ரஜினியே காலில் விழுறாரே.. யோகிக்கு அப்படி என்ன பவர்? உபி முதலமைச்சர் ஆதித்யநாத்தின் மறுபக்கம் இதோ
சென்னை: வயது குறைவாக இருந்தாலும் யோகி, சன்னியாசிகள் காலில் விழுவேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கும் நிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் மறுபக்கம் என்னவென்று பார்ப்போம்.
"வயது குறைந்தவர்களாக இருந்தாலும், யோகிகள், சன்னியாசிகளின் காலில் விழுவது தான் என்னுடைய பழக்கம். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை நட்பு ரீதியாக மட்டுமே நான் சந்தித்து பேசினேன்."
உத்தரப்பிரதேசத்தில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதில். இந்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்ப காரணம் என்னவென்று தமிழ்நாட்டுக்கே தெரியும். உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் ரஜினிகாந்த் செய்த சம்பவம் அப்படி.

பல ஆண்டுகளுக்கு பிறகு ஜெயிலர் என்ற வெற்றிப்படத்தை கொடுத்து இருக்கும் ரஜினிகாந்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாட தமிழ் ரசிகர்கள் தயாராக இருந்த நிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் அவர் விழுந்தது ஜெயிலர் படத்தை விட சமூக வலைதளங்களில் அதிகம் டிரெண்டானது.
ஜெயிலர் படம் ரிலீசாவதற்கு முன் இமயமலை சென்ற அவர், அந்த பயணத்தை முடித்துக்கொண்டு ஜார்க்கண்ட் சென்றார். அம்மாநில தலைநகர் ராஞ்சி சென்று அங்கு ஆளுநராக உள்ள தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்தார். அதை தொடர்ந்து ஜார்க்கண்டில் உள்ள புனித தளங்களில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
அதை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்துக்கு சென்றார் ரஜினிகாந்த் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படம் பார்க்கப்போவதாக தெரிவித்தார். ஆனால், யோகி ஆதித்யநாத் படம் பார்க்க விரும்பவில்லை. உபி துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா ரஜினிகாந்துடன் திரைப்படம் பார்க்க வந்தார். ஆனால், அவரும் பாதியிலேயே புறப்பட்டு சென்றார்.
இதன் மூலம் ரஜினி அவமதிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், யோகி ஆதித்யநாத் வீட்டுக்கே தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் சென்ற அவர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். பா.ரஞ்சித் இயக்கி ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் வில்லன் காலில் விழாமல் நடித்ததுடன், காலில் விழ வரும் சிறுமியிடமும் யார் காலிலும் விழக் கூடாது என டயலாக் பேசி இருப்பார்.
ஒருமுறை தன்னுடைய ரசிகர்களிடமும் தாய், தந்தை, கடவுளை தவிர வேறு யார் காலில் விழக்கூடாது என அறிவுரை சொன்ன ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் ஏன் விழுந்தார்? என்ற கேள்வி எழுந்தது. அதற்குதான் இன்று அவரே பதிலளித்து இருக்கிறார். 72 வயதை தாண்டிய நடிகர் ரஜினிகாந்த், தன்னை விட 21 வயது குறைவான 52 வயதான, யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது அவர் சன்னியாசி என்பதால்தான்.
யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சராகவும், அரசியல்வாதியாகவுமே பிற மாநில மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், உத்தரப்பிரதேச மக்கள் மத்தியில் அவர் முதலமைச்சர் மட்டுமல்ல. யோகியாகவும், சன்னியாசியாகவும், மத குருவாகவும் அவரை பார்க்கிறார்கள். இந்து மத துறவியாகவே அவர் பார்க்கப்பட்டு வருகிறார்.
தன்னுடைய இளம் வயதிலேயே உத்தரப்பிரதேசத்தின் செல்வாக்கு மிகுந்த கோரக்நாத் மடத்தில் யோகி ஆதித்யநாத் இணைந்தார். ஒரு கட்டத்தில் அந்த மடத்தின் தலைமை மடாதிபதியாக உயர்ந்தார். எனவே அவரது காலில் வயது வித்தியாசம் இன்றி மக்கள் விழுகிறார்கள். அந்த வகையிலேயே ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து இருக்கிறார் என அவரே சொல்லிவிட்டார்.












Click it and Unblock the Notifications