பாஜகவுக்கு எவ்ளோ வேலை இருக்கு.. ரவுடிகளை சேர்த்து திருத்தி வாழவைக்க டைம் இருக்குமா.. மக்கள் சந்தேகம்
தமிழக பாஜகவில் ரவுடிகள் இணைந்து வருவது மக்களுக்கு ஆச்சரியத்தை அளித்து வருகிறது
சென்னை: "என்னாது, ரவுடிகள் திருந்துவதற்காக பாஜகவில் இணைகிறார்களா? இருக்கிற பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிட்டு, ரவுடிகளை திருத்துவதுதான் பாஜகவின் வேலையா" என்று பொதுமக்கள் சலசலக்கிறார்கள்.
தமிழக பாஜகவினரில் ஒருசிலர் கட்டுக்கோப்புடன் இல்லை.. இவர்கள் ஆங்காங்கே வன்முறையிலும், பாலியல் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
தலைவரா முருகனை நியமிச்சதுமே, மாற்று கட்சி முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலரையும், கட்சியில் சேர்த்து வருகிறார்.. அப்போதே வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடிகள் 2 பேர், பாஜகவில் சேர்ந்துவிட்டனர்.. இதே போல, ஸ்ரீபெரும்புதுார் பகுதியை சேர்ந்த ரவுடி ஒருத்தரும், இணைந்தார்.. அவர்மீது 5 கொலை கேஸ் இருக்கிறதாம்.

இளைஞரணி
கடந்த வாரம்கூட 6 ரவுடிகள் கையில் அரிவாளுடன் கட்சியில் சேர வந்திருக்கிறார்கள்.. சேலம் ரவுடி முரளிக்கு கட்சியின் இளைஞரணி பதவி தரப்பட்டுள்ளது.. கல்வெட்டு ரவி என்ற ரவுடி கட்சியில் இணைந்துள்ளார். மறுபக்கம் முன்னாள் போலீஸ்காரர்களும் இக்கட்சியில் சேருகிறார்கள். அதாவது அண்ணாமலா என்ற கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி விட்டு அதை உதறி விட்டு வந்த ஒருவரை கட்சியில் சேர்த்து மாநில அளவில் பதவியும் கூட கொடுத்தார்கள்.

நடவடிக்கை
இந்நிலையில், "ரவுடிகள் ஏன் பாஜகவில் இணைகிறார்கள் என்று ஒரு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில்,"ரவுடிகளின் பின்னணி பற்றி விசாரித்தே கட்சியில் இணைக்கிறோம்.. அவர்கள் திருந்தி வாழ விரும்புகிறார்கள்.. கட்சியில் இணைந்த பிறகு அவர்களது நடவடிக்கை எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டும்" என்று எல்.முருகன் சொல்கிறார்.

சலசலப்பு
இந்த பேச்சுதான் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.. ரவுடிகள் திருந்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நினைப்பது சரியே.. அவர்கள் நல்வாழ்வுக்கு ஆசைப்படுவதும் அவரது நல்ல உள்ளத்தை காட்டுகிறது! ஆனால் இதே நல்ல உள்ளம், பிரதமர் கேர் நிதி, பேரிடர் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கி தரும் முயற்சியில் தமிழக பாஜக ஏன் இறங்கவில்லை? நீட் தேர்வுக்கு பிள்ளைகள் இங்கே தவித்து கிடக்கும்போது, அது சம்பந்தமான அழுத்தத்தையும் மத்திய அரசுக்கு ஏன் எடுத்து சொல்லவில்லை?

முருகன்
எந்த திட்டங்களும் நன்மைகளும் இதுவரை பெற்று தரவில்லையே ஏன்? என்ற கேள்விகளும் எழுகின்றன. அதுமட்டுமல்ல, எரிபொருள் சுங்ககட்டண உயர்வு மக்களை நெருக்கி தள்ளுகிறது. ஆனால், திடீரென பாஜக வளர்ந்துள்ளது என்று முருகன் சொல்லி வருகிறார்.. இதைதவிர, "நாங்க சும்மா தனியா நின்னாலே.. 60 சீட் கிடைக்குமே" என்று பீதியை வேறு கிளப்புகிறார்.

வருங்காலம்
"வருங்காலம் பாஜகவின் காலம்... சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபையில் பாஜக உறுப்பினர்களும் கணிசமான அளவில் இருப்பர்" என்று சொல்லும் முருகன், ரவுடிகளை வைத்து கொண்டு என்ன செய்ய போகிறார்? இவர்களை திருத்துவதுதான் இவர் வேலையா? ஒருவேளை இந்த கொலைகார ரவுடிகள் திருந்தாமல் போய்விட்டால் என்ன செய்வது? அதற்குள் கட்சியின் கட்டுக்கோப்பு என்னாவது? என்ற கவலையும் எழுந்துள்ளது.

ரவுடிகள்
பாஜகவில் ரவுடிகள் இணையும் பட்டியல் கூடிக்கொண்டே போவது பெரும் புகைச்சலை தந்து வருகிறது.. இவர்கள் ரவுடிகள் அனைவரும் தங்கள் வழக்கு விசாரணையில் இருந்து தப்பித்து கொள்வதற்காக இப்படி கட்சிக்குள் இணைந்து வருகிறார்களா? அல்லது கட்சிக்கு இவ்வளவு பேரை சேர்த்துள்ளோம் என்பதை கணக்கு காட்ட இவர்களை எல்லாம் இணைத்து வருகிறார்களா? என்று தெரியவில்லை.

நிர்வாகிகள்
ரவுடிகள் திருந்தி வாழ ஆசைப்படுவதாக இருந்தால், ஒரு கட்சியில்தான் இணைய வேண்டுமா? அதுவும் பாஜகவில்தான் இணைய வேண்டுமா? இதுவரை வரலாற்றில் நடக்காத அதிசயமாக இருக்கிறதே என்ற முணுமுணுப்புகளும் கேட்கின்றன.. இந்த கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டவர்களுக்கு கட்சியின் கொள்கை தெரியுமா? கோட்பாடு தெரியுமா? கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? என்றெல்லாம் குழப்பமாக இருக்கிறது.
"வருங்காலம் பாஜகவின் காலம்" என்று முருகன் சொல்லும்போதெல்லாம் குபீர் குபீர் என்றும் அடிமனசில் எண்ணம் தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications