தமிழக பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு ஏன்?.. காவல் துறை விளக்கம்
சென்னை: சென்னை திநகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது ஏன் என்பது குறித்து காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை திநகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவு 1.30 மணிக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து இதில் தொடர்புடையதாக வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்டது ஏன் என்பது குறித்து காவல் துறை விளக்கமளித்துள்ளது. அதில் சென்னை திநகர் வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை சுமார் 1.20 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொளுத்தி வீசியுள்ளார்.
கமலாலயத்தில் குண்டு வீச்சு..இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்.. கராத்தே தியாகராஜன்பேட்டி
விசாரணை
இதுகுறித்து தகவலறிந்து ஆர்-1 மாம்பலம் காவல் நிலைய காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்ததில் அதில் பதிவான நபரின் அடையாளத்தை வைத்து விசாரணை நடத்தியதில் பழைய குற்றவாளி வினோத் என்கிற கருக்கா வினோத் என்பவர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
வினோத் கைது
அதன்பேரில் காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு மேற்படி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நந்தனம், எஸ்எம் நகரை சேர்ந்த வினோத் என்கிற சுருக்கா வினோத் (38), என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வினோத் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக பாஜகவின் நிலைபாட்டை கருத்தில் கொண்டு ஆத்திரத்தில் பாஜக தலைமை அலுவலகத்தில் 3 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியது தெரியவந்தது.
அரசியல் சம்பந்தமாக இல்லை
மேலும் முதற்கட்ட விசாரணையில் இவர் மத ரீதியாகவோ அரசியல் சம்மந்தமாகவோ மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதும் இவர் இவ்வாறு பொது பிரச்சினையில் தானாகவே தலையிட்டு குடிபோதையில் இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் மனநிலை கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
4 கொலை முயற்சி வழக்குகள்
மேலும் விசாரணையில் வினோத் தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் இவர் மீது ஏற்கெனவே 4 கொலை முயற்சி வழக்குகள் உள்பட சுமார் 10 குற்றவழக்குகள் உள்ளதும் ஏற்கெனவே 2015 ஆம் ஆண்டு ஆர்-1 மாம்பலம் காவல் நிலைய எல்லையில் உள்ள டாஸ்மார் கடையை மூட வலியுறுத்தி டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசியதும், 2017ஆம் ஆண்டு E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய வாசலில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசியுள்லதும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்குப் பின்னர் வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.