விஜய் மேலே விஜயகாந்துக்கு இருந்த அன்பு தெரியுமா? பிரேமலதா "இப்படி" பேசிட்டாங்களே.. நொறுங்கிய உறவு?
சென்னை: ஒரு காலத்தில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். இப்போது அதே நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நடிகர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.. அதற்கு காரணம் அரசியல்!
சமீபத்தில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் வழங்கினார். 1.500 மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் அளித்தார்.

இதற்காக சென்னையில் தனியார் மகால் ஒன்றில் பிரம்மாண்ட கூட்டம் ஒன்றையும் நடத்தினார். அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த கல்வி நிதி வழங்கும் விழா நடந்தது. இதில் பேசிய அவர், வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உன்னில் என்னை காண்பது போல உள்ளது.
படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுக்க முடியாது என்ற வசனம் கவர்ந்தது. படிப்பை தாண்டி என்ன பேசுவது என்று தெரியவில்லை, என்று கூறினார். இந்த நிகழ்வில் அவர் பேசிய விஷயங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக பெரியார், அண்ணா, காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும். புதிய நல்ல தலைவர்களை வருங்கால வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
எல்லோரும் பேசியதை கேட்டுக்கொண்டு அவர்களுக்கு பதில் அளித்தார். அவர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். 2 மணி நேரம் அவர் தொடர்ச்சியாக நின்றபடி இருந்தார். ஆனால் பெரிதாக அதை காட்டிக்கொள்ளவில்லை. யார் மீதும் கோபம் அடையவில்லை.
அதேபோல் இடை இடையே சிறிய 2-3 நிமிட பிரேக் எடுத்தால் கூட சாப்பிட கூட போகாமல் 12 மணி நேரம் அப்படியே நின்றபடி அவர் எல்லோரிடமும் பரிசுகளை கொடுத்து போட்டோ எடுத்தார். அவரின் செயல் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக அவ்வளவு நேரம் நின்றும் கூட அவர் முகத்தில் கோபத்தையோ, வருத்தத்தையோ காட்டாதது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
அரசியல்: இந்த மீட்டிங்கே விஜயின் அரசியல் திட்டத்தை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட்ட மீட்டிங் என்று கூறப்பட்டது. தனது ரசிகர்களை தொண்டர்கள் கூட்டமாக மாற்ற, ரசிகர் மன்றத்தை அப்படியே கட்சியாக மாற்ற வேண்டும் என்று விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இனி அடிக்கடி ரசிகர்களை விஜய் சந்திப்பார், அவர்களுடன் ஆலோசனை செய்வார், மாவட்ட அளவில் பூத் கமிட்டியை அமைப்பார் என்றும் செய்திகள் வர தொடங்கி உள்ளன. விரைவில் அவர் அரசியலில் நுழைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து இன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

விஜயின் அரசியல் பற்றி கேள்வி கேட்டதும் கோபமாக பதில் அளித்த பிரேமலதா, 40 ஆண்டுகாலம் பலருக்கும் முன் உதாரணமாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் விஜயகாந்த்! இனி யார் நினைத்தாலும் அவரை போல வர முடியாது; அவரைப்போல மற்றவர்கள் அரசியலுக்கு வர நினைத்தால், அது மோசமான விளைவுகளைதான் ஏற்படுத்தும்.
தேமுதிக லோக்சபா தேர்தலுக்காக தயாராகி வருகிறது. தே.மு.தி.க எந்த கூட்டணியிலும் இல்லை, யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம், என்று கூறி உள்ளார். விஜய் அரசியலுக்கு வர நினைத்தால் அது விளைவுகளை உண்டாக்கும் என்று கூறி உள்ளார்.
ஒரு காலத்தில் சினிமா உலகில் விஜய்க்கு எல்லாமுமாக இருந்தார் விஜயகாந்த். விஜயகாந்த் நடித்த வெற்றி என்ற திரைப்படத்தின்தான் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். இதையடுத்து குழந்தை நட்சத்திரமாக வரிசையாக விஜய்க்கு குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் வாய்ப்பு கொடுத்தார்.
எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய செந்தூரபாண்டி படத்தில் விஜயகாந்த் உடன் விஜய் சேர்ந்து நடித்தார். விஜயின் தொடக்க காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தது என்னவோ விஜயகாந்த்தான். ஆனால் இப்போது அவரின் மனைவி பிரேமலதா விஜயின் அரசியல் வருகைக்கு எச்சரிக்கை விடுத்து இருப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications