்படுத்தி வருவதாக குமுறல்கள் உள்ளன.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014ம் ஆண்டு முதல் முதலாக ஆட்சியமைத்த போது, கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்தது. கூட்டணி கட்சிகளை ஓரளவு அணைத்தே சென்றது. 2019ல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற போதும், கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு தந்தது. 2024ல் முழு மெஜாரிட்டி இல்லாத நிலையில், பல்வேறு முக்கிய துறைகளை, தெலுங்கு தேசம், மதசார்பாற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா (ஷிண்டே) உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு தந்துள்ளது. இப்படியாக அதிகாரத்தில் பங்கு தருவதில் குறை வைத்தது இல்லை..
இதேபோல் ஆந்திராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முழுமெஜாரிட்டி கிடைத்தாலும், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தந்துள்ளது. பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டுள்ளது. அதிகாரத்தை தன்னிடம் மட்டும் குவித்து வைக்காமல் கூட்டணி கட்சிகளுக்கும் சந்திரபாபு நாயுடு தந்துள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை அப்படி இல்லை, எம்ஜிஆர், கருணநிதி,ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் தற்போது ஸ்டாலின் என எந்த முதல்வருமே கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு தர விரும்பியது இல்லை. 2006ல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.. கூட்டணி கட்சிகளின் தயவுடன் தான் ஆட்சியில் இருந்தது. ஆனால் கூட்டணியில் முக்கிய கட்சிகளான காங்கிரஸ், பாமக ஆகியவற்றுக்கு ஆட்சியிலோ அதிகாரத்திலோ பங்கு தரவில்லை.. இரண்டு கட்சிகளுமே வெளியில் இருந்து தான் ஆதரித்தன.
2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முழு மெஜாரிட்டி இருந்த காரணத்தால், வழக்கம் போல் திமுக, கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்க்கவில்லை. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள திருமாளவளவன், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று பேசிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மீண்டும் தற்போது கூட்டணி கட்சிகளிடையே அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற முணுமுணுப்புகள் உள்ளன. ஆனால் வெளிப்படையாக எந்த கட்சிகளும் பேச முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் அதற்கான வாய்ப்புகள் இல்லையாம். அதேநேரம் 2026ல் அதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications