முல்லைப் பெரியாறு, ஜல்லிக்கட்டு தொடங்கி நீட் வரை.. 2011 முதல் தமிழ்நாடு சட்டசபை சிறப்பு கூட்டங்கள்!
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான புரட்சி உள்ளிட்ட சூழ்நிலைகளில் தமிழ்நாடு சட்டசபை சிறப்பு கூட்டங்கள் கூட்டப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்திருந்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கின் விசாரணை வரும் 20-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் திடீரென 10 நிலுவையில் இருந்த மசோதாக்களை தமிழ்நாடு சட்டசபைக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதனையடுத்து தமிழ்நாடு சட்டசபை சிறப்பு கூட்டம் நாளை கூடி 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி திரும்பவும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளது.
சட்டசபை விதி எண் 143-ன் கீழ், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மறுபரிசீலனைக்காக ஆளுநர் திருப்பி அனுப்பினால் அது குறித்து விவாதிக்க சட்டசபை சிறப்பு கூட்டத்தை சபாநாயகர் கூட்ட முடியும்.
இதன்படி 2011-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டசபை சிறப்பு கூட்டம் பல்வேறு பிரச்சனைகளுக்காக கூட்டப்பட்டிருக்கிறது. இதுவரை நடைபெற்ற சில சட்டசபை சிறப்பு கூட்டங்கள் விவரம்:
2011-ம் ஆண்டு டிசம்பர் 15-ல் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரளாவை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2013-ம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேறியது.
2017-ம் ஆண்டு ஜனவரி 23-ந் தேதி ஜல்லிக்கட்டு புரட்சி நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் அவசர சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
2018-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி மேகதாது அணையை கட்டக் கூடாது என கர்நாடகாவை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2022-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி, திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து மீண்டும் அனுப்ப உள்ளது.












Click it and Unblock the Notifications