80 ஆண்டு கால கனவு பாதை! தருமபுரி- மொரப்பூர் ரயில் இணைப்பு திட்டம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
சென்னை: 80 ஆண்டு கால கனவு பாதையான தருமபுரி- மொரப்பூர் இடையேயான இணைப்புத் திட்டம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த திட்டம் எதனால் தள்ளி போகிறது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து தமிழ்நாடு ரயில் செய்திகள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 80 ஆண்டு காலக் கனவு.. நிறைவேற 'நியூ' டைம் டேபிள்! #தருமபுரி - #மொரப்பூர் ரயில் பாதை எப்போது முடியும்?

வரலாற்றுச் சிறப்புமிக்க தருமபுரி மக்களின் 80 ஆண்டு காலக் கனவுப் பாதையான தருமபுரி - மொரப்பூர் இடையேயான ரயில் இணைப்புத் திட்டம், நிலம் கையகப்படுத்தும் சிக்கல்களால் மேலும் தள்ளிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பாதை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு, ஒட்டுமொத்தக் கொங்கு மண்டலத்திலும் எழுந்துள்ளது!
கனவுப் பாதை: ஆங்கிலேயர் காலத்தில் இருந்த இந்த 36 கி.மீட்டர் நீளமுள்ள மீட்டர் கேஜ் பாதை, இரண்டாம் உலகப் போரின்போது முற்றிலும் நிறுத்தப்பட்டது.
பொருளாதார வளர்ச்சி: சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களை ஒட்டியிருந்தாலும், இந்த இணைப்பு இல்லாததால் தருமபுரி மக்கள் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் சேவைகளில் பெரும் பலன் அடைய முடியவில்லை. இந்தத் திட்டம் நிறைவேறினால், தொழில் வளர்ச்சி அதிகரிக்கும், விவசாய விளைபொருட்களை ஏற்றிச் செல்ல வசதி கிடைக்கும்.
திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?
இந்த அகல ரயில் பாதை திட்டம் 2016-17ஆம் ஆண்டிலேயே ₹358.95 கோடி நிதி ஒதுக்கீட்டில் அங்கீகரிக்கப்பட்டது.
சிக்கல்: அடிக்கல் நாட்டப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும், பணி இன்னும் நிலம் கையகப்படுத்தும் நிலையிலேயே உள்ளது. பழைய ரயில் பாதைகள் பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்படாததால், அவை இப்போது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புப் பகுதிகளாகவும் மாறியுள்ளன.
நிலத் தேவை: மொத்தமாக, 134 ஏக்கர் தனியார் நிலங்களைக் கையகப்படுத்துவதில் மூக்கனூர், செட்டிக்கரை போன்ற பகுதிகளில் சிக்கல்கள் நீடிக்கின்றன. இதன் காரணமாக, ரயில்வே நிர்வாகம் மாற்று வழித்தடங்கள் குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய காலக்கெடு: 2028-ஐ தாண்டும்!
ஆரம்பத்தில் 2023-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த முக்கியத் திட்டம், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
தற்போதுள்ள தகவலின்படி, தருமபுரி - மொரப்பூர் இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2028-ஆம் ஆண்டுக்குப் பின்னரே நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் எதிர்பார்ப்பு: தென் மாநிலப் போக்குவரத்திற்குப் பெரும் பயனளிக்கக்கூடிய இந்தத் திட்டத்தை விரைவுபடுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நிலம் கையகப்படுத்தும் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதே தருமபுரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications