புதுமைப் பெண் திட்டம்! ரூ.1000 லிருந்து ரூ.1500 உயர்த்த திமுக வாக்குறுதி! இப்படி ஒரு சூப்பர் காரணம்?
சென்னை: தமிழ்நாடு அரசின் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் புதுமைப் பெண் திட்டம், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவிகளின் கனவுகளை நனவாக்கும் முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. 1989-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட திருமண உதவித் திட்டத்தை, காலத்தின் தேவைக்கேற்ப மாற்றியமைத்து, பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செப்டம்பர் 5, 2022 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
பெண் குழந்தைகளின் உயர்கல்விச் சேர்க்கையை 100 சதவீதம் உயர்த்துவதே இத்திட்டத்தின் முதன்மை இலக்கு. தகுதியுள்ள மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. முதலில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்ட இத்திட்டம், கடந்த ஜூலை 2024 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இது பல ஏழை குடும்பங்களில் கல்விக்கான நிதிச்சுமையைக் கணிசமாகக் குறைத்துள்ளது.

இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் மாணவிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 6.92 லட்சம் மாணவிகள் உயர்கல்வி பெற இத்திட்டம் உறுதுணையாக இருந்துள்ளது. 2024-25 கல்வியாண்டில் மட்டும் 4.13 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். மாநிலத் திட்டக்குழு மாணவிகளிடம் நடத்திய ஆய்வில் இத்திட்டத்தின் ஆழமான தாக்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் 4 பெண்களில் ஒருவர் மட்டுமே கல்லூரிக்குச் செல்லும் நிலையில், தமிழ்நாட்டில் 2 பெண்களில் ஒருவர் கல்லூரிக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு புதுமைப் பெண் போன்ற திட்டங்கள் பேருதவி செய்கின்றன.
ஏழை மாணவிகள் தங்களின் அன்றாடச் செலவுகள், புத்தகங்கள், போக்குவரத்து மற்றும் கல்விச் செலவுகளை எவ்விதச் சிரமமுமின்றி மேற்கொள்ள இத்திட்டம் உதவுகிறது. உயர்கல்வியைத் தொடர முடியாமல் பாதியிலேயே நின்ற 11,682 மாணவிகள் மீண்டும் கல்லூரிகளில் இணைந்துள்ளனர். இத்திட்டத்தின் பயனாளிகளில் 45 சதவீதம் பேர் அரசு கல்லூரிகளிலும், 21 சதவீதம் பேர் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், 28 சதவீதம் பேர் சுயநிதி கல்லூரிகளிலும் பயின்று வருகின்றனர். கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவிகளுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தையும், தற்சார்பையும் வழங்குவதன் மூலம் இளவயதுத் திருமணங்களைத் தடுத்து, அவர்களைப் பெரும் ஆளுமைகளாக உருவாக்குவதே இத்திட்டத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது. பல மாணவிகள் இந்த உதவித்தொகையைப் பயன்படுத்தி தங்கள் குடும்பத்தின் சுமையைக் குறைத்து, உயர்கல்வியில் சிறப்பாக செயல்படுகின்றனர். சிலர் இதைப் பயன்படுத்தி தங்கள் பெற்றோரின் மருத்துவச் செலவுகளுக்கும் உதவியுள்ளனர்.
புதுமைப் பெண் திட்டத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, மாணவர்களுக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 2024 ஆகஸ்ட் 9 அன்று கோயம்புத்தூரில் முதலமைச்சர் தொடங்கி வைத்த இத்திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தால் அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. 2024-25ல் 3.28 லட்சம் மாணவர்கள் இதன் பலனைப் பெற்றுள்ளனர். இரு திட்டங்களும் சேர்ந்து 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உதவியுள்ளன.
இத்திட்டங்கள் தமிழ்நாட்டில் பெண் மற்றும் ஆண் கல்வியை சமமாக ஊக்குவித்து, சமூக நீதியை வலுப்படுத்துகின்றன. எதிர்காலத்தில் இவை மேலும் பல மாணவர்களின் வாழ்க்கையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் இந்த உதவித் தொகையை ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக உயர்த்த தேர்தல் வாக்குறுதியளித்துள்ளது திமுக.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குப் பெண் வாக்காளர்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுபோன்றத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றியிருப்பதால் இளைஞர்களின் வாக்குகளும் திமுகவுக்குப் போகும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications