மோடியிடம் கொடுத்த ராஜினாமா கடிதம்? திமுகவை விட்டு விலகியது ஏன்? ரகசியம் உடைத்த பாரிவேந்தர்!
சென்னை: திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது ஏன் என்பதற்கான விளக்கத்தை பாரிவேந்தர் முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த முறை 2019 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு வென்றார் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர். ஆனால், வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே அவர் திமுக கூட்டணியிலிருந்து மவுனமாக வெளியேறிவிட்டார்.

திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திலோ அல்லது போராட்டங்களிலோ ஐஜேகே பங்கேற்கவில்லை. முழுக்க முழுக்க மோடி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினார் பாரிவேந்தர்.
திமுகவின் அதிகாரப்பூர்வமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர். அப்படி என்றால், பாரிவேந்தர் அதிகாரப்பூர்வமாக திமுகவின் எம்பி. அப்படி இருந்தும் இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக மோடியை மிக வெளிப்படையாக ஆதரித்து வந்தார்.
இவர் அணி மாறியது குறித்து விமர்சனம் எழுந்தது. திமுகவின் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற இவர், வெளிப்படையாக மோடியை ஆதரிப்பது சரியானதா எனக் கேள்வி எழுந்தது. இப்போது நேர்காணல் ஒன்றில் அது தொடர்பாக சில விளக்கங்களை பாரிவேந்தர் அளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற நீங்கள், மோடியை ஆதரித்து வந்தீர்கள். அது தொடர்பாக உங்களுக்கு மன உருத்தல்கள் இல்லையா? என முன்வைக்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பாரிவேந்தர் பதிலளித்த போது, "திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுவிட்டு மோடியை ஆதரித்ததில் எனக்குக் கொஞ்சம் கூட உருத்தல் இல்லை. ஏனென்றால், திமுகவினால் எங்களுக்கு என்ன நன்மை வந்ததோ, அதே அளவுக்கான நன்மை எங்களால் அவர்களுக்கும் கிடைத்துள்ளது.
திமுக அணியில் நின்று வென்றவுடன் எங்கள் கூட்டணி முறிந்துவிட்டது. எப்படி பலரும் தேர்தலுக்காக ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்களோ அப்படித் தான் நாங்களும் திமுகவுடன் கூட்டணி வைத்தோம். தேர்தல் முடிந்ததும் கூட்டணியும் முடிந்துவிட்டது. காரணம், அவர்களின் கொள்கை வேறு. எங்களின் கொள்கை வேறு.
எதற்கெடுத்தாலும் உரிமை, உரிமை என திமுக பேச ஆரம்பித்துவிட்டது. ஒருவிதமான பிரிவினை நோக்கைக் கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டது. அதைப் பிரிவினைவாதம் என்பதா? அல்லது மறைமுகமான ஒரு பிரிவினைவாதம் என்று சொல்வதா எனப் புரியவில்லை.

எதற்கு எடுத்தாலும் மத்திய அரசுடன் ஒரு மோதல் போக்கைக் கையாள தொடங்கிவிட்டார்கள். அதனால், தமிழ்நாட்டிலிருந்து சென்ற 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பயனற்றவர்களாக மாறிவிட்டனர். இவர்களால் தமிழ்நாட்டிற்கு ஒரு பலனும் கிடைக்காமல் போய்விட்டது.
ஒருவேளை திமுக என் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் எனக்கு அது நன்மையாக மாறி இருக்கும். அவையில் என்னைத் தனிக் கட்சி உறுப்பினராக நடத்தி இருப்பார்கள். அதனால் எனக்கு இலாபம்தான். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை.
திமுகவுக்கும் மத்திய அரசுக்கும் ஒரு பரஸ்பர உறவு இல்லை. மோதல் போக்குதான் அதிகம் இருந்தது. எதற்கெடுத்தாலும் அவையை நடத்தவிடாமல் கோஷம் போடுவதையே திமுக உறுப்பினர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஆகவே, அதிக எம்பிகள் இருந்தும் தமிழ்நாட்டுக்குத் தேவையான நல்ல திட்டங்களைப் பெற முடியாமல் போய்விட்டது" என்று பாரிவேந்தர் கூறியுள்ளார்.

அப்படி என்றால், திமுக கூட்டணி மூலம் கிடைத்த பதவியை நீங்கள் ராஜினாமா செய்திருக்கலாமே என்று முன்வைக்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு அவர், "நான் ராஜினாமா கடிதத்தைக் கொண்டுபோய் சபாநாயகரிடம் கொடுத்தது உண்மை.
அவர், 'தேர்தலுக்காக ஒரு கூட்டணி அமைப்பது அரசியலில் சகஜம்தான். ஆகவே அதற்காகப் பதவி விலக வேண்டாம். அதை விட்டுவிடுங்கள்' என்றார். என்னை அறிந்தவர்கள் இதை அறிவார்கள்.
நான் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 மாதங்களில் பிரதமர் மோடியைச் சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தேன். திமுக கூட்டணியில் உள்ளதை நான் விரும்ப வில்லை. விலக விரும்புகிறேன். ஆகவே பதவியை ராஜினாமா செய்கிறேன்' என்று விளக்கம் அளித்தேன்.
அதற்கு அவர், 'உங்களைத் தொகுதி மக்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு மரியாதை கொடுங்கள். யாருடைய கூட்டணியில் வென்றோம் என்பது இரண்டாம் பட்சம்தான். ஆகவே இது தேவை இல்லை' என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துவிட்டார்.

இது மோடிக்குத் தெரியும். என்னை அறிந்தவர் அறிவர். ஆகவே, நான் பதவி விலகும் முடிவைக் கைவிட வேண்டிய நிலை உருவானது. இதுதான் உண்மை.
எங்கள் கட்சிக்கு என்று ஒரு தேசிய பார்வை உள்ளது. அந்தப் பார்வை திமுகவிடம் இல்லை. ஆகவே அவர்களின் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லாமல் போனது. கூட்டணி வைப்பதற்கு முன்பே திமுகவின் கொள்கையை நான் அறிவேன். ஆனால், இந்தளவுக்கு ஒரு மோதல் போக்கை அவர்கள் உண்டாக்குவார்கள் என நான் அப்போது நினைக்கவில்லை.
2014 முதல் நான் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறேன். 2019இல் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. 5 சீட்டுகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டன. அந்த 5இல் ஒரு சீட்டை எனக்குக் கொடுங்கள் எனப் பாஜகவிடம் என்னால் கேட்டுப் பெற முடியாத ஒரு சூழல்.
கிடைத்ததோ 5தான். அதில் ஒன்றை எனக்கு எப்படி பாஜக தரும்? ஆகவே திமுக கூட்டணியுடன் பேசினோம். ஒரு சீட்டு தரச் சம்மதம் அளித்தார்கள். உடனே சென்றோம்.

அந்த முடிவை எடுக்கவில்லை என்றால், ஒரு அரசியல் கட்சியாக ஒரு தேர்தலை நாங்கள் தவறவிட வேண்டிய நிலை வந்திருக்கும். அதைத் தவிர்ப்பதற்காக திமுகவுடன் அந்தச் சூழலில் தோழமை கொண்டோம்.
வெற்றி பெற்று, நான் திமுக உறுப்பினர்களுடன் நாடாளுமன்றம் சென்றது முதல் அவர்கள் பாஜகவுடன் சண்டை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். திமுகவை பாஜக தனியாக ஒதுக்கிவிட்டது.
அவர்களோடு நானும் இருந்தால் என் தொகுதி மக்கள் பிரச்சினையை எப்படித் தீர்க்க முடியும்? எப்படி மத்திய அரசிடம் கேட்டுப் பெற முடியும்? ஆகவே நான் தனியாகச் செயல்படத் தொடங்கிவிட்டேன்" என விளக்கம் அளித்துள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications