தமிழிசை.. கிருஷ்ணசாமி.. பிரேமலதா கவனத்துக்கு.. உங்களுக்கு ஓட்டு போடாததால் தமிழர்கள் கஷ்டப்படணுமா!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழிசை, பிரேமலதா, கிருஷ்ணசாமி வெற்றி பெறதா விரக்தியில் பேசும் சொற்கள் தமிழக மக்களை பயமுறுத்தும் வண்ணம் இருக்கிறது.
பாஜகவுக்கு ஓட்டுப் போடாத காரணத்தால், மத்திய அரசின் திட்டங்கள் கிடைக்காது என்ற ரீதியில் மிரட்டுவதாக பொருள்படுகிறது அவர்களது பேச்சுக்கள்.
ஆனால் மத்தியில் ஆளும் பாஜக, அந்த கட்சியின் சொந்த பணத்தையோ அல்லது பிரதமர் மோடி தனது சொந்த பணத்தையோ எடுத்து தமிழக மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்தவில்லை. எல்லாம் தமிழக மக்கள் ஜிஎஸ்டி, கலால், வருமான வரி உள்ளிட்ட வரிப்பணம் தான் என்பதை இந்த தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

வருத்தப்படுவீர்கள்
தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு, திமுகவைச் சேர்ந்த கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதன்பின்னர் அன்றைக்கு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ஏன் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்று உணருவார்கள் என்கிறார். அப்படி என்றால் தமிழகர்கள் பாஜகவுக்கு வாக்களிக்ததால் வருத்தப்படுவார்கள் என்கிறாரா தமிழிசை?

இதனால் என்ன பலன்
இதேபோல் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக வெற்றி பெற்றாலும் எதிரணியில் உள்ளது. இதனால் மக்களுக்கு என்ன பலம் அளிக்கும் என்றார். தமிழகம் தனியாக இருந்தால் நிச்சயமாக தமிழகத்துக்கு அங்கீகாரம் இல்லாமல் போய்விடும் என்கிறார்.

பிற்போக்குத்தனம்
இதேபோல் தான் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிட்டு திமுகவிடம் தோல்வி அடைந்தார். அவர் பேசுகையில், இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்தும் விதமாக தமிழக மக்கள் தொடர்நது பிற்போக்குத்தனமாக வாக்களித்து இருப்பதாக விமர்சித்துள்ளார்.

மோடியின் பணம் அல்ல
இந்த 3 தலைவர்களின் பேச்சுக்களையும் சற்று உற்று கவனித்து பார்த்தால், இந்தியாவே மோடிக்கு வாக்களித்த போது தமிழகம் வாக்களிக்காததை விமர்சித்துள்ளார்கள். தமிழகம் தனித்துவிடப்பட்டுள்ளதாக பேசுகிறார்கள். அவர்கள் 3 பேரும் ஒருவிஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.மத்தியில் ஆட்சிக்கு மீண்டும் வந்துள்ள பாரதிய ஜனதா தனது சொந்த பணத்தை எடுத்து தமிழகத்துக்கு செலவு செய்யப்போவதில்லை. பிரதமர் மோடி தனது கைகாசை போட்டு தமிழக திட்டங்களை நிறைவேற்றுவதில்லை

பல ஆயிரம் கோடி பணம்
எல்லாம் தமிழக மக்கள் அளிக்கும் வரிப்பணம். இந்தியாவே ஜிஎஸ்டி வரியை ஏற்றுக்கொண்ட போது, தமிழகம் மட்டும் கடுமையாக எதிர்த்தது ஏன் தெரியுமா? இந்தியாவில் மிக அதிகமாக வரிசெலுத்தும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள மாநிலம் என்றால் அது தமிழகம் தான். பல ஆயிரம் கோடியை வரியாக செலுத்திவருகிறது. இந்த பணத்தை வைத்து தான் தமிழகம் மட்டுமல்ல பல மாநில எம்பிக்களுக்கு சம்பளம் உள்பட பல்வேறு சலுகைகள் தரப்படுகிறது.இந்தியாவில் தற்போது ஜிஎஸ்டி அமலுக்கு வந்துவிட்டது. இப்போதும் தமிழகம் தான் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக வரிகளை கொடுத்து வருகிறது.

மத்திய அரசு அப்படி செய்யாது
இதுமட்டுமல்ல வருமானவரி உள்பட பல்வேறு வரிகளை அதிக அளவு தமிழக மக்கள் கொடுத்து வருகிறார்கள். எனவே மக்களுக்கு நிறைவேற்றப்படும் திட்டங்கள் எதுவும் வாக்களித்த மக்கள், வாக்காளிக்காத மக்கள் என பார்த்து பார்த்து நிறைவேற்ற முடியாது. அப்படி நிறைவேற்றவும் கூடாது. மத்தியில் வந்துள்ள மோடி அரசும் அப்படி செய்ய வாய்ப்பே இல்லை. எனவே தமிழக மக்கள் வாக்களிக்காத விரக்தியில் பேசக்கூடாத வார்த்தைகளை பேசுவது அவர்கள் மீதான அதிருப்தியை அதிகரிக்கவே செய்யும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications