அஞ்சுகிறதானு கேட்ட அழகிரி.. சித்தராமையா- முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு.. ஓ இதுதான் விஷயமா?
சென்னை: கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து மற்ற 6 தமிழர்களையும் விடுதலை செய்ய திமுக அரசு தீவிரம் காட்டும் என முதல்வர் ஸ்டாலின் அப்போது தெரிவித்திருந்தார்.
பேரறிவாளன் விடுதலை மற்றும் 6 தமிழர்கள் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தி இருந்தது. பேரறிவாளன் விடுதலையின் போது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தெற்கில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக.. விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம்.. சென்னையில் சித்தராமையா!
பிரதமர் ராஜீவ் காந்தி
அந்த அறிக்கையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம்தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை.
கொலைக்காரர்கள்
அதே நேரத்தில் குற்றவாளிகள் கொலைக்காரர்கள் என்பதையும் அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகச் கூற விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார். ராகுல் காந்தியே பேரறிவாளன் விடுதலை வரவேற்கும் வகையில் பேசிய நிலையில் தமிழக காங்கிரஸ் இவ்வாறு விமர்சித்திருந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
தமிழக காங்கிரஸ்
இதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டமும் நடத்தியது. இந்த சம்பவத்தின் போதே திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பிருந்ததாகவே சொல்லப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நடந்தது. அந்த விழாவை பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது.
பிரதமரும் முதல்வரும்
இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல் இல்லாமல் பிரதமரும் முதல்வரும் சிரித்து பேசினர். குறிப்பாக சொல்ல போனால் முதல்வர் ஸ்டாலின் இந்த முறை தனது பேச்சில் அரசியலை கலக்கவில்லை. பிரதமரும் தமிழக அரசின் ஏற்பாடுகளை பாராட்டினார். இருவரும் தொட்டு தொட்டு பேசி சிரித்து மகிழ்ந்தனர். இதனால் திமுக - பாஜக கூட்டணி ஏற்பட போவதாக ஒரு பேச்சு எழுந்தது.
காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் தோல்வியை சந்தித்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியை நம்புவதை விட பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுக திட்டமிட்டிருந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத பேச்சுகள் சுற்றி வந்தன. இது குறித்து திமுக எம்பி கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர் சிரித்தார்.
செஸ் ஒலிம்பியாட்
இந்த நிலையில்தான் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய பாஜகவினரை தமிழக காவல் துறை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியும் அவர்களை கைது செய்ய அஞ்சுகிறதா என்றும் கே எஸ் அழகிரி காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டவும் எங்கள் கூட்டணியில் விரிசல் இல்லை என்பதை காண்பிக்கவும் கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்றைய தினம் ஒரு விருது வழங்கும் விழாவுக்கு சென்னை வந்த போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் விரிசல் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.