நாடார் ஓட்டு கஷ்டம்.. நாயுடு ஓட்டு பிரியும்.. இடியாப்ப சிக்கலில் விருதுநகரில் ராதிகா சரத்குமார்!
சென்னை: விருதுநகரில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பல்வேறு வகையான ஜாதி கணக்குகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆனால் திரையுலகில் தனக்கு நண்பராக இருந்த விஜயகாந்த்தின் மகனால் தனது கணக்கு தகர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதையும் ராதிகா கவனத்தில் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பாஜகவுடன், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், அமமுக, பாமக உள்ளிட்டவை கூட்டணி அமைத்திருந்தன. கூட்டணி அமைப்பதிலேயே பாஜகவுக்கு இழுபறி நிலவி வந்த நிலையில் ஒரு வழியாக கூட்டணி இறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கூட்டணி கட்சிகளுடன் 39 தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடும் நேற்றுடன் முடிவடைந்தது. அதன்படி பாமக 10 இடங்களிலும் தமிழ் மாநில காங்கிரஸ் 3 இடங்களிலும் அமமுக 2, புதிய நீதி கட்சி, ஐகேஜே, ஜான் பாண்டியனின் தமமுக, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.
பாஜக வேட்பாளர்கள் பட்டியல்: தமிழகத்தில் பாஜக 20 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தேசிய தலைமை நேற்றைய தினம் வெளியிட்டது. தென்சென்னை - தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - நரசிம்மன், நீலகிரி (தனி) - எல்.முருகன், கோவை - அண்ணாமலை, நெல்லை - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி-பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - ஏ.சி.சண்முகம், பெரம்பலூர்-பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் இரண்டாம் கட்டமாக பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகரில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்ப்ரைஸான முடிவாகும்.
தோல்வி பயணம்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் 2007ஆம் ஆண்டு தொடங்கினார். இதையடுத்து 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சரத்குமார் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு சரத்குமாருக்கு எந்த தேர்தலும் கைக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என சரத்குமார் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் ஒரு ட்விஸ்ட் நடந்தது.
சிரித்த மோடி: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சரத்குமார் ஐக்கியமானார். நெல்லையில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் கூட தனது மனைவி ராதிகாவுடன் சரத்குமார் கலந்து கொண்டார். அவர்களிடம் பிரதமர் மோடி சிரித்து பேசினார். இந்த நிலையில் பாஜக சார்பில் சரத்குமாருக்கு ஏதேனும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
சரத்குமார் போட்டியில் இல்லை: ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது. ராதிகாவை ஏன் விருதுநகரில் போட்டியிட வைக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. நடிகையான ராதிகா சரத்குமார் தனது கணவரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் பணியாற்றியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தொகுதியிலேயே சரத்குமாரும் ராதிகாவும் இரு தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது போல் போட்டியிடவில்லை.
ராதிகா திட்டம்: நடிகை, சீரியல் நடிகை, சீரியல் தயாரிப்பாளர், ராடன் மீடியா நிறுவனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் ராதிகா. இவர் மக்கள் மத்தியில் பிரபலம், இவர் தயாரித்த சித்தி, அண்ணாமலை உள்ளிட்ட சீரியல்களை மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். எனவே பெண்கள் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்று நம்புகிறார். சரத்குமார் சார்ந்த நாடார் சமூகத்தினர் விருதுநகர் மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர். இதனால் விருதுநகரில் ராதிகாவின் பிரபலம் + நாடார் ஓட்டுக்களை வைத்து எளிதில் வெல்லலாம் என பாஜக கணக்கு போட்டுள்ளது.
விருதுநகர் ஜாதி அரசியல்: இன்னொரு ஜாதிக் கணக்கும் உள்ளது. ராதிகா கணவர் நாடார் என்றபோதிலும், ராதிகா பிறப்பால், நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். விருதுநகரில் நாடார்களை போல் நாயுடு சமூகத்தினரும் அதிகம் வசித்து வருகிறார்கள். எனவே தாம் போட்டியிட்டால் நாடார் சமூக ஓட்டு மட்டும் கிடைக்கும். ஆனால் தம் மனைவி ராதிகா போட்டியிட்டால் நாடார் சமூக வாக்குகளுடன் சேர்த்து நாயுடு சமூக வாக்குகளையும் அறுவடை செய்ய முடியும் என்பது சரத்குமாரின் கணக்கு என்று கூறப்படுகிறது.
ராதிகாவுக்கு சவால்கள்: விருதுநகர், கர்மவீரர் காமராஜரின் சொந்த மண். எனவே இயல்பாகவே நாடார்களில் பெரும்பகுதியினர் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். சரத்குமாரின் சமக போன்ற சிறு சிறு நாடார் கட்சிகள் தொடங்கப்பட்டபோது கணிசமான நாடார்கள் அந்த கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்தனர். நன்கொடை கேட்டபோதெல்லாம் வியாபாரிகள் நன்கொடை கொடுத்தனர். ஆனால் நள்ளிரவு 2 மணிக்கு சரத்குமார், தனது மனைவியை எழுப்பி, முடிவெடுத்து, சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் ஐக்கியமானதை அவர்கள் ரசிக்கவில்லை. இத்தனை நாட்களாக நிதி உதவி உட்பட பல்வேறு வகையில் ஓடி ஓடி உழைத்த தங்கள் சமுதாய மக்களை கிள்ளுக்கீரையாக நினைத்து விட்டார் சரத்குமார் என்ற கோபம் நாடார்களில் கணிசமானோருக்கு உள்ளதாம். இந்த கோபம் ராதிகா சரத்குமாருக்கு எதிராக திரும்ப கூடும். காங்கிரஸ் அல்லது தேமுதிக வேட்பாளருக்கு கூட ஓட்டு போடுவார்களே தவிர, ராதிகா சரத்குமாருக்கு நாடார் ஓட்டுகள் கிடைக்கும் என்பது கஷ்டம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் நாயுடு ஓட்டு, அதே சமூகத்தைச் சேர்ந்த, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனால் பிரிக்கப்படுவதால் ராதிகா சரத்குமாருக்கு கடும் சவால் காத்துள்ளது. எனவே இங்கு ராதிகா சரத்குமார் மூன்றாவது இடம் தான் பிடிக்க முடியும் என்பது உள்ளூர் மூத்த பத்திரிகையாளர்கள் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications