சட்டசபைக்கு போக வேணாம்! 12 மணி நேரத்திற்கு முன்பே! எடப்பாடியிடம் "ஸ்ட்ரிக்டாக" சொன்ன தலைகள்! பின்னணி
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையை புறக்கணித்தனர். இந்த முடிவிற்கு பின் முக்கியமான சில ஆலோசனைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை முடிக்கும் விதமாக இன்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது.

இன்று முதல்நாள் கூட்டத்தொடரில் சட்டசபையில் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றிய பின்னர் சட்டசபை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இன்று அவையில் வேறு நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரம்மி தடை தொடர்பான அவசர சட்டம் குறித்த மசோதா இந்த கூட்ட தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் எதிர்க்கட்சி துணை தலைவர் யார் என்ற மோதலுக்கு இடையில்தான் இன்று அவை தொடங்கியது.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இதை ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக கொறடா வேலுமணி சார்பாக சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது. அதன்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்படுகிறார். ஆர்பி உதயகுமாரை துணை தலைவராக தேர்வு செய்கிறோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பொதுகுழு வழக்கு இன்னும் முடியவில்லை. அதனால் இப்போதைக்கு இதில் முடிவு எடுக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு பதில் அளித்து உள்ளது.இதையடுத்தே அதிமுகவில் இருக்கை விவகாரம் எழுந்தது. அதிமுகவில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் அமர போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவரின் இருக்கை மாற்றப்படவில்லை. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர், எம்எல்ஏ-க்களின் இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
அதாவது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிக்கு முன் வரிசையிலும், அவருக்கு அருகிலேயே துணை எதிர்க்கட்சி தலைவர் ஓ பன்னீர்செல்வத்திற்கு இருக்கையும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆர்பி உதயகுமாரை சபாநாயகர் எதிர்கட்சித் துணை தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி இருவரும் அருகருகே அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையை புறக்கணித்தனர். இந்த முடிவிற்கு பின் முக்கியமான சில ஆலோசனைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. 12 மணி நேரத்திற்கு முன் நடைபெற்ற அந்த கூட்டத்தில் தான் இந்த சட்டசபை கூட்டத்தை புறக்கணிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக எடப்பாடியிடம் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் மிகவும் கண்டிப்புடன் பேசியதாக கூறப்படுகிறது. நாம் சட்டசபை பக்கமே போக கூடாது. 2- 3 நாட்களுக்கு தானே இந்த கூட்ட தொடர் நடக்க போகிறது.
மொத்தமாக புறக்கணிப்போம். பொதுக்குழு நம்ம பக்கம் இருக்கிறது. எம்எல்ஏக்கள் நம்ம பக்க இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது சபாநாயகர் நமக்கு ஆதரவாக தானே முடிவு எடுக்க வேண்டும். ஆனால் அவர் எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்றுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அதனால் நாம் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும்.
நாம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தும், அவர்கள் நம் கோரிக்கையை ஏற்கவில்லை. இவ்வளவு நடந்த பிறகும் ஓ பன்னீர்செல்வம் பக்கத்தில் அமர்வதற்கு பதிலாக.. நாம் கூட்ட தொடரை புறக்கணிக்கலாம் என்று நேற்று நடந்த கூட்டத்தில் இறுதி முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.












Click it and Unblock the Notifications