எடப்பாடி குறி வைத்த "அந்த" புள்ளி.. எதிராக காய் நகர்த்திய 4 பேர்.. ஓ அதிமுக மீட்டிங் இதுக்குத்தானோ?
சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடக்க உள்ளதால் ரத்தத்தின் ரத்தங்கள் பரபரப்பாக காணப்படுகிறார்கள். பொதுக்குழு கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளின் படி வருடத்துக்கு 1 முறை ஒவ்வொரு கட்சியும் தங்களின் பொதுக்குழுவைக் கூட்டி அதன் முடிவுகளை ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம்
ஆனால், பிரதான கட்சிகளாக இருந்தாலும் சரி, சாதாரண கட்சிகளாக இருந்தாலும் சரி இந்த விதிகளை சரிவர கடைப்பிடிப்பதில்லை. இதற்காக, ஆணையத்திடம் அடுத்த 6 மாதத்தில் கூட்டுகிறோம் என அனுமதி பெற்று விடுவதுண்டு. அந்த வகையில், கடந்த டிசம்பரில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பொதுக் குழுவை கூட்ட 6 மாத கால அவகாசம் பெற்றிருந்தனர் அதிமுக தலைவர்கள். அந்த 6 மாத காலம் ஜூனில் முடிவடைகிறது.

பொதுக்குழு
அதனடிப்படையில் பொதுக்குழுவை கூட்டுகிறார்கள் அதிமுக தலைவர்கள். இந்த பொதுக்குழுவில் திமுக அரசுக்கு எதிராக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருக்கிறது. முக்கியமாக திமுக கொடுத்த சில வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று ஆளும் கட்சிக்கு எதிராக சில கடுமையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. என்னென்ன தீர்மானங்கள் என்பதை விவாதிக்க ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் அடுத்த வாரம் தலைமைக் கழகத்தில் சந்திக்கவிருக்கிறார்கள்.

அவைத்தலைவர்
இதற்கிடையே இந்த பொதுக் குழுவில், கட்சிக்கு முழு நேர அவைத் தலைவரை நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படவிருக்கிறது. தற்போது தற்காலிக அவை தலைவராக தமிழ்மகன் உசேன் இருக்கிறார். இவரையே முழு நேர அவைத் தலைவராக நியமிக்க எடப்பாடி விரும்புகிறார். இவரின் செயல்பாடு எடப்பாடிக்கு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதற்கான முயற்சியில் எடப்பாடி இறங்குவார் என்று கூறப்படுகிறது.

ஜெயக்குமார்
ஆனால், ஜெயக்குமார், செம்மலை , கோகுல இந்திரா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் இந்த பதவிக்கு ஆசைப்படுகின்றனர். எடப்பாடி தமிழ் மகனுக்கு குறி வைக்க.. இந்த 4 பேரும் அதற்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் தமிழ்மகனுக்கு முட்டுக்கட்டை போட இவர்கள் முயல்வார்கள் என்று கூறப்படுகிறது. எடப்பாடியிடம் ஜெயக்குமார் இதை பற்றி பேசுவார் என்றும் கூறப்படுகிறது. அதனால், தமிழ்மகன் உசேனே முழு நேர அவைத்தலைவராக நியமிக்கப்படுவாரா? அல்லது மாற்றம் வருமா? என்று அதிமுகவில் பரபர விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications