எடப்பாடிக்கு நேரம் கொடுக்காத பிரதமர்? நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் மீண்டும் சந்திப்பு!
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இரண்டாவது முறையாக சந்தித்து பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஒரு கல்லூரி விழாவுக்காக வருகை தந்த நிர்மலா சீதாராமன் கிண்டி ஐடிசி சோழா ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அவரை நேற்று செங்கோட்டையன் சந்தித்து பேசியுள்ளார்.

இவரை போல் பாஜக மூத்த நிர்வாகிகளும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சந்தித்து பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன்
செங்கோட்டையனை பொருத்தமட்டில் அவர் ஏற்கெனவே டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவர் சந்தித்து பேசியுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக கூட்டணி
அதாவது அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காகத்தான் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அதிமுக அலுவலகத்திற்கு செல்வதாக கூறிவிட்டு டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்.
அமித்ஷா ட்வீட்
இதைத் தொடர்ந்து கூட்டணி அமையும் என்பதை போல் அமித்ஷா ஒரு ட்வீட்டை தமிழில் போட்டிருந்தார். அதற்கேற்ப அதிமுகவின் எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்து வந்ததால்தான் அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது.
பாஜக தலைவர் அண்ணாமலை
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது சுமூகமாக இருக்காது என்றும், இதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், இது தேர்தலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அதிமுக தலைமை கருதியது.
பாஜக தலைவர் பதவியில் மாற்றம்
இதையடுத்து அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கூறியதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் தற்போது தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் இருப்பதாக அண்ணாமலையே சொல்லிவிட்டார்.
2026 இல் ஆட்சி
விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார். அவர் அதிமுகவுடன் சுமூக உறவை ஏற்படுத்தும் அளவுக்கு இருப்பார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஒன்றிணைந்த அதிமுக இருந்தால்தான் வரும் 2026 ஆம் ஆண்டு ஆட்சி அமைக்க முடியும் என பாஜக கருதுகிறது.
எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய பாஜக தலைமை
இதற்காக எடப்பாடி பழனிசாமியிடம் டெல்லி பாஜக தலைமை பேசிய போது டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை இணைத்து கொள்ள முடியாது என கூறிவிட்டதாக தெரிகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையை சில நிர்வாகிகள் விரும்பவில்லை என தெரிகிறது.
செங்கோட்டையன் தான் சரி
இதனால் செங்கோட்டையனை அதிமுக பொதுச் செயலாளராக்க வேண்டும் என்ற எண்ணமும் மற்ற நிர்வாகிகளுக்கு இருக்கிறது. அது போல் செங்கோட்டையன் எல்லோரையும் அரவணைத்து செல்வார், அதிர்ந்து கூட பேச மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே!
ஏன் சந்திப்பு
எனவே ஒன்றிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ளாத நிலையில் செங்கோட்டையனை வைத்து பாஜக காய் நகர்த்துவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் நேரம் கேட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பிரதமர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை. அது போல் பாஜக நிர்வாகிகள் சந்திப்பிலும் தமிழக பாஜக தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications