ஈபிஎஸ் ஆதரவாளராக இருந்தும்.. சீட் கிடைக்காமல் போன கம்பம் தொகுதி ஜக்கையன்.. காரணம் அவரா?
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக இருந்த போதிலும் ஜக்கையனுக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் ஜக்கையன் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஜெயலலிதா மறைந்த போதும் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. சசிகலா சிறைக்கு சென்றவுடன் ஓபிஎஸ் ஒரு அணியாகவும் ஈபிஎஸ் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு பெற இரு அணிகளும் ஒன்றிணைய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன.
அப்போது சசிகலாவையும் தினகரனையும் ஒதுக்கி வைத்தால் மட்டுமே அதிமுக ஒன்று இணைவது சாத்தியம் என ஓபிஎஸ் தரப்பு கூறிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரையும் ஒதுக்கி வைப்பதாக ஈபிஎஸ் தரப்பு ஒப்புக் கொண்டது.

ஒபிஎஸ்ஸுடன் இணைப்பு
அதிமுகவின் இரு அணிகளும், அதாவது ஓபிஎஸ்ஸுடன் இணைவதில் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களுக்கு விருப்பமில்லை. இதனால் 19 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர். இவர்கள் கடந்த2017ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றக் கோரி அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர்.

சபாநாயகர்
இதனிடையே கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் அளிக்க தலைமை செயலகத்திற்கு வந்த போது 19 பேரில் ஒருவரான கம்பம் தொகுதி எம்எல்ஏவான ஜக்கையன் அதிமுகவில் இணைந்துவிட்டார். அது முதல்வர் அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராகவே செயல்பட்டு வந்தார்.

வேட்பாளர் பட்டியல்
இந்த நிலையில் நேற்று வெளியான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் ஜக்கையனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது. இதனால் ஜக்கையனும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ஈபிஎஸ் ஆதரவாளராக இருந்தும் இவருக்கு சீட் வழங்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பனிப்போர்
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத சிலர் கூறுகையில் ஈபிஎஸ் ஆதரவாளராக இருந்த போதிலும் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் ஓபிஎஸ்ஸும் வேட்பாளர் தேர்வில் தலையிட்டிருக்கலாம். ஜக்கையனுடனான பனிப்போரால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என கூறுகிறார்கள்.

முதல்வர், துணை முதல்வருடன் சந்திப்பு?
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 9 தொகுதிகளில் ஏதாவது ஒன்று ஜக்கையனுக்கு ஒதுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் அவர் போட்டியிடும் கம்பம் தொகுதியை ஒதுக்காமல் வேறு ஒன்றை ஒதுக்குவதில் என்ன பயன் என ஆதரவாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து ஜக்கையன் முதல்வரையும் துணை முதல்வரையும் சந்தித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications