பட்ஜெட்டில் பல திட்டங்கள் 'கம்'முன்னு இருக்கே.. முதல்வர் போட்டு வைத்துள்ள 'ஜம்' திட்டம் இதுதானாம்!
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதை அடுத்து பாஜக அரசு சமர்பித்த இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகளை வாரி இறைத்திருந்தது. இதை எதிர்கட்சிகள் பாஜகவின் தேர்தல் அறிக்கை என்று வர்ணித்திருந்தது. இந்த நிலையில் நேற்று தமிழக பட்ஜெட் அறிவிக்கபப்ட்டது. இந்த பட்ஜெட்டிலும் தேர்தல் வருவதால் ஏராளமான சலுகை அறிவிப்புகள் இருக்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு எந்த அறிவிப்புகளும் இல்லாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கோ அல்லது விவசாயிகளுக்கோ, மீனவர்களுக்கோ பெரிய அளவிலான சலுகைகளோ அவர்களுக்கு பயன் தரக்கூடிய அறிவிப்புகளோ இல்லாமல் இருந்தது.
தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்களின் தயவு அரசுக்கு தேவைப்படும். 2003 –ல் இது போன்றே ஜெயலலிதா அரசு ஊழியர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை காரணமாக 2006-ல் தோல்வியடைந்தார். இப்போதும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை அரசு ஒடுக்கினாலும் பட்ஜெட் மூலமாக அவர்களுக்கு ஆதரவான சில அறிவிப்புகளை வெளியிட்டு அவர்களை சமாதனப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதிருப்தியில் அரசு ஊழியர்கள்
ஆனால் அவர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் பரீசீலிக்கப்படும் என்று மட்டுமே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு முக்கிய அறிவிப்புகளை பட்ஜெட்டிலேயே அறிவித்து தங்களை சமாதானப்படுத்தும் என்று இருந்த அவர்களின் நம்பிக்கை முழுமையாக போய் விட்டது.
அறிவிக்கத் திட்டம்
ஆனால் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள், விவசாயிகளுக்கான அறிவிப்புகள், மீனவர்களுக்கு சாதகமான அறிவிப்புகள் போன்றவை நேற்றைய பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம் இருந்ததாகவும் அதற்காக நிதித்துறை அதிகாரிகளும், நிதியமைச்சராக உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவே கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த முயற்சிகளுக்கு திடீரென முதலமைச்சர் எடப்பாடி தடை விதித்ததாக கூறப்படுகிறது.
தடுக்கப்பட்டதன் காரணம்
காரணம் என்னவென்று விசாரித்தபோது ஓ.பி.எஸ்சும் - ஈ.பி.எஸ்சும் என்னதான் இணைந்து பணியாற்றுவது போல தெரிந்தாலும் இருவருக்கும் இடையே குறிப்பாக இரு அணிகளுக்கும் இடையே இன்னமும் மனஸ்தாபங்கள் இருக்கவே செய்கிறது என்றே அதிமுக உள் விவரங்கள் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதன் வெளிப்பாடாகவே இது போன்ற சலுகை அறிவிப்புகள் தற்போது வெளிவரும் சூழலில் அது ஓ.பி.எஸ்.- சுக்கு சாதகமாகும் என்று ஈ.பி.எஸ் கருதியதாகவும் அதானாலேயே அதை தற்போது பட்ஜெட்டில் அறிவிக்க தடை போட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
110 விதியின் கீழ்
பட்ஜெட்டில் அதை அறிவிக்க தடை போட்டுவிட்டு இந்த சலுகை அறிவிப்புகளை எல்லாம் ஜெயலலிதா பாணியில் சட்டசபையில் விதி எண் 110 ன் கீழ் தானே அறிவிக்க திட்டமிட்டுள்ளாராம் முதல்வர். இப்படியாக தன்னை ஒரு முழுமையான ஜெயலலிதாவாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார் முதல்வர் என்று கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். ஆகவே அடுத்து வரும் நாட்களில் பல அறிவிப்புகள் 110 விதியின் கீழ் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். எப்படியோ நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது நடந்தால் சரிதான்..!