அரசியலில்.. கமல்ஹாசன் பாதையில் விஜய்! எம்ஜிஆர், ஜெயலலிதா மாதிரி ஆக முடியவில்லை, ஏன் தெரியுமா?
சென்னை: தமிழக அரசியலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஒரு தனித்துவமான சக்தியாக விளங்கி வருகிறது. அதன் இருபெரும் தலைவர்களான எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திரைப்பட உலகின் பின்னணி கொண்டவர்கள். திமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் வசன கர்த்தா என்ற வகையில், திரையுலக பின்னணி கொண்டவர்தான். எனவேதான், கமல்ஹாசன், விஜய் போன்ற திரைப் பிரபலங்கள் தங்களாலும் இவர்களைப் போல பெரும் தலைவர்களாக முடியும் என்று அரசியலுக்கு வந்தனர். ஆனால், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற கதாநாயக பிம்பம் கொண்டவர்கள் அரசியலில் வெற்றி பெற்றதற்கும் விஜய் அல்லது கமல்ஹாசன் அரசியலுக்கும் மாபெரும் வேறுபாடு உள்ளது. அதுதான் கட்சி கட்டமைப்பு.

எம்.ஜி.ஆர்: திமுகவின் அடித்தளம்
திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர், நேரடியாக தலைவராகி அரசியலுக்கு வரவில்லை. அதிமுகவை அவர் நிறுவுவதற்கு முன்பே, திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல ஆண்டுகால அனுபவமும், அமைப்புரீதியான அறிவும் அவருக்கு இருந்தது. திமுகவின் பொருளாளராகப் பணியாற்றியதன் மூலம், அவர் கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை மிக நெருக்கமாக அறிந்திருந்தார்.
1972-ஆம் ஆண்டு, திமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்கள் காரணமாக, எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து விலகி, அக்டோபர் 16-ஆம் தேதி "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை" உருவாக்கினார். அப்போது திமுகவைச் சேர்ந்த அனுபவம் கொண்ட பல தலைவர்கள் எம்ஜிஆருடன் வந்து சேர்ந்து கொண்டனர். இதுவே பின்னாளில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) என்று பெயர் பெற்றது. எம்.ஜி.ஆர். தனது புதிய கட்சியின் சித்தாந்தத்தை "முதலாளித்துவம், சோசலிசம், கம்யூனிசம்" ஆகியவற்றின் கலவை என்று விவரித்தார். இதை அவர் "அண்ணாயிசம்" என்று அழைத்தார். இந்த புதிய தத்துவம், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.
எம்.ஜி.ஆரின் அதிமுகத்தில் இணைந்த முக்கிய திமுக தலைவர்கள் யாரெல்லாம் தெரியுமா..?
ஆர்.எம். வீரப்பன்: அண்ணாவின் சித்தாந்த சிற்பியும் திரைப்பட தயாரிப்பாளரிலிருந்து அரசியல்வாதியானவருமான ஆர்.எம். வீரப்பன், எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களை ஒன்றிணைப்பதில் மற்றும் 1970களில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய வடிவமைப்பாளராக செயல்பட்டார். எம்.ஜி.ஆரின் நீண்டகால நண்பர் மற்றும் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்.
நாஞ்சில் கி. மனோகரன்: கட்சியின் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்தார். அவர் எம்.ஜி.ஆரின் நம்பகமான தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
எஸ்.டி. சோமசுந்தரம்: கட்சியின் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்த மற்றொரு தலைவர். அவர் கட்சியின் ஆரம்பகால அமைப்பு வேலைகளில் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
பாவலர் முத்துசாமி: கட்சியின் முதல் பிரசிடியம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது கட்சியின் நிர்வாக அமைப்பில் முக்கிய பதவியாக கருதப்படுகிறது.
கல்யாணசுந்தரம்: அப்போதைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநில செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.ஜி.ஆரை ஆதரித்து, வளர்ந்து வரும் அதிமுகவுடன் இணைந்து அவரது அரசியல் பயணத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். எம்.ஜி.ஆர், கல்யாணசுந்தரமுடன் சேர்ந்து 1972 நவம்பரில் தமிழக ஆளுநர் கே.கே. ஷாவிடம் கருணாநிதி தலைமையிலான திமுக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
மதுரையில் அதிமுகவின் வேர்கள்: எம்.ஜி.ஆர் தனது கட்சியின் தலைமையகத்தை சென்னையில் வைத்திருந்தாலும், மதுரையை கட்சியின் அரசியல் மையப்புள்ளியாக கருதினார். திமுகவில் இருந்தபோதே, மதுரையின் வலுவான தலைவர் எஸ். முத்து அவருடன் நெருக்கமாக இருந்தார். எம்.ஜி.ஆர் அதிமுகவைத் துவக்கிய பின், முத்தும் அவருடன் சேர்ந்தார்.
அனகாபுத்தூர் ராமலிங்கம்: சாதாரண தொண்டர் அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர், ஏற்கெனவே 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் ஒரு கட்சியைப் பதிவு செய்திருந்தார். எம்.ஜி.ஆர். தனது கட்சிக்கு அதே பெயரை பயன்படுத்த விரும்பினார். ஆனால், சாதாரண தொண்டர் ஒருவரை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், அவர் ராமலிங்கத்தின் கட்சியில் இணைந்ததாக அறிவித்தார். இது எம்.ஜி.ஆரின் அரசியல் சாதுரியத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ராமலிங்கத்துக்கு சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
கட்சியின் ஆரம்பகால வெற்றிகள்: இந்த அனுபவமிக்க தலைவர்களின் ஆதரவுடன், அதிமுகவின் முதல் வெற்றிகள் கிடைத்தன. மாய தேவர் 1973 மே மாதம் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அரங்கநாயகம் ஒரு ஆண்டு கழித்து கோயம்புத்தூர் மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த திமுக அனுபவமுள்ள தலைவர்களின் ஆதரவுடன், எம்.ஜி.ஆர் தனது கட்சி முதல் இரண்டு மாதங்களிலேயே பத்து லட்சத்திற்கும் மேலான உறுப்பினர்களைப் பெற்றதாக கூறினார். 1973 ஏப்ரல் 2-ஆம் தேதி, அதிமுக தமிழகத்தின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாக உருவானது.
ஜெயலலிதா: அசுர வளர்ச்சி
ஜெயலலிதா, திரைப்பட நடிகையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தார். 1982-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி, அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். முன்னிலையில் அவர் அதிமுகவில் சேர்ந்தார். அவரது முதல் பொதுப் பேச்சு, "பெண்ணின் பெருமை" என்ற தலைப்பில் கூடலூரில் நடைபெற்றது. அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் வளர்ச்சி மிக விரைவாக இருந்தது. அதிமுகவில் இணைந்த ஓராண்டிற்குள்ளேயே, 1983 ஜனவரி 28-ஆம் தேதி அவர் கட்சியின் பிரச்சார செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய அளவில் கவனம் ஈர்த்தார்.
எம்.ஜி.ஆருக்குப் பின் தலைமைப் போராட்டம்
1987-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் தலைமைப் பொறுப்புக்கான போராட்டம் வெடித்தது. 1988 ஜனவரி 1-ஆம் தேதி, ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரனும் கட்சியின் சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த இருமுனைப் போட்டியின் காரணமாக கட்சி ஜெயலலிதா அணி என்றும், ஜானகி அணி என்றும் இரண்டாகப் பிரிந்தது. 1989-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஜெயலலிதா திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிரான பிரதான எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்தார். இதன்மூலம், அரசியல் களத்தில் தனது தலைமைத் திறனை அவர் நிரூபித்தார். மேலும் ஜானகி அணியில் இருந்த தலைவர்களில் பலருக்கு தனது தலைமையின் கீழ் முக்கியத்துவம் கொடுத்து அரவணைத்து வைத்துக்கொண்டதால், அதிமுக கட்டமைப்பு குலையவில்லை. எம்ஜிஆர் தந்த கட்டமைப்புடன் திமுகவை எதிர்த்ததால் ஜெயலலிதாவால் சாதிக்க முடிந்தது.
நேரடித் தொடர்பும் அதிகாரக் குவிப்பும்
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவரும் தங்கள் தொண்டர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தனர். குறிப்பாக, கிராமப்புற மற்றும் சிறு நகரப்புறப் பகுதிகளில் அவர்களின் ஆதரவுத் தளம் வலுவாக இருந்தது. கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஜெயலலிதா, ஒரு பெண் தலைவராக, ஆண்களை அதிகமாகக் கொண்ட அரசியல் சமூகத்தில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டார். எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய கட்சியின் தேர்தல் சின்னமான "இரட்டை இலை" இன்றும் தமிழக அரசியல் களத்தில் வாக்குகளை ஈர்க்கும் ஒரு சக்திவாய்ந்த சின்னமாக உள்ளது.
விஜய், கமல்ஹாசன்
விஜய் தனது மாநாடுகளில் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுகிறார். ஆனால் அவர் கட்சிக்கு அடித்தளமே இல்லை என்பதைத்தான் மறந்துவிட்டார். கமல்ஹாசனும் ஸ்டார் பவரை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று வந்தவர்தான். ஆனால் கட்சி வலுவாக இல்லை என்பதும், அவரை தாண்டி வேறு யாரும் அரசியல் விற்பன்னர்கள் இல்லை என்பதும் மக்கள் நீதி மய்யத்தின் தோல்விக்கு காரணமாக இருந்தது. இப்போது அதே நிலையில்தான் விஜய்யும் உள்ளார். வரும் கூட்டத்தை ஓட்டாக மாற்ற சித்தாந்தமும், கட்சி கட்டமைப்பும் அவசியம் என்பதை விஜய் எப்போது உணர்வார்?
-
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன்












Click it and Unblock the Notifications