"ஆபத்து".. மீண்டும் தொற்று.. மீண்டும் லாக்டவுன்.. சுழட்டி விரட்டி அடிக்கும் கொரோனா.. என்ன காரணம்..?
கொரோனா தொற்று மீண்டும் பரவ என்ன காரணம்
சென்னை: கொரோனா வைரஸ் 2வது அலை மீண்டும் ஏன் தலைதூக்கி உள்ளது? இதற்கு என்ன காரணம் என்று தினந்தோறும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மொத்த உலகமும் தொற்றில் சிக்கி உள்ள நிலையில், தடுப்பூசி மட்டுமே மிகுந்த நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது..
எனினும், ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய தன்னை தானே தகவமைத்துக் கொண்ட இன்னொரு புதிய வைரஸ் பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்படவும்தான் பீதி மறுபடியும் பற்றி கொண்டது.

புது வைரஸ்
உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால்தான், இந்த 2வது அலை வேகமாக பரவி வருகிறது.. வேரியண்ட்டுகளுடன் தொடர்பில்லாத, மரபியல் ரீதியாக மாற்றம் பெற்ற கொரோனா தொற்றானது, இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது. இதற்கு Double Mutant Variant என்றும் பெயர் சூட்டி உள்ளது.

புதிய தொற்று
உருமாற்றம் அடைந்த அந்த 2வது அலைக்கும், இந்த புதிய தொற்றுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்றும் ஆராய்ச்சிகள் ஒரு பக்கமும் நடந்து கொண்டிருக்கின்றன. எனினும், தினமும் 1000 பேர் பாதிப்பு என்ற ரீதியில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தொற்று பரவி உள்ளது.. இந்த 2வது அலை என்பதை அசால்ட்டாக விட்டுவிட முடியாது..

பிரதீப்ஜான்
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதீப் ஜான் ஒரு ட்வீட் போட்டிருந்தார். "இந்தியாவில் விரைவில், ஒரு நாளைக்கு 1,50,000 முதல் 2,00,000 கொரோனா பாதிப்புகள் இருந்தால் ஆச்சரியப்பட வேண்டாம்... 1918ம் ஆண்டில் ஏற்பட்ட தொற்றுநோயாக இருந்தாலும் சரி, அல்லது பிரேசிலில் சமீபத்திய 2வது அலையாக இருந்தாலும் சரி... 2வது அலைகள் எப்போதும் ஆபத்தானதாகவே இருந்துள்ளது. இதற்கு காரணம் சமூக விலகலை மக்கள் புறக்கணிப்பதே. எனவே கவனமாக இல்லாவிட்டால் ஆபத்து" என்று கூறியிருந்தார்.

காரணங்கள்
இப்போது, மீண்டும் கொரோனா.. மீண்டும் லாக்டவுன் என அடுத்தடுத்த தீவிரம் நாட்டை கவ்வி உள்ளது.. பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டும், அதையொட்டி தளர்வுகள் ஏற்படுத்தியும்கூட, ஏன் தொற்று அதிகமாகி உள்ளது? இதற்கு என்ன காரணம் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. 6 மாதத்துக்கு முன்பே, மக்கள் கொரோனா ஒழிந்துவிட்டது என்று கருதிவிட்டனர்.. இதுதான் முதல் காரணமாக சொல்லப்படுகிறது..

பிரசாரங்கள்
கொரோனா தீவிரம் இருக்கும்போதே, பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் இருந்தனர்.. முறையான சோஷியல் டிஸ்டன்ஸும் இல்லை.. இந்த தேர்தல் சமயத்தில்தான் பிரசாரங்கள் சாதாரணமாக நடக்க ஆரம்பித்துவிட்டன.. சுகாதாரத்துறையினர் வழக்கம்போல அறிவுறுத்தல்களை சொல்லி கொண்டிருந்தாலும், மக்கள் எதையும் காதில் வாங்கவில்லை.. 5 மாநிலங்களில் தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டனர். இவை எல்லாம் சேர்ந்துதான் 2வது அலைக்கு காரணமாகி விட்டதாக கூறப்படுகிறது.

தொண்டர்கள்
பிரசார சமயங்களில் மக்கள் நெருக்கி தள்ளும்போதுகூட தொண்டர்கள் மாஸ்க் அணியவில்லை.. இதில் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. 4 மாநிலங்களில் தேர்தல் முடிந்த பிறகுதான், அபாயத்தை உணர்ந்து தேர்தல் ஆணையம் எச்சரிக்கையே விடுத்தது.. வேட்பாளர்கள் மாஸ்க் அணிய வேண்டும், அப்படி விதிகளை யாரும் கடைப்பிடிக்காவிட்டால், அந்த பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் கடிவாளம் போடப்பட்டது. ஆனால் அதற்குள் தொற்று வேகம் எடுத்துவிட்டது என்கிறார்கள்.

எச்சரிக்கை
இப்போது, மறுபடியும் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.. இதையாவது சீரியஸ்தன்மையுடன் அணுக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.. காரணம், 6 மாதத்துக்குள் இந்த வைரஸ் மனித உடலில் உள்ள அனைத்து சக்தியும் அரித்து கொல்லக்கூடியது என்பதால், இதன் தாக்கம் இப்போது தெரியாது.. அதேசமயம், பெரும்பாலான அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தினந்தோறும் இந்த தொற்றுக்கு ஆளாகி வருவதையும் ஒரு எச்சரிக்கையாகவே மக்கள் எடுத்து கொள்ள வேண்டி உள்ளது. அத்துடன் வெதர்மேன் கூறிய "ஆபத்து" என்ற வார்த்தையையும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டி உள்ளது.












Click it and Unblock the Notifications